அந்த செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த தோழர்கள் ஒவ்வொருவரும் அதிர்ச்சி யில் உறைந்து போயினர். இயற்கையான மரணமாக இருந்தாலும் முற்றிலும் எதிர்பாராததே அதற்குக் காரணம். வயது ஒன்றும் அதிகம் இல்லை 74 தான். மருத்துவமனையில் மாதக்கணக்கில் அல்ல! நாள் கணக்கில் கூட அவர் இருந்ததாக செய்திகள் இல்லை. எப்படி நம்பமுடியும் தோழர்.கே.வி இறந்துவிட்டார் என்ற செய்தியை!
50 ஆண்டுகால பொதுவாழ்வில் ஆயிரமாயிரம் மக்களை, தோழர்களை சந்தித்தவர். பல குடும்பங்களின் சகோதரனாக, மூத்தவராக இருந்து அந்த குடும்பங்களின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். குடும்பப் பிரச்சனையானாலும், பொதுப் பிரச்சனையானாலும், சொந்தப் பிரச்சனையானாலும் அவரிடம் மனம் திறந்து பேசலாம். நிச்சயம் ஒரு தீர்வை தோழர்.கே.வி ஏற்படுத்தி விடுவார் என்ற நம்பிக்கையை ஆயிரமாயிரம் தோழர்கள் மனதில் விதைத்திருந்தவர். எளிதில் அணுகத்தக்க அவருடைய குணமும், நகைச்சுவை உணர்வும், மிகச் சுலபமாக எவரையும் ஈர்க்கத்தக்க ஒரு வாய்ப்பு அவருக்கு இருந்தது. முரண்படுகிற விஷயங்களையும், எதிரான கருத் துக்களையும் எவ்வித தயக்கமுமின்றி அவரிடத்தில் பேச முடியும். அதற்குரிய விளக்கங்களை அளிப்பாரே தவிர அப்படி கேட்ட தோழர்களை வேறுவித கண்ணோட்டத்தோடு அவர் எப்போதுமே பார்த்ததில்லை. அமைப்பினுடைய கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் அமைப்பின் கட்டுப்பாடு என்ற பெயரில் எவரையும் இழக்க விரும்ப மாட்டார். சுட்டிக்காட்டி, மற்றவர்களையும் ஏற்க செய்து தோழர்களை தக்க வைப்பதில் பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்பவர் தோழர்.கே.வி. கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரிய ஸ்தாபனக் கோட்பாடுகளான கூட்டுத்தலைமை, கூட்டுச் செயல்பாடு, ஜனநாயகச் செயல்பாடு, ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவற்றை தன் வாழ்நாள் முழுவதும் கடுகளவும் குறைவின்றி கடைப்பிடித்தவர். அடிப்படை உறுப்பினர் துவங்கி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்ற மிக உயர்ந்த பொறுப்புக்குச் சென்ற போதும், மேற்கண்ட குணநலன்கள் அனைத்தையும் மரணம் வரை கடைப்பிடித்தவர்.
எனது சொந்த ஊரான பெருவளநல்லூர் கிராமத்திற்கு 1978ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர்களில் ஒருவர் என்ற அறிமுகத் தோடு அவர் வந்திருந்தார். நானும், தோழர்.எம்.கே.தங்க ராஜ் என்ற தோழரும் வாலிபர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். தோழர்.தங்கராஜ் அப்போது கம்யூ னிஸ்ட் கட்சியில் இருந்தார். நான் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதனுடைய செயலாளராக செயல்பட்டு வந்தேன். தோழர்.கே.வி. அப்போது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்பது எனக்குத் தெரியாது. பிறகு அவருடன் சேர்ந்து ஒரே அலுவ லகத்தில் பணியாற்றுவேன்; ஒரே சங்கத்தில் வேலை செய்வேன் என்பதெல்லாம் நினைத்தே பார்த்திராத விஷயம். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அவருடன் பழக்கம். முப்பது ஆண்டுகள் விவசாயிகள் சங்கத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரும் பேறு என்று தான் சொல்ல வேண்டும்.
1990 மே 13,14,15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் 21ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் தோழர்.கே.வி மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு விவசாய சங்க மாநில மையத்தில் தோழர்.கோ. வீரய்யன், தோழர்.வி.ஏ.கருப்புசாமி, தோழர்.கே.வி ஆகிய பெருந்தலைவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப் பினை பெற்றேன். பிறகு தோழர்.எஸ்.திருநாவுக்கரசு, தோழர்.டி.கிருஷ்ணராஜ், தோழர்.பி.டில்லிபாபு ஆகிய இளந்தோழர்களையும் கொண்ட வலுமிக்க விவசாய அரங்க மாநில மையம் உருவாக்கப்பட்டது. தோழர்.கே.வி பொறுப்பில் இருந்த காலத்தில் தான். அவர் துவக்கி வைத்த வலுமிக்க மாநில மையம் என்பது இன்றும் தொடர்கிறது.
