tamilnadu

img

ரோஜா கூட்டம் போலவும் புறாக் கூட்டம் போலவும் - ஜி.ராணி

கருணை இல்லா அரசு கடுகி ஒழிக என்றார் வள்ளலார். சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினமான நவம்பர் 25 அன்று வடலூரிலிருந்து ஒரு குழுவும், திருவண்ணாமலையிலிருந்து ஒரு குழுவுமாக போதையற்ற தமிழகம், வன்முறையற்ற தமிழகம்; போதையற்ற புதுச்சேரி; வன்முறையற்ற புதுச்சேரி என்ற கோஷங்களை முன்வைத்து தலா 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகளோடு புறப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நடைபயணம், பத்தாவது நாளில் சென்னையை எட்டியிருக்கிறது.  இரண்டு குழுக்களும் வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை, பெண்களை சந்தித்தன. பல இடங்களில் பெண்களின் குமுறல்களை நேரடியாக பார்க்க முடிந்தது. கடுமையான வெள்ளம் வந்தால் அணை உடைந்து தண்ணீர் வெளியாவது போல பெண்களின் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. 

குழந்தைகள் மீதான வன்முறை 2016 ஆம் ஆண்டை விட 2017ல் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் சொல்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள சமத்துவ உரிமையைக் கோரித்தான் கொட்டும் மழையிலும் வாட்டும் வெயிலிலும் நடைபயணம் நடந்தது. நடைபயணத்தில் வந்த தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தரராமன் உள்ளிட்டவர்கள் இரண்டு கால்களிலும் கடுமையாக கொப்புளங்கள் ஏற்பட்டு இருந்த போதிலும் சளைக்காமல் சகோதரிகளோடு முன்னால் வீர நடைபோட்டு வந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

அனுபவங்கள் அலாதியானவை

நடைபயணத்தின் போது நிதி திரட்டும் குழுவின் அனுபவங்கள் அலாதியானவை. கடைகளில் ஏறி இறங்கி நடைபயணத்தின் நோக்கத்தை விளக்கி, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி அதன்பிறகு நிதியைப் பெற்று திரும்பி குழுவுடன் இணைந்து கொள்ள ஏதாவது வண்டியில் லிப்ட் கேட்டாலோ, ஆட்டோ, டாட்டா ஏசி எந்த வண்டியில் ஏறினாலோ, அந்தத் தொழிலாளிகள் பணம் வாங்க மறுத்துவிட்டார்கள் என்பது உற்சாகத்தை மேலும் கூட்டியது. வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய வண்டிகள் கூட ‘நிதிக்குழுவை’ உரிய இடத்தில் வந்து இறக்கி விட்டு சென்றார்கள். திண்டிவனத்தில் நோட்டீஸ் விநியோகிக்கும் போது, கடுமையான மழை. மாதர் சங்க சகோதரிகள் நனைந்து கொண்டு நோட்டீசை நனையாமல் பார்த்துக்  கொண்டார்கள். ஒரு பெண்மணி கூட மிகக் கடுமையாகக் கடிந்து கொண்டார், ஏம்மா மழையில் இப்படி நனைகிறாய் என்று! எனினும் மாதர் சங்க ஊழியர்கள் நோட்டீசைப் பாதுகாப்பதில்தான் கவனமாக இருந்தார்கள். நடைபயணம் நடந்து கொண்டிருக்கும் போதே ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாதர் சங்க நடைபயணம் எத்தனை அவசியமானது என்பதை அந்தச் செய்தியும் உணர்த்தியது.

மனதை உலுக்கிய  கண்ணீர் கதைகள்

பல இடங்களில் எளிய சாலையோர வியாபாரிகள் எல்லாரும் நடைபயணத்தை வரவேற்றார்கள். கிறிஸ்தவர்கள் சபையிலிருந்து பெண்கள் மற்றும் பாதிரியார்கள் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். முஸ்லிம் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. உற்சாகமான வரவேற்புகளுக்கிடையே, நெஞ்சை உலுக்குகிற கண்ணீர்க் கதைகளும் மனதைத் தாக்கின.  சோலையன் மேடு - மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் மாவு வியாபாரம் செய்கிறார். இவருடைய மகன் பிஏ வரலாறு படித்துள்ளார். தங்க மெடல் வாங்கிய மகன் இன்று குடிபோதையில் தள்ளாடுவதாக கண்ணீர் விட்டு கதறி அழுதார் அந்தத் தாய். இரண்டு பெண் பிள்ளைகளின் நிலைமை, திருமணம் செய்ய முடியாமல் திண்டாடுவதை கண்ணீரோடு சொல்லி அழுதார்.

