tamilnadu

img

கம்யூனிஸ்ட் அறிக்கை - 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருத்தமானதே!

புவி ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத சக்தியை எவ்வாறு ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தாரோ, ஆழ்மன செயல்பாடு என்ற கண்ணுக்குத் தெரியாத ஓர் அம்சத்தை எவ்வாறு சிக்மண்ட் ஃப்ராய்ட் வெளிக்கொண்டு வந்தாரோ, அதைப் போன்றே முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி முறை என்ற கண்ணுக்குப் புலப்படாத விஷயத்தின் மூலம் நமது அன்றாட வாழ்க்கையின் பொருளை மார்க்ஸ் நமக்கு வெளிப்படுத்துகிறார். 

2013ஆம் ஆண்டில் பொருளாதார ஆய்விற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சுப் பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி ஒரு மார்க்சியவாதியல்ல. இன்னும் சொல்லப் போனால் மார்க்சின் பல ஆய்வுகளை அவர் ஏற்கவில்லை. எனினும் தன்னுடைய ஆய்வில் மார்க்ஸ் கூறிய ஓர் உண்மையை அவர் வலுவாக ஏற்றுக் கொண்டார். அவர் கூறுகிறார்:

“மார்க்சின் ஆய்வுகள் பல்வேறு அம்சங் களில் இன்றும் பொருத்தமானதாகவே இருந்து வருகின்றன. மார்க்சின் காலத்தில் உருவான தொழிற்புரட்சியின் போது இதுவரை யில் கண்டிராத வகையில் “சொத்து ஓரிடத்தில் குவிவது’ (accumulation of capital) என்ற முக்கியமான ஓர் உண்மையுடன் அவர் தனது ஆய்வைத் தொடங்கினார். தன்னிடமிருந்த புள்ளி விவரங்களின் உதவியோடு அதற்குப் பதிலளிக்க அவர் முற்பட்டார்.”

மார்க்ஸ் காட்டிய பாதையை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதற்கான ஓர் உதாரணம்தான் தாமஸ் பிக்கெட்டி. 

நான்கு தொழிற்புரட்சிகள்

19ஆம் நூற்றாண்டின் இந்தக் காலப்பகுதியில் (1750-1870) தோன்றிய முதலாவது தொழிற் புரட்சி தான் புதிய தொழிற்சாலை முறையை அறிமுகம் செய்தது.   அது (தொழில்துறை பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படுகின்றன) உழைப்புப் படையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவித்தது. மிகக் குறைந்த கூலிக்கு சுகாதார வசதிகள் ஏதுமற்ற,  அபாயகரமான  நிலைமைகளில், நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசித்த இவர்களிடையே வறுமை கோரத் தாண்டவம் ஆடியது.  இந்த முதல் தொழிற்புரட்சிதான் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியிருந்த கிராமப்புற குடியிருப்புகளை நகர்ப்புற தொழில் பகுதி சமூகங்களாக மாற்றியமைத்தது. இரும்பு, நெசவாலைகளின் வளர்ச்சிக்கு இது வித்திட்டது. இந்த வளர்ச்சிதான் மனித குலத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. 

இதையடுத்து வந்த இரண்டாவது தொழிற்புரட்சிக் (1870-1914) காலத்தில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக தண்ணீரும், மின்சாரமும் அபரிமிதமான உற்பத்திக்கு வழி வகுத்தன; இக்காலக் கட்டத்தில் தான் எஃகு, எண்ணெய், மின்சாரம், ஒளி விளக்குகள், டெலிபோன், ஒலிபெருக்கிகள் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன. 1980இல் தொடங்கிய மூன்றாவது தொழில் புரட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இணையதள வசதியோடு கூடிய  செய்தி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட் பம் அறிமுகமாகியது. தற்போது நடைமுறையில் இருக்கும் நான்காவது தொழில் புரட்சி புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யவில்லை. மாறாக தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் தலை கீழ் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே  கூற வேண்டும். இக்காலப்பகுதியில் தானி யங்கி இயந்திரங்கள் (ரோபோ), செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் மூலமான கற்றல்,  Moores விதிப்படி ஒவ்வொரு பதின்மூன்று மாதத்திற்கும் இரண்டு மடங்கு வேகத்துடன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது அதன் தொடர்ச்சி டிஜிட்டல் யுகமாக மாறி உள்ளது.

