“நீங்கள் ஏன் பெருமுதலாளிக்கு ஏற்ற வகையிலேயே பொருளாதாரத் திட்டங்களை அமைக்கிறீர்கள்?” என்ற கேள்வி நிதிமந்திரி நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் ஒருமுறை கேட்கப்பட்டதற்கு, “ஏனெனில், பெருமுதலாளிகளே நாட்டின் பொருளாதார இரத்த ஊக்கிகள்” (Economical Blood Boosters) என்று பூர்ஷ்வாத்தனமான அலட்சியத்துடன் பதிலளித்தார். இவ்வாறு அரசினால் இரத்த ஊக்கிகள் என அழைக்கப்படுவோர் தான் அட்டைப் பூச்சிகளாக மாறி அரசின் கஜானாவைக் காலி செய்கிறார்கள். தற்போதும் கூட, பெரும் முதலாளிகளுக்கு சுமார் 68 ஆயிரம் கோடிகள் வரை, வராக்கடன் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. இதே வங்கித் துறையானது விவசாயக் கடன்களுக்கும், கல்விக் கடன்களுக்கும், சாமானியர்கள் வாங்கிய கடன்களுக்கும் கொடூரமான வசூலிக்கும் முகத்தை வைத்திருக்கிறது.
தற்போதும், கொரோனா நோய் தொற்றினால் உலகமே பதற்றத்தில் இருக்கிற சந்தடி சாக்கில் சாமானியர்களின் கடன்சுமையை புதிய யுக்தி கொண்டு மேலும் ஏற்றி இருக்கிறது இந்திய வங்கித்துறை. இது ஒரு மாபெரும் பொருளாதாரச் சுரண்டலாகும். மக்கள் நலம் விரும்பும் அனைவராலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதும் ஆகும்.
நினைவுக்குவரும் கண்ணதாசனின் பாடல்
அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தக் கொரோனா காலத்தில் கடனாளிகளுக்கு 3 மாதம் கடன் தவணை செலுத்துவதைத் தள்ளி வைத்தல் (Moratorium) என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு விருப்பத் தெரிவுக்கு (Optional Scheme) உட்பட்ட திட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தைத் தேர்ந்து எடுத்தவர்கள் தங்கள் மாதத் தவணைகளை (EMI) 3 மாதம் கழித்து கட்டிக் கொள்ளலாம். 2020 மார்ச் 1முதல் 2020 மே 31 வரையான காலத்தில் தவணைத் தொகையானது வாடிக்கையாளரிடம் கேட்கப்பட மாட்டாது. இந்த காலகட்டத்தில் தவணை கட்டாத வாடிக்கையாளரின் கடனீட்டும் மதிப்பு (CIBIL Score) மாற்றம் செய்யப்படாது எனவும் சொல்லப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது கெரோனா ஊரடங்கினால் வருமானம் இழந்தோர்க்கு நல்வாய்ப்பு வழங்குவது போல் தெரியும். ஆகா! என்னே கருணை!! என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் அங்கு வைக்கிறார்கள் ஆப்பு!
”கைகளை தோளில் போடுகிறான் அதைக் கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்” – என்ற பாடல் வரிகள்தான் இவர்களின் செயலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. வங்கி தவணை 3 மாதங்களுக்கு பிறகு செலுத்தும் திட்டப்படி, சலுகை என்ற பெயரில் கூட்டு வட்டிச் சதி நடக்கிறது.
நட்சத்திரங்களை எண்ணிடலாம்...
