tamilnadu

img

கட்டற்ற சந்தைச் சமுதாயத்தில் நிர்க்கதியாக விடப்பட்ட மக்கள் - டி.கே.ரங்கராஜன்

ஐசனோவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?. அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டவர். அவர்தான் ராணுவதளவாட உற்பத்தி வளாகம் (Military industrial complex ) எப்படி அந்த நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கப்போகிறது என்பதை எச்சரித்தார். அவர் இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தி 60 ஆண்டுகள் முடியப்போகிறது.

இரண்டாவது உலகப்போரில் நேச நாடுகளின் படைகளுக்கு கமாண்டராக இருந்து செயல்பட்டவர் ஐசனோ வர். அமெரிக்க ராணுவத்தில் 5 நட்சத்திரங்கள் பெற்ற ஜெனரலாக இருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் அந்த நாட்டின் ராணுவத்தளங்கள் வரலாற்றில் காணாத அளவில் விரிவாக்கப்பட்டன. அவரேதான் தன் ஆட்சியின் முடிவுக் காலத்தில் இந்த விரிவாக்கத்தின் அபாயங்கள் குறித்து அந்த நாட்டு மக்களை எச்சரித்தார்.

இன்றைய உலகில் 150 நாடுகளில் அமெரிக்கா ராணுவ தளத்தை அமைத்திருக்கிறது. 1 லட்சத்து 65 ஆயிரம் வீரர்கள் இந்த தளங்களில் செயல்பாட்டுக்கு தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இது அல்லாமல் உலகின் பல நாடுகளில் 40 ஆயிரம் ஒற்றர்கள் பல்வேறு பணிகளில் பணியாற்றிவருகின்றனர். ஊருக்கு ஊர் காவல்நிலையம் அமைப்பதைப் போல, உலகம் முழுவதும் ராணுவத் தளம் அமைக்கும் அதிகாரத்தை அமெரிக்கா வுக்கு கொடுத்தது யார்? உலக நாடுகளை வேவுபார்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்? உலகின் போலீஸ்கா ரனாக அமெரிக்கா தன்னை நினைத்துக்கொண்டி ருக்கிறது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் ராணுவத்திற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 54 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். உள்நாட்டில் இதர செலவுகளுக்காக அவர்கள் திட்டமிட்டிருக்கும் தொகை ரூ.46லட்சம் கோடி மட்டுமே.

சொந்த மக்களை கைவிட்ட அரசு

இதே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரும் எண்ணிக்கையிலான மனித உயிர்களை பலிகொண்டிருக்கிறது. மனித உயிர்களை மலிவாகக் கருதும் அதன் போக்கின் காரணமாக, நிலைமை சீராவதற்கு முன்பாகவே ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இது முன்பு நினைத்ததை விட மிக அதிகமான உயிர்களை கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாக்கும் என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி மரணங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் 70 சதவீதம் அதிகரிக்கும் என்றும். ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரை நோய் தாக்கலாம் என்றும் தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்திற்கு முன் 60 ஆயிரம் மரணங்கள் எதிர்பார்க்கப்பட்டது, இப்போது அந்த எதிர்பார்ப்பு 1 லட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ‘மாடல்’, தன் சொந்த மக்களையே கைவிட்ட ஒன்று என்பதைத்தான் இது காட்டுகிறது. இவ்வாறு நாம் ஒப்பிட்டுப் பேசினால் சிலர் கம்யூனிஸ்டுகளுக்கு அமெ ரிக்காவையே பிடிக்காது. என்ன செய்தாலும் விமர்சிப்பார் கள் என்கிறார்கள். சாமானிய மக்கள் எங்கே பாதிக்கப்பட்டா லும் அதற்காக குரல்கொடுப்பது கம்யூனிஸ்டுகளின் கடமை. குரல் கொடுப்பது மட்டுமல்ல நிலைமையை மாற்றி யமைக்க போராடுவதும், சவால்களை எதிர்கொள்வதும் நம் இயல்பு.

மேன்மையும் வர்க்கத் தன்மையும் 

அமெரிக்கா என்றால் அது உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு. டாலர்தான் உலகின் செலாவணியாக இருக்கிறது. அமெரிக்க தொழில்முனைவோர் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்தியிருக்கும் பங்களிப்பு கணிச மானது. உலகில் நோபல் பரிசு பெற்றவர்களில் 383 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். 2 வது இடத்தில் உள்ள பிரிட்டன் 132 நோபல் பரிசு, ஜெர்மனி 108 பேருடன் மூன்றாவது இடம்.

அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிட்ட இந்தியர்கள் 28 லட்சம் பேர் ஆவார்கள் (2010 வரை). இப்போதும் இந்திய அரசின் கணக்குப்படி நமது மாணவர்கள் 4 லட்சம் பேர் அமெரிக்காவில் படிக்கிறார்கள். மக்கள் சீனத்திலிருந்து ஆண்டுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்கச் செல்கிறார்கள். இத்தனை நேர்மறையான அம்சங்களையும் நாம் கணக்கில் எடுக்காமல் இல்லை. ஆனாலும் கூட அமெரிக்கா வை ஏன் விமர்சிக்க வேண்டியிருக்கிறது? அந்த அரசின் வர்க்கத் தன்மைதான் விமர்சனத்திற்கான அடிப்படைக் காரணம்.

ஏகாதிபத்திய அரசு 

இந்தியாவை நாம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என வரையறுக்கிறோம். இங்கே நிலவுகிற ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, சோசலிச இலக்கினை எட்டுவதற்காக போராடிவருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நம் அள வுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் வேறில்லை. அதுவே பாஜக ஆட்சியில் அதன் தன்மையை கணக்கில் கொண்டு உத்தி உருவாக்கி தொடர்ந்து போராடுகிறோம். பன்னாட்டு மூலதனத்தோடு கைகோர்த்து செயல்படுகிற இந்திய ‘அரசு’, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிறது. இந்த அரசு நாட்டின் 90 சதவீத மக்களுக்கு எதிரான ஒன்று. எனவேதான் சுரண்டலுக்கு எதிரான நமது போராட்டம், இந்த அரசை எதிர்ப்பதாக அமைகிறது.

அமெரிக்க அரசின் வர்க்கத் தன்மை என்ன?. அது வொரு ஏகாதிபத்திய அரசு. அந்த அரசு ராணுவ மேலா திக்கத்தைக் கொண்டு உலகையே கட்டுப்பாட்டுக்குள் வைக்க துடிக்கிறது. உலகில் போர் பதற்றங்களை பயன்படுத்தியும், பதற்றங்களை தானே ஏற்படுத்தியும் ராணுவ தளவாட சந்தைக்கு தீனி போடுகிறது. தனியார் மயமாக்கப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி தொழிலும் அதன் முதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும் அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரண்டுக்குமே செலவு செய்கிறார்கள். ஏகபோக முதலாளிகள் தங்கள் ‘தயவினால்’ அமெரிக்க அரசியலை ஊழல்மயப்படுத்தி வைத்துள்ளார்கள்.

ராணுவ தளவாட வளாகம்

ராணுவ தளவாட உற்பத்தி வளாகம் என்பது 3 பகுதி களைக் கொண்டது. 1) அரசியல் பங்களிப்பு, 2) நிர்வாகத் துறையின் ஆதரவு 3) தரகர்கள் ஆதிக்கம். தொற்றுநோய் பரவலின் காலத்திலும் கூட அமெரிக்க அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது புதிய பதற்றங்களை உருவாக்கு கிறார்கள். இதனை நாம் அமெரிக்காவின் பிரச்சனை என்று மட்டும் கடந்து செல்ல வேண்டுமா? சிலர் அப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள். அந்த நாட்டின் பிரச்ச னையை அவர்கள் பார்க்கட்டும், நமக்கென்ன வந்தது என்று கேட்கிறார்கள். குறுகிய சுயநலம் மட்டுமே உண்மை யில் அந்த வாதத்தின் அடிப்படையாக அமையவில்லை. மனித குலத்தின் மீதே அக்கறையற்றவர்களால்தான் இப்படி ஒரு வாதத்தை வைக்க முடியும்.