மேற்கூறிய நான்கு தொழிற்புரட்சிகளுமே மனித குலத்தின் வாழ்க்கைப் போக்கைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவை.  மேலே குறிப்பிட்ட வளர்ச்சியை மார்க்ஸ்  தன்னுடைய அறிக்கையில் 172 ஆண்டு களுக்கு முன்பே எடுத்துக் கூறுகிறார்: “உற்பத்திக் கருவிகளிலும், அதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே, ஓயாது ஒழியாது புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தா மல் முதலாளித்துவ வர்க்கத்தால் வாழ முடியாது.” மேலும் “புதிதாய் உருவானவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே பழமையாகி விடுகின்றன. கெட்டியானவை யாவும் காற்றில் கரைந்து போகின்றன.”

முதலாளித்துவம் எப்படி செயல்படுகிறது?

முதலாளித்துவம் என்ற ஒரு வரலாற்று ரீதியான பொருளை முதல் முதலாக சுட்டிக் காட்டியவர் மார்க்ஸ் தான். அது எவ்வாறு எழுகிறது? எத்தகைய விதிகளின் அடிப்படை யில் அது செயல்படுகிறது? அதை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும்? என்பதை விளக்கியவர் அவர்தான். புவி ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரி யாத சக்தியை எவ்வாறு ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தாரோ, ஆழ்மன செயல்பாடு என்ற கண்ணுக்குத் தெரியாத ஓர் அம்சத்தை எவ்வாறு சிக்மண்ட் ஃப்ராய்ட் வெளிக்கொண்டு வந்தாரோ, அதைப் போன்றே முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி முறை என்ற கண்ணுக்குப் புலப்படாத விஷயத்தின் மூலம் நமது அன்றாட வாழ்க்கையின் பொருளை மார்க்ஸ் நமக்கு வெளிப்படுத்துகிறார். 

தான் எதிர்கொண்ட சமூக அமைப்பு எப்போ தும் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது என்பதை மார்க்ஸ் நன்றாகவே அறிந்திருந்தார். இதன் வாயிலாகவே முத லாளித்துவத்தின் வரலாற்று ரீதியான வடிவங் களை, அதாவது வணிகம், விவசாயம், தொழில் துறை, ஏகபோகம், நிதி, ஏகாதிபத்தியம் போன்ற வற்றை மார்க்சியத்தின் மூலமாகவே நம்மால் உணர முடிகிறது. இன்று நாம் பார்க்கும் ‘உலகமயமாதல்’ என்ற அம்சத்தையும் அவர் முன் உணர்ந்தவராக இருந்தார். 

கம்யூனிஸ்ட் அறிக்கை இவ்வாறு சொல்லுகிறது:

“முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்குத் தொடர்ந்து மேலும், மேலும் விரிவடைந்து கொண்டே செல்லும் சந்தை அவசியமாகும். இந்த அவசியமானது புவிப்பரப்பு முழுமையும் செல்லும்படி முத லாளித்துவ வர்க்கத்தை விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள  வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் குடி யேற வேண்டியதாகிறது. எல்லா இடங்களி லும் தொடர்புகளை நிறுவிக் கொள்ள வேண்டி யுள்ளது. அனைத்து உலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முத லாளி வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தி யையும், நுகர்வையும் ஓர் உலகத் தன்மை கொண்டதாகச் செய்திருக்கிறது.” இன்று நம் கண்முன் உள்ள தொழில் கள் நிரந்தரமாகவும், உழைப்பாளிகள் நிரந்தர மற்றவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். உலகம் முழுவதும் தொழிலாளர் நலச் சட்டங் களை அரசுகள் வேகமாக மாற்றி விட்டன. போராடிப் பெற்ற உரிமைகள் காற்றில் கரைந்து போயின. நீதித்துறை, நிர்வாகத்துறை அனைத்துமே மூலதனத்திற்கு பக்கபலமான சக்திகளாக  மாறியுள்ளன. இவ்வாறு உழைப் பாளிகளை 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய வைத்த தொழில் புரட்சியின் தொடக்க காலத்திற்கு மீண்டும் நம்மை அழைத்துச் செல்லும் முதலாளித்துவம்தான் மார்க்சிய த்தை ‘பழங்கதை’ என்றும்,  ‘மார்க்சியம் காலா வதியாகிவிட்டது’ என்றும் குறை கூறுகிறது.

தொழில்நுட்பப் புரட்சியின் உதவியுடன்...

