1 ஆம் பக்கத் தொடர்ச்சி
அமைக்க வேண்டுமென போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். 1952ஆம் ஆண்டு பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி 65ஆவதுநாள் மரணமடைந்தார். மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. காவல்துறை கட்டவிழ்த்தஅடக்குமுறையில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் பிறகே பிரதமர் நேரு, தனி ஆந்திரா மாநிலம் அமைக்கப்படும் என 1952 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சியோடு இணைந்திருந்தது. இந்த சமஸ்தானத்தில் உள்ள தமிழ் பகுதிகளை குறிப்பாக தோவாளை,அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டைபகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்ற போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், டி.எஸ். மணி உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தினர். இப்போராட்டம் நடந்த போது 1954ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் பட்டம்தாணுப்பிள்ளை காவல்துறையை ஏவி கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். அன்றுநடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 11 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட “மாநிலங்கள் மறுசீரமைப்புக்குழு” பல்வேறு சிபாரிசுகளை முன்மொழிந் திருந்தது. அதேசமயம் இக்குழு மகாராஷ்டிரா, குஜராத்இரண்டையும் ஒரே மாநிலமாக இருக்க வேண்டுமெனவும், பம்பாய் அதற்கு தலைநகரமாக இருக்க வேண்டுமெனவும் சிபாரிசு செய்திருந்தது. இதை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் இயக்கம் குஜராத்திலும், மராட்டியத்திலும் வெடித்துகிளம்பியது. மராட்டியத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடைசியாக மத்திய அரசு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து மராத்தி மொழி பேசும் மக்களுக்கு மராட்டிய மாநிலம் எனவும், குஜராத்தி மொழி பேசும் மக்களுக்கு குஜராத் மாநிலம்எனவும் இரண்டு மாநிலங்களாக பிரித்து மே 1, 1962ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதேபோல ஐக்கிய தமிழகம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங் கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் பி அன்ட் சி மில்தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர் உட்பட 50 ஆயிரம் பேர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணி மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன், கே.முத்தையா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் உள்ளிட்டு ஆயிரம் பேருக்கு மேல் படுகாயமடைந்தனர். இவ்வாறு மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறுகள் நீண்டுகொண்டே செல்லும்.ஆந்திர மாநிலம் அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலும் வலுவடைந்து போராட்டங்கள் தீவிரமடைந்தன. இப்போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1954ஆம் ஆண்டு ஒரிசா மாநில கவர்னரான பசல் அலி தலைமையில் சர்தார் கே.எம்.பணிக்கர்மற்றும் ஹெச்.என்.குன்ஸ்ரூ -வையும் உறுப்பினர்களாகக் கொண்ட மாநிலங்கள் மறுசீரமைப்பு குழுவினை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இக்குழு இந்தியநாடு முழுவதும் சென்று பல அரசியல் கட்சிகள், பிரமுகர்களை சந்தித்து ஆய்வு நடத்தியது.
மறுசீரமைப்புக் குழுவிடம் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்கள்...
இக்குழுவின் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விரிவான மனுவினை சமர்ப்பிக்கப்பட்டது. இம்மனுவில்,“இவ்வாறு, மொழிவாரி மாநிலங்களுக்கான நம் மக்களின் போராட்டம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான நம் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியானது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகக் கட்டமைப்பதில் வெகுமக்களை முழுமையாகப் பங்கேற்கச் செய்வதை உத்தரவாதப்படுத்துவதற்கு, மொழிவாரி மாநிலங்கள் அமைவது ஒரு முன்நிபந்தனையாகும் என்று கூறியது. இவ்வாறு மொழிவாரி மாநிலங்கள் அமையாமல், நாடு, முன்னேற்றத்திற்கும், செழுமைக்குமான விரிவான பாதையை ஏற்படுத்த முடியாது. மேலும், பல்வேறு மொழி பேசும் மக்களையும் ஜனநாயகக் கலாச்சாரத்தில் முழுமையாக மலரச் செய்வதற்கும், மேலும் அவர்களின் மொழி மற்றும் இலக்கியங்கள் வளர்ச்சிக்கும்இது அவசியமாகும். மேலும், இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கு உறுதியான மதச்சார்பற்ற அடித் தளத்தை நிறுவுவதற்கும், இந்தியாவில் வளமான, முற்போக்கான மற்றும் ஜனநாயக இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்காக பல்வேறு தரப்பு மக்களிடையே தாமாகவே ஒத்துழைப்பைக் கொண்டுவருவதற்கும் இது அவசியமாகும்.“1947 ஆகஸ்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி நீக்கப்பட்டவுடன், நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பும் உரிமையும் நாட்டு மக்கள் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது இயற்கையே. மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்காக அதிகரித்துவரும் கோரிக்கை, நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக எழுச்சியின் ஓர் அங்கமே தவிர வேறல்ல. “மத்தியக் குழு, தற்போதுள்ள ஹைதராபாத் சமஸ்தானத்தைக் கலைத்திடாமல், தென் மாநிலங்கள் முழுவதையும் பகுத்தறிவு அடிப்படையில் மொழிவாரி மாநிலங்களாக அமைக்க முடியும் என்பது சாத்தியமில்லை என்று உங்களுக்குக் கூற விரும்புகிறது.
