tamilnadu

img

புதிய புரட்சிகளின் கருத்துக் கூடம், நவம்பர் புரட்சி....

ரஷ்யப் புரட்சி வரலாற்றில் 1917-பிப்ரவரியிலிருந்து,லெனின் தலைமையிலான அரசு அமைந்த நவம்பர் வரையிலான காலம்,மானுட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த காலம்.இது,மானுட மீட்சிக்கான எழுச்சி தீவிரம் அடைந்த காலம். இந்த மாதங்களில் ஆதிக்கவர்க்கங்களின் அடிமைப்பிடியிலிருந்து மீள்வதற்கான  வர்க்கப் போராட்டம் உச்சத்தை எட்டியது.இந்தக் காலத்தில் நடந்த புரட்சிகர தத்துவத்திற்கான தத்துவப் போராட்டம் இன்றும் என்றும் ஆழமாக பயில வேண்டிய சிந்தனை பரப்பு. 
முதலாளித்துவ அறிவுலகம்,ரஷ்யப் புரட்சியை கொச்சைப்படுத்தியும்,இழிவுபடுத்தியும் வருகின்றனர். ‘இன்று வாழ்வாதாரத்திற்கு மக்கள் போராடும் போதெல்லாம்   புரட்சிப் பாதை நோக்கி  மக்கள் திரும்பி விடுவார்களோ  என்ற அச்சம் முதலாளித்துவத்திடம் எப்போதும் இருந்து வருகிறது.புதியஆவணங்களை கொண்ட புதிய நூல்’ என்று ஆரவாரமாக பல  ஆங்கில நூல்கள் இடைவிடாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை வீழ்த்தி  புதிய சமுதாயம் படைக்க போராடும் அனைவருக்கும்,ரஷ்யப் புரட்சி பரந்த அறிவுப் பெருங்கடலாகத் திகழ்கிறது.21-ஆம் நூற்றாண்டில் சோசலிச மாற்றத்தை ஏற்படுத்தும் இலட்சியம் கொண்டோர் அனைவருக்கும் புதிய தேடல்கள்,புதிய முயற்சிகளுக்கான படைப்பாற்றலை அது நமக்கு வழங்குகிறது. 

எது மக்கள் அரசு? 
ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சிக்கு பிறகு அமைந்த முதலாளித்துவ அரசு நீண்ட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என அன்று இருந்த மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட அரசியல் சக்திகள் விரும்பின.மக்கள் மத்தியிலும் கெரன்ஸ்கி தலைமையிலான அந்த அரசு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போது, லெனின் முன்வைத்த வாதங்கள் உயர்ந்த தத்துவார்த்த விவாதத்தை முன்னெடுத்தது. அரசு எப்போதும் அடக்குமுறை கருவியாகவே இருந்து வந்துள்ளது என்றும், முதலாளித்துவ அரசு, முதலாளி, நிலப்பிரபுத்துவ சிறு கூட்டத்தின் நலன்களை பாதுகாக்கும் என்றும்,பாட்டாளி வர்க்க அரசு அமைந்தால்தான் பெரும்பான்மை மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் லெனின் ஆணித்தரமாக வாதிட்டார். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று  அறைகூவல் விடுத்த “ஏப்ரல் கருத்துரைகள்” என்கிற சிறுநூல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “போல்ஷ்விக்குகளால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?” என்ற நூலில் தொழிலாளி - விவசாயி வர்க்க  கூட்டணி அரசுதான் மக்களின் அரசாக அமையும் என விளக்கினார். லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” உள்ளிட்ட பல நூல்களும் கட்டுரைகளும்  அரசு பற்றியஆழமான விளக்கங்கள் கொண்டவை.அவை இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டனவாகவும்  உள்ளன. 

முதலாளித்துவ ஜனநாயகம் 
 இந்தியா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஜனநாயகம் மிகவும் மேலானது என மக்கள் சிந்தனையில் நீண்டகாலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஜனநாயகம் எல்லைக்குட்பட்டது. வாக்குரிமை உள்ளிட்ட சில உரிமைகளை அது வழங்குகிறது.அதனைப் பாதுகாக்க மக்கள் போராடி வந்தாலும்  ஜனநாயகத்திற்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. அண்மையில்,வீ-டெம் நிறுவனம் உலக ஜனநாயக நிலைமைகள் பற்றி “ஜனநாயக அறிக்கை-2020”என்ற ஆய்வறிக்கையினை  வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் ஏற்கனவே இருந்தஜனநாயகத்தின் நிலை பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன்  அவர்கள் விளக்கியுள்ளனர். 
இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம், ஊடக சுதந்திர பறிப்பு, சிவில் சமூக உரிமைகள் மீதுதாக்குதல்,எதிர்க்கட்சிகளின் ஜனநாயக குரலை முறியடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்தியா ஜனநாயகத் தன்மையை இழந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

குடியுரிமை சட்ட திருத்தம், காஷ்மீரில் மனித உரிமைகள் பறிப்பு, அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை, தகுந்த காரணமின்றி சிறையில் அடைப்பது போன்ற பல நடவடிக்கைகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.இந்தியாவில் மட்டுமல்ல,முதலாளித்துவ சமூக முறை இயங்குகிற நாடுகள் அனைத்திலும் ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகிவந்துள்ளது.வலதுசாரி முதலாளித்துவ அரசுகள் ஜனநாயகத்தை  பறிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. பெரும்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாடு,மனித ஆற்றல், மனித வளர்ச்சி போன்றவை சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை.அரசில் பிரதமர்களாக, அமைச்சர்களாக வீற்றிருப்பவர்கள், உண்மையில் முதலாளித்துவ வர்க்கங்களின் சேவகர்களாகவே செயல்படுகின்றனர்.மக்களுக்குநன்மைகள் செய்வதாக அவர்கள் வார்த்தை விளையாட்டுக்கள் செய்தாலும், சுரண்டல் கொடுங்கோன்மையிலிருந்து மக்களால் மீள முடியவில்லை. மக்கள் போராடும்போது,ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க ஆளும் வர்க்கம் தயங்குவதில்லை. 

