tamilnadu

img

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

மதுரை, ஜன.10- மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கடந்தாண்டு போல்  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில்   வழக்கறிஞர்களைக் கொண்ட குழு நடத்துவது குறித்து உரிய உத்தரவு  பிறப்பிக்கபடும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம்  உட்பட பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,” அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த பத்தாண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவ ராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை.  இந்த நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டை நடத்த உத்தரவிட வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு முன்பு வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிபதிகள்,  கடந்தாண்டைப் போல ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் நீதிமன்றமே குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கருத்து தெரிவித்து இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

;