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி காளியம்மாள், பள்ளி, கோயில் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கின்றது. அதன் அருகிலேயே டாஸ்மாக் கடையும் இருப்பதால் போதை நபர்கள் பள்ளி மாணவிகளின் கையை பிடித்து இழுக்கும் சம்பவம் தினந்தோறும்  அரங்கேறி வருகிறது. இந்த போதையால் தான் என் குடும்பத்தில் ஆண் இல்லாத நிலை உருவானது. என்னையே கையை பிடித்து இழுக்கும் இழிவும் ஏற்பட்டது என்று குமுறினார். டிஜிட்டல் இந்தியா என்று மோடி சொல்லி வருகிறார்; ஆனால் ரேசன் கடைகளில் நல்ல தரமான அரிசி கிடைப்பதில்லை; மண்ணெண்ணெய் ஒரு லிட்டரிலிருந்து அரை லிட்டராக குறைத்துவிட்டார்கள்; வேலை கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு தினந்தோறும் செல்ல வேண்டிய அவலநிலை என்று பெண்கள் குமுறினார்கள். இலவச சிலிண்டர் என்று சொன்னார்கள்; ஆனால் நாங்கள் இன்னமும் அடுப்பில்தான் சமைத்துக் கொண்டு இருக்கிறோம். இதுவும் ஒருவகையில் பெண்கள் மீதான வன்முறை தான் என்று அரசைச் சாடினார்கள். குழந்தைகள் மீதான வன்முறை என்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பள்ளிக்கு குழந்தைகளை நிம்மதியாக அனுப்ப இயலவில்லை. அரசாங்கமும் அதைப்பற்றி கவலைப்பட மறுக்கிறது என்றனர் தைலாபுரத்தைச் சேர்ந்த தீபாவும், பூஞ்சோலையும். புளிச்சபள்ளம் பகுதியில் இருளர் இன மக்களை சந்தித்தோம். அவர்கள் இருக்கும் ஊரில் மருத்துவமனை இல்லை. பிரசவத்திற்காக செல்ல வேண்டும் என்றால் கூட ஐந்து கிலோ மீட்டர்  வானூருக்கு தான் செல்லவேண்டுமாம். அருகிலுள்ள கல்சூளை, நெல் ஆலைகள், கரும்புக்காட்டுக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தால் நிம்மதியாக தூங்க முடியாது என்றார்கள். என்ன என்றபோது ஆண்கள், இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரே பிரச்சனையாகத்தான் இருக்கும். ஆகவே உடனடியாக டாஸ்மாக் கடையை எடப்பாடி அரசு மூடவேண்டும் என்றார்கள்.  சிவகாமி, நந்தினி, மாலா, முத்தம்மாள், பூங்கொடி தலைமையில் மாதர் சங்க நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மேலும் இலவச வீட்டுமனைப் பட்டாவிற்காக பலவருடம் போராடுகிறோம். சிலிண்டர் இல்லை மண்ணெண்ணெய் இல்லை என்ற கோரிக்கையும் முன்வைத்தார்கள்.

கிளியனூர் பகுதியில் பள்ளி மாணவிகள் சந்திப்பு மேலும் அதிர்ச்சியை அளித்தது. டாஸ்மாக் கடையை மூடச்சொல்லுங்கள். தினந்தோறும் குடித்துவிட்டு எங்கள் அப்பா அம்மாவை அடிப்பதால் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை; படிக்க இயலவில்லை. நாங்களும் உங்களோடு வருகிறோம் முதல்வரைப் பார்க்க என்றனர் ஒருமித்த குரலில்.

பாதிக்கப்பட்டவர்களும் போராளிகளும் கரம் கோர்த்து...