1970களில் தொடங்கிய தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் உதவியுடன் முதலாளித்துவ அமைப்பு அதிகமான அளவிற்கு உலகமய மானதாக மாறிய போது விரல்விட்டு எண்ணத் தக்க பன்னாட்டு நிறுவனங்கள் உடனடி லாபத்தை ஈட்ட உலகம் முழுவதிலும் பயணித்தன. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் தாராளமயக் கொள்கை வேகமாக எல்லா துறை களிலும் அமலாகிக் கொண்டு வரும் நிலையில், முன்பு பயணிகள் வாகனத்தை உற்பத்தி செய்த ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், அம்பாசிடர் இன்று இல்லை. ஃபோர்டு, ஹூண்டாய், ஃ போக்ஸ்  வேகன், டொயோட்டா என அமெரிக்க, தென் கொரிய, ஜெர்மனி, ஜப்பான் வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் சோடா குளிர்பானங் கள் அகற்றப்பட்டு அந்த இடத்தை கோக்கோ கோலா, பெப்சி ஆக்கிரமித்துக் கொண்டன. ஏ.சி.சி சிமெண்ட்-ஐ இன்று ஸ்விட்சர்லாந்த் நாட்டு பன்னாட்டு கம்பெனியான ஹோல்சிம் வாங்கி விட்டது. நம்மூர் விஷ்ணு சிமெண்ட்-ஐ இத்தாலி நாட்டு முதலாளி வாங்கியுள்ளார். ஓலா - ஊபர் போன்ற தொழில்நுட்ப நிறு வனங்கள் உள்ளூர் வாடகை வாகனம் மூலம் சுயதொழில் செய்வோரை முடக்கி விட்டன. மார்க்சின் கூற்று இன்று எந்த அளவிற்கு நிரூபணமாகி வருகிறது என்பதை உலகப்  பொருளாதாரத்தில் நடந்து வரும் கேலிக் கூத்தினை பார்த்தாலே தெரிய வரும்.  இன்றைய அனுபவமிக்க பொருளாதார மற்றும் நிதி விற்பன்னர்களிடையே கூட உள்ள அடிப்படையான கருத்து என்னவென்றால், “சந்தைக்கு வரும் மூலதனம், (தொழிற்சாலை கள் தொடங்கும்) முதலீடாக மாறும். இது நாட்டின் வளர்ச்சி  விகிதத்தை உயர்த்தும்” என்பது. ஆனால் UNCTAD கூறுகிறது: “இது  ஒரு மாயை. ஏனெனில் இப்படி ஏற்படும் பணப்புழக்கம் நிதி சார்ந்த வர்த்தகத்திற்கு செல்லுமே தவிர தொழில் முதலீடாகவோ, உற்பத்தியை உயர்த்தவோ, சேவைத் துறைக்கோ அல்லது மக்களின் நுகர்வுக்கோ உதவிடாது. ஏற்கனவே பொதிச் சுமையைத் தாங்கும் நிதிக் கொள்கைகள், இனி உற்பத்திக் கான முதலீட்டை தூண்டிட இயலாமல் வலு இழந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த மூலதனம் செலவீனமாக ஆனதே தவிர நாட்டின் வளர்ச்சிக்கு உதவவில்லை.”

இன்றைக்கு அளவிட முடியாத அளவில் உலகக் கடன், நிதி சொத்துக்களை அடைவ திலேயே செல்கிறதே தவிர - உற்பத்தி திறனை உயர்த்த முன்வரவில்லை. இப்போக்கு நிதித்துறைக்கும், உண்மையான பொருளா தார நடவடிக்கைக்கும் இடையே உள்ள கவலை தரக் கூடிய  இடைவெளியைக் காட்டுகிறது. மூலதனம் உற்பத்தித் துறையில் ஈடுபட்டி ருந்தாலும் வேலைவாய்ப்பை உயர்த்த வில்லை. வேலையற்ற வளர்ச்சி என்பதே அதன் விளைவாக நிகழ்கிறது. மூலதனம் பெரும்பாலும் வருமானம் குறைவாக உள்ள அரசுப் பத்திரங்களில் முதலீடாகிறது. இந்நிலை மை மூலதன சந்தைக்கு வருங்கால பொரு ளாதார வளர்ச்சியின் மேல்கொண்டுள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. ஆழமான துயரத்தில் இன்றைய நாட்டு அமைப்புகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளே இவை.

தனியார் மூலதனம், சமூகத்திற்கு தேவை யான முதலீடுகளில் ஈடுபடாத நிலையில், அரசாங்கம் தேவையான நிதியை திரட்டி சமூகநலத்திட்டங்களுக்காக செலவிடல் வேண்டும். இவ்விசயத்தில் UNCTAD  அமைப்பு, மாசற்ற எரிசக்தி, விவசாயம், போக்கு வரத்து ஆகியவற்றுக்கான கொள்கைகளோடு இணைந்து திட்டமிட்ட உள்கட்டமைப்பு வேலை களில் முதலீடு செய்திடல் வேண்டும்; இதன் மூலம் சுத்தமான, மறு சுழற்சி எரிசக்தி, தூய்மை யான குடிநீர் மற்றும் போக்குவரத்து தொடர்பு களுக்கு வழிவகுத்திடல் வேண்டும்; அனை வருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்து தர மான கல்வி, சுகாதாரம், நிலையான வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மேற்கூறிய எதையும் கவனத்தில் கொள்ளாத தலைவர்களையே இன்று நாம்  காண்கிறோம். இவர்கள்தான் உலக பொருளா தார மன்றக் கூட்டத்தில் கூட்டமாகக் கலந்து கொண்டு ‘பருவநிலை மாற்றம்’ பற்றி ‘வாய் கிழிய’ பேசினார்கள். ஏதோ பருவ நிலை மாற்றம் என்பது புதிதாக தோன்றிய பிரச்சனை  போல. அலை அலையாய் எழும் ஸ்திரமற்ற நிதி நிலைமைகளும், பாலைவனமாக காய்ந்து போன முதலீட்டு நிலைகளும் மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பருவ நிலை மாற்றத்தை’ ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக எப்படிப் பார்க்க முடியும்?.