ஒருவருக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதைப் போல, எப்படி நீச்சல் கற்றுக் கொள்பவரின் வயிற்றை கையில் தாங்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அணைத்து கொண்டு போய் ஒரு தாயின் அரவணைப்போடு கற்றுக் கொடுப்பதன் மூலம் தன்னால் நீந்த முடியும் என்ற தன்னம்பிக்கையை பெறுவாரோ அப்படி வளர்த்தெடுத்தவர் தோழர்.கே.வி. சிறந்த மக்கள் ஊழியர்களாக எங்களைப் போன்றவர்க ளை பயிற்றுவித்தவர் தோழர்.கே.வி. அவரிடம் பெற்ற பயிற்சி இன்றைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் திகழ்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். தலைவர் களை உருவாக்கிய தலைவர் அவர். அவரால் பயிற்சி அளிக் கப்பட்டு உருவான தலைவர்கள் அனைவரும் இந்தக் கருத்தை ஏற்பர். என்னுடைய பயிற்சியாளராக விளங்கி னார் என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
எந்தவொரு கடினமான பிரச்சனை குறித்தும் எளிமை யாக விளக்கவும், எழுதவும் அவரால் முடியும். மக்களுக்கு சுலபமாக புரிய வேண்டும் என்பதற்காக பழமொழிகளை யும், குட்டிக்கதைகளையும் தன்னுடைய உரையில் தவறா மல் இடம் பெறச் செய்வார். இதனால் மக்கள் அவருடைய பேச்சை ரசித்ததுடன் பயன்படுத்தவும் செய்தனர். வெகுஜன ஸ்தாபனங்களில் பணியாற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் வெகுஜனங்களின் நிலைக்கு இறங்கி வர வேண்டும். அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர்.
1999 மார்ச் 5-8 தேதிகளில் கோழிக்கோடு நகரில் நடை பெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 29ஆவது மாநாட்டில் அவர் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். 34ஆவது அகில இந்திய மாநாடு கடலூ ரில் நடைபெற்ற போது பொதுச்செயலாளர் பொறுப்பிலி ருந்து விடுவிக்கப்பட்டு அகில இந்திய துணை தலைவராக இறுதிவரை செயல்பட்டு வந்தார்.
மலைவாழ் மக்கள் மத்தியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1952லிருந்து கொல்லிமலையில் செயல்பட்டு வந்தது. 1956லேயே ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் பங்கேற்ற மாநாடு கொல்லிமலையில் நடை பெற்றது. பிறகு 1970களில் கல்வராயன் மலை, குத்தியா லத்தூர் மலை, ஜவ்வாதுமலை, பச்சைமலை ஆகிய மலை களில் சங்கம் உருவானது. மாநில அளவில் தனி அமைப் பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1984 அக்டோபர் 14,15,16 தேதிகளில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாநில பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டது. பிறகு 1987ம் ஆண்டு கள்ளக்குறிச்சி யில் மாநில அளவிலான மலைவாழ் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இருப்பினும் தனி அமைப்பு என்பது துவக்கப் படவில்லை. தோழர்.கே.வி பொதுச்செயலாளராக இருந்த போது தான் 1992 பிப்ரவரி 14ஆம் தேதி கொல்லிமலையில் மாநில அளவிலான மாநாடு நடத்தப்பட்டு “தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம்” என்ற தனி அமைப்பு உருவானது.
அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தது மட்டு மல்லாமல் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அனைத்து மாநி லக்குழு கூட்டங்களிலும் கலந்து கொண்டு அந்த அமைப்பை வலுப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தினார். இன்றை க்கு மலைவாழ் மக்கள் மத்தியில் வலுமிக்க அமைப்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வளர்ந்திருக்கிற தென்றால் அதில் தோழர்.கே.வியின் சிறப்புமிக்க வழி காட்டல் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமையை எதிர்த்த போராட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து வழிகாட்டினார். அத்தகைய பிரச்சனை களில் தலையிட்டு போராடிய அனுபவம் எனக்கு அப்போது இல்லை. அதிலும் அப்போது தான் நான் அச்சங்கத்திற்கு செயலாளராகி சில மாதங்களே ஆகியிருந்தன. இத்தகைய நிலையில் தோழர்.கே.வி தான் உடனிருந்து வழி நடத்தினார்.