இதுமட்டுமல்ல, இரண்டு குழுக்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட, வன்முறைக்கு எதிராக போராடி வருகிற போராளிகள் பத்துநாளும் நடந்து வந்தார்கள். ஈஷா, யோகா மையத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய முத்தம்மாள், துடியலூர் சிறுமியின் இளம்தாய், போலீஸ் லாக்-அப் கொடூரத்தில் கணவனை இழந்த கடலூர் ரேவதி எனப் பலரும் நடந்தார்கள்.   திருவள்ளூரைச்சேர்ந்த சித்ரா அப்பளக் கம்பெனிக்கு வேலைக்கு சென்றால்தான் தினந்தோறும் ரூ.150 கூலி கிடைக்கும். 10 நாள் லீவு எடுத்து வந்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மலர் பி.ஏ., வரலாறு படித்துள்ளார். 2008 -ல் காதல்திருமணம் செய்து, 2011-ல் கணவன் குடிபோதையால் விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளுடன் நடைபயணத்தில் வந்துள்ளார். பெரம்பலூர் அம்பிகா இளம் வயதில் கணவரை இழந்தவர். விதவை என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய நீண்ட கூந்தலை வெட்டிக் கொள்ள நேர்ந்திருக்கிறது. புவனகிரி கற்பகமும் இதே போல்தான். தஞ்சையில்  பெரிய வன்முறை பிரச்சனையை சந்தித்த பி.எஸ்.சி. படித்துக்கொண்டிருக்கும் சுகப்பிரியா உட்பட பெண்கள் நடைபயணத்தில் வீரநடைபோட்டு வந்தார்கள். இளம் பெண்களுக்கு இணையாக... 61 வயதிலும் இளம் பெண்களுக்கு இணையாக உற்சாக நடைபோட்டார் மாதர் சங்கத்தின்  மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம். தொடங்கிய இடம் முதல்  ரோஜாக்கூட்டம் போலவும், நடந்து வரும்போது புறாக்கூட்டம் பறப்பது போலவும் இந்த நடைபயணம் இருந்தது என்றார். முதன்முதலாக இப்படி ஒரு நடைபயணத்தை சந்திப்பதாக மகிழ்ச்சியுடன் எழுச்சியுடன் அவர் பேசியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.  இரண்டு குழுக்களிலும் பல மூத்த தோழர்கள், ஒன்பது நாட்களும் சற்றும் தொய்வின்றி நடந்தார்கள். பேராசிரியர் டாக்டர் சங்கரி, குற்றாலம் பராசக்தி கல்லூரியின் முன்னாள் பேராசிரியர், ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மாதர் சங்க பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். நடைபயணத்தில் சற்றும் தளராமல் வீர நடைபோட்டு வந்தார்.  

திண்டுக்கல் மாவட்டத்தின் மாதர் சங்க மூத்த தலைவர் வனஜா, நெல்லை சின்னத்தாய், மணியம்மாள், கோவை முத்தம்மாள், தர்மபுரி மீனாட்சி உள்ளிட்டோர், இளைய தோழர்களை தங்களது நடையால் உற்சாகப்படுத்தினர்.  பிரதான ஊடகங்கள் இந்த நடைபயணத்தை பிரதானப்படுத்தாமல் போயிருக்கலாம். ஏனென்றால் இது உழைப்பாளி வர்க்கத்துப் பெண்களின் நடை.வழிநெடுகிலும் உழைக்கும் வர்க்க இயக்கங்களும் தோழர்களும் அளித்த வரவேற்பு ஒவ்வொரு நாளும், நடைபயண வீராங்கனைகளை உற்சாகம் குறையாமல் பாதுகாத்தது. வானிலை மாறி, கனமழை பொழிந்தபோதிலும், மாற்றுத் திறனாளிகள், சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் திரண்டிருந்து, நடைபயண வீராங்கனைகள் மீது பூமாரி பொழிந்த நிகழ்வு, நெகிழ்வின் உச்சமாக அமைந்தது.

பல்வேறு பகுதி மக்களுடனான சந்திப்புடன், உரையாடல்களுடன் உற்சாகமாக 200க்கும் மேற்பட்ட பெண்களின் நடைபயணம் தாம்பரத்தில் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டத்துடன், டிசம்பர் 4ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட தயாராகிவிட்டது.  எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் உள்ளிட்ட மகத்தான தலைவர்களின் வாரிசுகளாக புது உற்சாகத்தோடு கோட்டை நோக்கி முற்றுகையிடப் போகிறோம். காக்கிச்சட்டை பதற, ஆட்சியாளர்கள் அதிர, தடை அதை உடை என கோட்டையை முற்றுகையிடுவோம்! 

கட்டுரையாளர் :  திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்