ஆக்ஸ்பாம் அறிக்கை உறுதிசெய்யும் மூலதனக் குவிப்பு

ஒவ்வொரு வருடமும் டாவோஸில் பங்கேற்கும் ஆக்ஸ்பாம் என்ற அமைப்பு உலகில் நிலவும் சமச்சீரற்ற நிலைமைகளை விளக்கி அறிக்கை அளிக்கிறது. இந்த ஆண்டு அவர்கள் அளித்துள்ள அறிக்கை நூறு கோடி டாலருக்கு மேல் சொத்துக்கு சொந்தக் காரர்களான 2153 பேர் வைத்திருக்கும் சொத்தானது உலகில் 460 கோடி மக்கள் வைத்திருக்கும் சொத்தின் மொத்த மதிப்பை விட அதிகமாக உள்ளது; அதாவது உலகின் 60 சத மக்களின் சொத்தை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிட்டுள்ள வேறுசில வியத்தகு விபரங்களையும் பார்ப்போம்.

1. உலகில் உச்சாணிக் கொம்பில் உள்ள 22 பணக்காரர்களின் சொத்துக்கள் ஒட்டுமொத்த  ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து மக்களின் சொத்தை விட அதிகம்.

2. உலகில் உள்ள 1 சதம் உச்ச நிலை பணக்காரர்களின் சொத்து மதிப்பு 690 கோடி மக்களின் சொத்தை விட அதிகம்.

3. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் பிரமிட் கட்டப்பட்ட காலத்திலிருந்து ஒரு நாளைக்கு 10,000 டாலர் என்று சேமித்து வைத்திருந்தால் அந்தத் தொகை இன்றைக்கு உலகில் உள்ள முதல் ஐந்து பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பாகம் அளவிற்குத்தான் வரும். 

- இவை அனைத்துமே மார்க்ஸ் சுட்டிக்காட்டிய மூலதனக் குவிப்பை (Accumulation of Capital) 21ம் நூற்றாண்டிலும் நிரூபிக்கிறது. 

4. உலகில் உள்ள அனைத்து பெண்கள், சிறுமியர் ஒவ்வொரு நாளும் 1250 கோடி மணி நேரம் கூலியற்ற பராமரிப்பு வேலைகளை செய்து வருகிறார்கள். இது இன்று உலகில் தொழில்நுட்பத்துறையில் நிகழும் மொத்த வேலையைப் போல் மூன்று மடங்காகும்.  இப்படிப்பட்ட சமச்சீரற்ற நிலைமைகளை வெளியிட்டும் கூட, டாவோசில் நடந்த மாநாட் டில் இடம்பெற்ற உரையாடல்கள் வறட்டுத் தனமாக, இந்த உலக நிகழ்ச்சி நடப்புகளுக்குத் தொடர்பு அற்றவையாக இருந்தன.

இன்று உலகில் உள்ள நாடுகளிடையே ஒரு பொருளாதார யுத்தம் நடந்து கொண்டி ருக்கிறது. இந்த யுத்தம் நாம் வசிக்கும் பூமியை பாதிக்கிறது. ஆனால் இந்த யுத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவுமில்லை. இந்த பொருளாதார யுத்தம் மனிதர் களின் ஆசைகளை நிர்மூலமாக்கிக் கொண்டி ருக்கிறது. அவர்களது கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது; அவர்களது நம்பிக்கை களை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகமயமான, நிதி மூலதனத்தின் ஆட்சி  நடைபெற்று வரும் இந்த 21ஆம் நூற்றாண்டி லும், முதலாளித்துவத்தின் முடிவை உறுதி யாக முன்னறிவித்த கம்யூனிஸ்ட் அறிக்கை  பொருத்தமானது தான் என்பதையே மேற் கூறிய விஷயங்கள் உறுதிப்படுத்துகின்றன.