பாகுபாடில்லாத வகையில் மாநிலங்கள் அமைய...
மத்தியக் குழு, மாநிலங்களை மாற்றியமைத்திடும் சமயத்தில், தற்போது ஏ, பி மற்றும் சி மாநிலங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை ஒழித்திடவேண்டும் என்றுஆணையத்திற்குப் பரிந்துரைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதில் எவ்விதமான பாகுபாடும் இருக்க முடியாது. மேலும், குழுவானது, ராஜபிரமுகர்களுக்கான நிறுவனம் மற்றும் அவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இத்துடன்முன்னாள் மன்னர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் முன்னாள் மன்னர்களின் சொந்த சொத்துக்கள் என்று கூறப்படுபவைகளும், அரசின் மூலம் வசூலித்துக் குவித்துள்ள சொத்துக் களும் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மாநிலங்கள் மறுசீரமைப்புக்குழு ஆய்வு மேற்கொண்டுஅறிக்கை சமர்ப்பிக்க இருந்த நிலையில், சென்னை மாகாணத்தில் மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக, ‘தட்சிணப் பிரதேசம்’ அமைக்கப்படவேண்டுமென முதலமைச்சரான ராஜாஜி குறுக்குச்சால் ஓட்டினார். அதாவது, திராவிடர் கழகம் முன்வைத்திருந்த திராவிட நாடு என்பதை பெயர் மாற்றி தட்சிணப் பிரதேசம் அமைக்க வேண்டுமென்பதே அவரது உள்நோக்கமாக இருந்தது. அதாவது, எப்படியாவது மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதை தடுத்து விட வேண்டுமென வரிந்து கட்டி செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்பேசும் பகுதிகளைக் கொண்ட தமிழ் மாநிலம் அமைந்திட வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி பிரம்மாண்டமான போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது.
ஐக்கிய தமிழகம் அமைக்க வேண்டுமென உறுதிமிக்க போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், திராவிடஇயக்கம் திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர்30 அன்று பசல் கமிசன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு, கேரள,கன்னட மாநிலங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் இதர பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. இக்குழுவின்சிபாரிசுகளின் படி, 16 மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், பல மாநிலங்கள் மொழி அடிப்படையில் அமைக்கப்படவில்லை. மொழி வாரியாக ராஜ்யங்கள் அமைப்பது என்றகோட்பாடு மட்டுமே நமக்கு அடிப்படையாக இருக்க முடியாது என இக்குழு தெரிவித்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்து அறிக்கை விட்டதுடன், இக்குழுவின் சிபாரிசு அடிப்படையில் பல மொழி பேசும் மக்கள் இணைந்து உருவாக்கப்பட்ட மாநிலங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்த வேண்டுமென அறைகூவல் விடுத்தது. அதனடிப்படையில், இந்தியாவின் பல பகுதிகளில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாவதற்கு விடுதலைக்குப் பின்னரும் பல பத்தாண்டுகள் போராட்டங்கள் நடைபெற்றன.
தலைநகர் பிரச்சனையில்...