ஒரு பிரச்சனையில் தலையிடும் போது செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகள், அதற்கு மக்கள் ஆதரவை திரட்டுவது, பொதுமக்களின் பிரச்சனையாக மாற்றுவது, பாதிக்கப்பட்ட மக்களை உறுதியாக நிற்க வைப்பது, நீடித்த போராட்டத்தை நடத்துவது, அதற்கான நிதியை திரட்டுவது என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு குறித்த தீர்ப்பு வெளிவந்த பிறகு தமிழ் இந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் “அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்த தோழர்.கே.வரதராசன் உந்து சக்தியாக திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதை படித்துவிட்டு, வாச்சாத்தி குறித்து எப்ப முழுமையாக எழுதப்போற என்று கேட்டார். விரைவில் எழுதணும் தோழர் என்றேன். என்னைப் பற்றி அதில் வருமா என்று கேட்டார். நிச்சயமா உங்களைப் பற்றி இரண்டு அத்தியாயம் இடம் பெறும் என்றேன். அந்த ரெண்டு அத்தியாயத்தை மட்டும் நான் இருக்கும் போதே எழுதிடேன் என்றார். எனக்கு குற்ற உணர்வு மேலோங்குகிறது. முழு புத்தகத்தையும் விரைவில் எழுதி அதை அவருக்கு சமர்ப்பணம் செய்வது தான் சிறந்த அஞ்சலியாக இருக்கும். இயக்கத்திற்கும் நியாயம் வழங்கியதாக இருக்கும்.
1992 ஜுலை 31 அன்று தோழர்.ஏ.நல்லசிவன், தோழர். ஜி.வீ, தோழர்.கே.வி, தோழர்.பாப்பா உமாநாத் ஆகிய தோ ழர்கள் வாச்சாத்தி கிராமத்திற்கு வந்திருந்தனர். கிராமமே அடித்து நொறுக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டி ருந்ததை வீடியோ எடுக்கும் யோசனையை தோழர்.கே.வி தான் சொன்னார். நாங்கள் ஜுலை 14ஆம் தேதியிலிருந்து கிராமத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தாலும் வீடியோ எடுக்கும் யோசனை எங்கள் யாருக்கும் தோன்றவில்லை.
தோழர்.ஜி.வீ பொதுச்செயலாளராக ஆன பிறகு தான் விவசாயிகள் சங்க மாநில மையம் சென்னையில் எண்.16 அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்தது. பிறகு சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் ஒரு பகுதியில் செயல்பட்டது. பிறகு வி.1 கிச்சன் பிளாக்-கில் செயல்பட்டது. எம்.எல்.ஏக்க ளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் விவசாயிகள் சங்கத்திற்கென்று சொந்த கட்டிடத்தை கட்டுவது என்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற 23ஆவது மாநில மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. 1998 டிசம்பர் 19ஆம் தேதி தாம்பரத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவகம் திறப்பு விழா நடைபெற்று அது முதல் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கட்டி முடிப்ப தில் தனக்கிருந்த அனைத்து வாய்ப்புகளையும் தோழர்.கே.வி பயன்படுத்தினார். நிதியை உருவாக்குவதில் ஓய்வின்றி அலைந்தார். விவசாயிகள் இயக்கத்திற்கென்று சொந்த அலுவலகத்தை நிர்மானித்ததில் தனிப்பெரும் பங்கு தோழர்.கே.வி அவர்களைச் சாரும்.
செயல்படுவதற்கான நிரந்தரமான அலுவலகம், இயக்கத்தில் அடுத்தடுத்து செயல்படுவதற்கான தலைவர்க ளை உருவாக்கும் விதத்தில் வலுவான மாநில மையம், மாநில அளவில் அமைப்பை விரிவுபடுத்தியது, பயிர்வாரி, பகுதிவாரியாக விவசாயிகளை திரட்டுவது போன்றவற்றில் அழியாத முத்திரையை பதித்துவிட்டுச் சென்றுள்ளார் தோழர்.கே.வி. கிராமப்புறங்களை வர்க்கப் போராட்ட களங்க ளாக மாற்ற வேண்டும். அதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட வர் தோழர்.கே.வி. அவருடைய அந்தப் பணியை முன்னெ டுத்துச் செல்வோம்!
அவர் மறைந்தாலும், அவருடைய பணியின் காரண மாக நமது உள்ளங்களில் நமது செயல்பாட்டில் அவர் நமக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார்.
கட்டுரையாளர்: பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்