1792 - ஜப்பானில் ஒரு ‘லாவா (எரிமலைக் குழம்பு) குன்று’ சரிந்து விழுந்ததில், பெரும்சுனாமி(மெகா-சுனாமி) ஏற்பட்டு, சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஜப்பான் வரலாற்றி லேயே மிகப்பெரிய எரிமலைப் பேரழிவான இதன் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாகசாகிக்குக் கிழக்கேயுள்ள ஷிம்பாரா தீபகற்பத்திலுள்ள, உன்ஸென் மலையில் இது நிகழ்ந்தது. உண்மையில் பல எரிமலைகள், லாவா உறைந்த பாறைக்குன்றுகள் ஆகியவற்றின் தொகுப்பே இம்மலை. எரிமலைகள் வெடிக்கும்போது, வெளியேறும் லாவா வழிந்தோட முடியாமல் தடுப்புகள் இருக்குமிடங்களில், எரிமலையின் பகுதிகளிலேயே, கவிழ்த்த அரைக்கோள வடிவில் உறைந்துவிடுவது லாவா குன்று என்றழைக்கப்படுகிறது. உலகில் வெடிக்கும் எரிமலைகளில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு, இவ்வாறு லாவா குன்றுகளை ஏற்படுத்துகின்றன. இக்குன்றுகள், மேலும் எரிமலை வெடிக்கும்போது வளர்தல், எடை தாங்காமல் சரிதல், தொடர்ந்து லாவா வெளியேறாத சூழ்நிலைகளில் கெட்டிப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகிய மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. உலகின் பல பகுதிகளிலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இத்தகைய குன்றுகள்கூட இன்றும் அப்படியே உள்ளன. உதாரணமாக, அமெரிக்காவின் நியூமெக்சிக்கோவில் உள்ள ஜெமஸ் மலைகளில், சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இத்தகைய குன்றுகள் உள்ளன. ஜப்பானில் சரிந்து விழுந்த இக்குன்றுகூட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகும்.
1792 பிப்ரவரியில் வெடிக்கத் தொடங்கிய இந்த எரிமலை, இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. மே 21 இரவில் ஏற்பட்ட ஒரு பெரும் எரிமலை வெடிப்பு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகியவற்றால் சரிந்த இக்குன்று, ஷிம்பாரா நகரின்மீது மிகப்பெரிய நிலச்சரிவை ஏற்படுத்தியபின், ஆரியேக் கடற்பகுதியில் விழுந்ததில் 180 அடி உயரம்வரை அலைகள் எழுந்த பெரும்சுனாமியும் ஏற்பட்டு, 14,524 பேர் உயிரிழந்தனர். பாறை விழுந்ததில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் நிலத்தடி நீர் வெளிப்பட்டு, இன்று 650 அடி நீளம், 220 அடி அகலம் கொண்ட ஷிராச்சி ஏரியாக உள்ளது. இப்பகுதியிலுள்ள 99 தீவுக்கூட்டங்கள் என்பதும், அதைத் தவிர மேலும் 99 தீவுகளும் பாதிப்புக்குள்ளாகின. இந்தப் பேரழிவின் நினைவாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 208 நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1792க்குப்பின் அமைதியாக இருந்த எந்த எரிமலை 1990இல் மீண்டும் வெடித்தபோது, 43 பேர் பலியாயினர்.
- அறிவுக்கடல்