எப்படி என்று பார்ப்போம். ஒருவர் 5 லட்சம் ரூபாயை 12% வட்டி விகிதத்தில் 5 வருடகாலத்தில் செலுத்தி விடுவதாக வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார் என்றால், அவருக்கான வழக்கமான மாத தவணை (EMI) ரூ.11,122/- ஆகிறது. இப்போது அரசு அறிவித்திருக்கும் தவணை தள்ளிக் கட்டும் திட்டத்தை ஏற்றால், அவருக்கு 3 மாத முடிவில் தவணை நிலுவை தோராயமாக ரூ.33,000/- இருக்கும். இத்திட்டப்படி தவணை நிலுவையானது பழைய அசல் கடன் தொகையுடன் சேர்க்கப்படும். வாடிக்கையாளரின் மொத்தக் கடன் ரூ.5,33,000/- என உயரும். அதன்படி இனி அவர், கட்ட வேண்டிய மாத தவணை ரூ.11,856/- என உயரும். இதன்படி, இறுதியில் கட்ட வேண்டிய பழைய பாக்கித் தொகை மற்றும் கட்ட வேண்டிய வட்டியை விட அவரிடம் ரூ.10,000/- வரை அதிகப்படியாக வசூலிக்கப்பட்டு விடும். சிலர் ஏற்கெனவே கட்டிய மாதத் தவணைகள், மற்றும் வாங்கிய வட்டிவீதம் இவற்றைப் பொறுத்து தொகை சற்று கூடி குறையலாம். எப்படி ஆனாலும் இத்திட்டத்தை ஏற்ற ஒருவரும் அதிகப்படியாக கட்ட வேண்டிய வட்டியில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த கூடுதல் வட்டி வசூல் என்பது தேசிய அளவில் மொத்தமாகக் கணக்கிட்டால் மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும். இதன்படி கூடுதலாகச் சுரண்டப்படும் வட்டி வருமானத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் முன் நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பிரதமர் மோடியின் அறைகூவலுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகள் பல, குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Balance) இல்லாமல் கடந்த காலத்தில் முடக்கப்பட்டது. அவ்வாறு முடக்கப்பட்ட குறைந்த பட்ச தொகை கூட இல்லாத வங்கிக் கணக்குகளில் இருந்தும் கிடைத்த சொற்ப பணத்தின் மொத்தத் தொகை மட்டும் ரூ. 5000 கோடிக்கும் மேல். எனில், இந்த தவணை வட்டிக் கணக்குத் தொகை எத்தனை ஆயிரம் லட்சம் கோடிகள் தேறும் என்று கணித்துக் கொள்ளுங்கள்.
செய்யாத தவறுக்கு தண்டனை
கொரோனா காலத்தில் தனி மனித வருமான இழப்பு என்பது சூழ்நிலை சார்ந்தது (Act of Nature). இந்த 3 மாத கால தவணை கட்டுவதற்கான சலுகை என்பது அரசே ரிசர்வ் வங்கியின் மூலமான வாய்ப்பாக (Option) தருவது. இதை தெரிவு செய்யும் காலத்தில் கடன் தவணையைக் கட்டாமல் இருப்பது என்பது வாடிக்கையாளரது தவறு அல்ல அவரது உரிமை. இந்நிலையில், வங்கியானது வாய்ப்பை ஒருபுறம் வழங்கி விட்டு மறுபுறம் வாடிக்கையாளரிடமிருந்து தவணை நிலுவைக்காக கூடுதல் வட்டி வசூலிப்பது நியாயமற்றது. வாடிக்கையாளர் வாங்காத கடனுக்கு வட்டி என்பது வழிப்பறிக் கொள்ளையை விடக் கொடுமையானது.
இந்தச் சங்கடத்தில் இருந்தும், பெரும் பணக்காரர்கள் மற்றும் ஊரடங்கினால் வருமானம் பாதிக்கப்படாதவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இவர்கள் தவணை தள்ளிக் கட்டும் வாய்ப்பை (Moratorium Option) ஏற்பதில்லை. ஆனால், ஊரடங்கினால் வருமானம் பாதிக்கப்பட்ட சிறு, குறு கடை நடத்துவோர், தனித் தொழில் புரிவோர், மாத ஊதியம் இழந்தோர் போன்ற சாமான்யர்களே இந்த தவணைக்கு வட்டி திட்டத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.
பொருளாதார இரத்த ஊக்கிகள் என பெயரிடப்பட்டு அரசாங்கத்தால் செல்லமாக வளர்க்கப்படும் பெருமுதலாளிகள் சிலருக்காக, ஏழை, எளியோரின் பொருளாதார இரத்தம் உறிஞ்சப்படும் இந்த அவலத்தை அரசு திட்டமிட்டே நிகழ்த்துகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தக் கூடுதல் வட்டி சரியான முறையில் கவனித்து நீக்கப்பட வேண்டும். இல்லையேல், இதுவரை இந்திய வங்கி வரலாற்றில் நடந்திராத அளவிலான பொருளாதாரச் சுரண்டல் நிகழ்த்தப்பட்டு விடும்.
கட்டுரையாளர்: வழக்கறிஞர், மதுரை
தொடர்புக்கு : Email : Jeyaramansudhakar@gmail.com