tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்பு

பெருந்திரள் போராட்ட அறிவிப்பு எதிரொலி

சென்னை, பிப். 28- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை அடுத்த தரமணியில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (பிப். 28) பெருந்திரள் முறையீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு செயலாளர் மதுமதி, திட்ட இயக்குநர் கவிதா ராமு மற்றும் இணை இயக்குநர்கள், சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசினர். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும், ஜி.பி.எப். பிடித்தம் செய்யப்பட்டவர்கள், ஓய்வுபெற்றவர்கள், பதவி உயர்வில் சென்றவர்களுக்கு உடனடியாக பணம் திரும்பி வழங்கப்படும், சிலிண்டருக்கான தொகை முழுமையாக வழங்குவதாகவும், அதற்குரிய முன் பணத்தை வங்கியில் போடுவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மே மாத கோடை விடுமுறை ஊழியர்களுக்கு, உதவியாளர்களுக்கு 15 நாட்கள் வழங்கப்படும். ஊழியர், உதவியாளர்களுக்கு பிரசவகால விடுப்பு 9 மாதம் வழங்கப்படும். உருளைக் கிழங்கு, பண்டிகை உணவு, சிறப்பு உணவு ஆகியவற்றிற்குக் கூடுதல் தொகை வழங்கப்படும். தற்போதைய அரசாணைப்படி 10 வருடம் பணி முடித்தவர்களுக்கு அங்கன்வாடி ஊழியராகப் பதவி உயர்வு வழங்கப்படும். சீருடை வருடாவருடம் வழங்கப்படுவதுடன் ஜாக்கெட் தைப்பதற்கான கூலி வழங்கப்படும். சீருடை சலவைப்படி வழங்கப்படும். வாடகை மையங்களுக்கு மாதாமாதம் நிர்ணயிக்கப்பட்ட வாடகை வழங்கப்படும். 21 மாடுல்ஸ் முடிந்த பிறகு 1 பதிவேடு பராமரித்தால் போதும் என கோரிக்கைகள், பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும் 5 வருடம் பணி முடித்த 10ஆம் வகுப்பு முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், மினி மையங்களிலிருந்து பொது மையங்களுக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பெருந்திரள் முறையீடு என்பது விளக்கக் கூட்டமாகச் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்னமாலா தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், துணைத் தலைவர் கே.சி.கோபிகுமார், சங்கத்தின் மாநிலப் பொதுச்  செயலாளர் டி.டெய்சி ஆகியோர் பேசினர். பொருளாளர் எஸ்.தேவமணி நன்றி கூறினார். இதில் மாநில துணைத் தலைவர்கள் எம்.பாக்கியம், பி.சாரதாபாய், டி.டி.ஜெயலட்சுமி, ஆர்.லட்சுமி, கே.கோவிந்தம்மாள், என்.மணிமாலை, மாநிலச் செயலாளர்கள் பி.சித்ரா தேவி, டி.சரஸ்வதி, எம்.லில்லிபுஷ்பம், வி.தவமணி, எம்.நாகலட்சுமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.