சென்னை, மார்ச் 21- தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக சட்டசபையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.