இதுவே, அன்று  ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியின் போதும், 1917-பிப்ரவரியில் நடந்த முதலாளித்துவ ஆட்சியின் போதும் நிகழ்ந்தது.போல்ஷ்விக்குகள் ஜாராட்சியை வீழ்த்த இதர சக்திகளோடு இணைந்து முதலாளித்துவ ஆட்சி அமைய உதவினர்.ஆனால்,முதலாளித்துவ ஆட்சி உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாதையில் சென்ற நிலையில் கெரன்ஸ்கி ஆட்சியை  போல்ஷ்விக்குகள் வீழ்த்தினர்.உழைக்கும் வர்க்கம் அரசு அதிகாரத்தினைக் கைப்பற்றினால் மட்டுமே உண்மையான விடுதலையும், ஜனநாயகமும் சாத்தியமாகும் என்பதனை   நவம்பரில் நடந்த சோசலிச புரட்சி நிரூபித்தது.சோவியத் சமூக முறை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியது.இன்றைய ஜனநாயகத்தில் சில சீர்திருத்தங்களை ஆட்சியாளர்கள் மக்களின் நிர்பந்தத்தினால் கொண்டு வரலாம். ஆனால் முதலாளித்துவ அரசு என்பது முதலாளித்துவ மூலதனக் குவியலுக்காக நடத்தப்படுகிற நிறுவனம் என்ற அதன் தன்மை மாறிடாது. இதில் அடிப்படையான மாற்றத்தை ரஷ்யப் புரட்சி கொண்டு வந்தது. மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தை படைக்க வேண்டுமென்றால் அதிகாரம் பாட்டாளி வர்க்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும்.இது ரஷ்யப் புரட்சி மனித சமூகத்திற்கு எடுத்துரைக்கும் பாடம்.  

புரட்சியை சாதித்திடும் வர்க்கங்கள் 
இந்த புரட்சியை  சாதிப்பது என்பது குறித்து மார்க்ஸும் ஏங்கெல்சும் பல  வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.அவர்கள் அமைத்த அந்த வழித்தடத்தில் பயணித்து மார்க்சியத்தை தத்துவ தளத்திலும் சமூக நடைமுறையிலும் லெனின் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளைஎழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்:“தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்;”.. வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது.மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம்,தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து,ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை,முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்; வாக்குவங்கியாகவும் தேர்தல் காலங்களில் பயன்படுத்துவார்கள். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை சாதித்திடும் வலிமை எங்கிருந்து வருகிறது.மார்க்ஸ் எழுதுகிறார்: “தொழில்துறையின் வளர்ச்சியை தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி பெருந் திரளாகவும் குவிக்கப்படுகிறது. அதன் வலிமை வளர்கிறது. அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது”.

21-ஆம் நூற்றாண்டின்  இன்றைய நடப்புக்கள் அதனை நிரூபிக்கின்றன. முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவை துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018 கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப்பாதுகாப்பும் இல்லாமல்,வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு பணியாற்றுகிற தொழிலாளர் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது.இது பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். 

வேலை இழப்புக்கும், வேலையின்மைக்கும் ஆளாகி வருவோர், ஏற்கனவே பணியில் இருக்கும் உழைப்பாளர் எண்ணிக்கையை விட 70 சதவீதம் அதிகம். இந்த பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளர்கள் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இதுவும், பாட்டாளி வர்க்கத்திற்கு வலுசேர்க்கும் படையாக  அமைந்துள்ளது.தொழிலாளி, விவசாயி வர்க்கங்களின் வர்க்க கூட்டணி புரட்சிக்கான உந்துசக்தியாக அமையும் என்ற ரஷ்ய புரட்சியின் படிப்பினை முக்கியமானது;இன்றும் பொருத்தப்பாடு கொண்டது.

உழைக்கும் வர்க்கங்கள் இன்றைய சமூகத்தில் வலிமையுடன்தான்  உள்ளன. ஆனால் மாற்றம்  ஏன்  நிகழவில்லை? முதலாளித்துவத்தை வீழ்த்தும் வல்லமை தங்களுக்கு உண்டு என்ற வர்க்க உணர்வு இந்த வர்க்கங்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று லெனின் வழிகாட்டினார். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம்;ஆனால் புரட்சிகள் தோல்வி அடைந்ததோடு வரலாறு முடிவதில்லை;புரட்சி மீண்டும்  எழுவதும் வரலாறே! முதலாளித்துவத்தால் முறியடிக்கப்பட்ட புரட்சிகள் அனைத்தும் மீண்டெழும்! 

கட்டுரையாளர்: என்.குணசேகரன், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்