ஏகாதிபத்திய வல்லரசுகளை நாம் வரலாற்றின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். ஏகாதிபத்திய வல்லரசுகள்தான் இரண்டு உலக யுத்தங்களை உருவாக்கி னார்கள். அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளையும் எண்ணிப் பார்ப்போம். காலனி ஆதிக்கத்திலிருந்து நம் முன்னோர்கள் உலகின் பல நாடுகளுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டு, போர் களத்தில் மாண்டுபோனார்கள்.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு நடந்த பல போர்களில் அமெரிக்காவும் மற்றும் அதனால் உருவாக்கப் பட்ட நேட்டோ நாடுகளும் செய்த பேரழிவுகள் ஏராளம். கொரிய போரில் அமெரிக்க சிப்பாய்கள் மட்டும் 54 ஆயிரம் பேர் மரணமடைந்தார்கள். வியட்நாம், இராக், ஈரான், லிபியா, ஆப்கானிஸ்தான், யுகோஸ்லாவாகியா என்று ஏராளமான போர்களை நடத்தியுள்ளனர். இதிலெல்லாம் அமெரிக்க துருப்புகள் பகடைகளாகின்றன. அந்தந்த நாடுகளின் அப்பாவிக் குடிமக்களும் அரசியல் சுதந்திர வாழ்வும் பலியாகின்றன. முதலாளிகளோ எப்போதும் போல் லாபம் கொழிக்கிறார்கள். போர்களை நடத்துவது, போர் முடிந்தபிறகு நாட்டை நிர்மாணிக்கும் ஒப்பந்தங்களை எடுத்துச் செய்வதும் என அமெரிக்க முதலாளிகள் செயல்படுகின்றனர்.

யாருக்கு ஜனநாயகம்?

இந்தக் கொள்கையின் தொடர்ச்சியாகத்தான் கொரோனா நோய்ப்பரவலில் அவர்கள் அடைந்திருக்கும் தோல்வியைப் பார்க்க முடியும். தனியார்மயமாக்கப்பட்ட பொது சுகாதாரக் கட்டமைப்பு லாப நோக்கில் செயல்படு கிறதே அன்றி மக்களைக் காப்பதற்கான வேகத்தில் அல்ல. அமெரிக்காவில் நடந்திருக்கும் மொத்த மரணத்திற்கும் அமெரிக்க அரசுதான் பொறுப்பாளி. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை வர்ணித்துக் கொள்கிற அமெரிக்காவில், யாருக்கு ஜனநாயகம் உள்ளது? என்பது இப்போது எழுப்ப வேண்டிய கேள்வி.

அமெரிக்க ஆட்சி என்பது ஏழைகளுக்கானதாகவோ, அதன் மக்களுக்கானதாகவோ இருந்ததே இல்லை. அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்கா லத்தில் மேலும் நிறவெறி கொண்ட ஒரு சமூகமாக, ஏற்றத்தாழ்வுகள் பெருகிய ஒரு சமூகமாக மாறியுள்ளது. இன வெறுப்பை முன்வைப்பது ஏற்கத்தக்க ஒரு கருத்தாக அமெரிக்கர்களிடையே அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலும் கூட மரணமடைந்தவர்களின் ஏராள மானவர்கள் கருப்பினத்தவர்களும், ஆசிய வம்சாவளி களுமே என்கிறது புள்ளி விபரங்கள். சிறுபான்மையோர் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து உணவின்றி தவிக்கின்றனர். 2018 கணக்குப்படி 56 லட்சம் அமெரிக்க குடும்பங்கள் தங்களுக்கு உணவு பாதுகாப்பில்லை என்று தெரி வித்துள்ளன. குழந்தைகள் உள்ள குடும்பங்களில் 7ல் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து இல்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் 4 கோடியே 40லட்சம் அமெரிக்கர்கள் சத்துணவு திட்டம் போன்றவற்றையே சார்ந்துள்ளனர். அமெரிக்க குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின்மை அபாயகர மான அளவில் அதிகரித்து வருகிறது என்று யுனிசெப் அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. 

கருப்பின மக்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளன. பெவ் என்ற ஆய்வகம் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்க சிறையில் உள்ள கைதிகளில் 475900 கருப்பி னத்தவர் உள்ளனர். அமெரிக்க தனியார் சிறைகளிலும் கருப்பினத்தவரே அடைக்கப்பட்டுள்ளனர். இனம் மற்றும் பாலினம் சார்ந்து கூலி வேறுபாடு நிலவிவருகிறது.

சுருக்கமாகச் சொன்னால் உலகின் போக்கை தீர்மா னிக்கிற வல்லமை படைத்த அடாவடி அமெரிக்க அரசு, தன் சொந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கிற அரசாகத்தான் இருக்கிறது. முதலாளித்துவம் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காகவும், தன் மேலா திக்கத்தை தொடர்வதற்காகவும் செலுத்துகிற அக்கறை யில் சிறு பகுதியைக்கூட சொந்த மக்களைப் பாதுகாப்பதில் செலுத்தாது என்ற கம்யூனிஸ்டுகளின் விமர்சனத்தை காலம் மெய்ப்பிக்கிறது. சோசலிசம் மட்டுமே உலகின் அனைத்து மக்களுக்கான விடியலை திசைகாட்டும் சக்தி என்பது மீண்டும் நிரூபணமாகிறது.