ஆந்திர மாநிலம் தனியாக அமைக்கப்பட்ட போது,அம்மாநிலத்திற்கு தலைநகர் எது என்ற கேள்வி எழும்பியது. சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக மாற்ற வேண்டுமென ஆந்திர பகுதியிலுள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் கோரினர். ஆந்திராவை சேர்ந்த பிரகாசம் சென்னையை முழுமையாக ஆந்திராவிற்கு கொடுக்க இயலாவிட்டால் கூவத்தை மையமாக வைத்துதென்பகுதியை தமிழ்நாட்டிற்கும், வடபகுதியை ஆந்திராவிற்கும் அளித்திட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தார். தமிழ்நாட்டிலுள்ள அமைப்புகள் சென்னையே தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பது தொடர வேண்டும் என வற்புறுத்தினார்கள். தந்தை பெரியார் சென்னை ஆந்திரத்தில் இருந்தாலென்ன? தமிழ்நாட்டில் இருந்தாலென்ன? திராவிடத்தில்தானே இருக்கப்போகிறது என தெரிவித்து விட்டார். காமராஜர் இதைப்பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் சென்னையை தமிழ்நாட்டின்தலைநகராகவே தொடர வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக்குழுவும் சென்னை மாகாண மாநிலக்குழுவும் ஒருமனதாக கையொப்பமிட்டு மனுவினை பசல் கமிசனிடம் சமர்ப்பித்தது. அதேபோல ஆந்திரா மாநிலத்தின் எல்லையை தீர்மானிப்பதிலும் பல கருத்து மோதல்கள் இருந்தன. மபொசி உள்ளிட்ட பலரும் திருப்பதிஉள்ளிட்ட சித்தூர் மாவட்டம் முழுமையாக தமிழகத்தோடு இருக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர, சென்னை மாநிலக்குழுக்கள் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட கிராமங்களை அலகாகக் கொண்டு திருத்தணி வட்டத்தை தமிழ்நாட்டோடும், இதர பகுதியை ஆந்திரத்தோடும் இணைக்க வேண்டுமென வற்புறுத்தின.பசல் குழுவின் சிபாரிசு அடிப்படையில் 1956 நவம்பர்1ஆம் தேதி மொழிவழி அடிப்படையிலான கேரளம்,தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அமைக்கப்பட் டன. ஆந்திராவின் தலைநகர் பற்றி ஆராய அமைக்கப் பட்ட நீதிபதி வாஞ்சூ தலைமையிலான குழு சென்னை தமிழ்நாட்டோடு இருக்க வேண்டுமெனவும், ஆந்திரத்திற்கு தனி தலைநகர் தேர்வு செய்ய வேண்டுமெனவும் செய்த சிபாரிசை ஏற்று மத்திய அரசு முடிவுகளை அறிவித்தது. அதேபோல, ஆந்திர எல்லையை தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட படஸ்கர் தலைமையிலான குழு சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி தாலுகா உட்பட்ட 322 கிராமங்களை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்ற சிபாரிசும் ஏற்றுக்கொண்டு அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா
மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்க வேண்டுமென்பதோடு, பிரதேச உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணம் என்பது அதற்கான பிரதேசங்களும் மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டன.நீண்ட போராட்டத்திறகுப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு எனபெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தோழர் பி.ராமமூர்த்தி சட்டதிருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டுவந்தார். இம்மசோதா வாதத்திற்கு வரும் நேரத்தில் தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த புபேஷ்குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். அண்ணாதுரை அவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். எனினும்,இத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
சங்கரலிங்கனார்
இதே கோரிக்கையை வற்புறுத்தி காங்கிரஸ்காரரான சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்காதது மட்டுமல்லாமல், காங்கிரஸ்காரர்கள் உண்ணாவிரத பந்தலை பிய்த்து எறிந்தனர். இறுதிவரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பாதுகாப்பாக செயல்பட்டனர். இறுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 55ஆவது நாள் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு பின் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் அவரது உடலை கம்யூனிஸ்ட்டுகள் பெற்று அடக்கம் செய்தனர். இறுதியில் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு, அண்ணா முதலமைச்சரான பிறகே, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மொழி, பயிற்றுமொழி, உயர்நீதிமன்றம் உட்பட வழக்காடு மொழியாக தமிழே இடம் பெற வேண்டுமென தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் முதல் சட்டப்பேரவையில் ஆங்கிலம் மட்டுமே அவை மொழியாக இருந்த நிலைமையை மாற்றி, முதலில் தமிழில் பேசி பதிவு செய்தவர்கள் தோழர்பி.ராமமூர்த்தி, ஜீவா ஆகிய கம்யூனிஸ்டுகளாவர். ஆனால், இன்றும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நடைமுறைப்படுத்தப்படாத கோஷமாக இருப்பது வருத்தமளிப்பதாகும்.தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை அரங் கேற்றும் முயற்சி அனுதினமும் நடந்து கொண்டிருக்கிறது. அரசு நடத்தும் மழலைப்பள்ளிகளிலும் ஆங்கிலமே கோலோச்சும் நிலை உள்ளது.இன்னொரு பக்கம், போராடிப் பெற்ற மாநிலங்களின் உரிமைகளை மத்திய பாஜக அரசு வெட்டி சுருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல துறைகளை கொல்லைப்புறமாக பறித்துக் கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கிற அடிப்படையில் ஒற்றை கலாச்சாரத்தை திணித்துக் கொண்டுள்ளது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் ஓய்வின்றி திணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய நாட்டில் பல மாநிலங்கள் பல மொழிகளை கொண்ட பன்முகத்தன்மையில் நீடிப்பதானது இந்து என்ற மத அடிப்படையிலான அணி திரட்டலுக்கு தடையாக அமைந்து விடும் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கைகளை பாஜக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக் கான உரிமைகளை பாதுகாத்திடவும், மேலும் உரிமைகளைப் பெறவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தமிழ்மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆகியவை வலுவடைய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்பதை விளக்கவேண்டியதில்லை. இக்கடமைகளை கடந்த காலங்களைப்போலவே பெருமையோடு நிறைவேற்றிட உறுதியேற் போம்.