tamilnadu

img

அய்யங்காளி நினைவுகளும் கேரள அரசியலும்- கொடியேரி பாலகிருஷ்ணன்

அய்யங்காளியின் பிறந்தநாள் நினைவு கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக் காக பயன்படுத்த பினராயி விஜயன் அரசுக்கு  ஊக்கமளிப்பதாகும். நாட்டின் வளர்ச்சிக்கும் புறக்கணிக்கப்பட்ட பகுதியினரின் உயர்வுக்கும் அய்யங் காளி முயன்றபோது பழமைவாத பிற்போக்கு சக்திகள் என்னவெல்லாம் அராஜகங்களும் தடைகளும் ஏற்படுத்தினர். அவற்றுக்கெல்லாம் சவால் விடுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களை மட்டுமல்ல,  முற்போக்கு சிந்தனையாளர்களையும் சமத்துவவாதி களையும் ஒருங்கிணைக்க அய்யங்காளி கவனம் செலுத்தினார். பட்டியலின பகுதியினருக்கு கல்வி கிடைப்பதற்காக பள்ளிக்கூடங்களை அமைத்தபோது சாதிய பிற்போக்குவாதிகளும் பண்ணையார்களும் அதை எதிர்த்தது மட்டுமல்ல, பள்ளிக்கூடத்திற்கு தீ வைத்து எரித்து நாசப்படுத்தவும் செய்தனர்.

  தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தப்பட்டவர் களுக்கு அன்று நடமாடும் சுதந்திரம்கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு எதிராக திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெங்ஙானூரில் நடத்திய “வில்லுவண்டி” பயணம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல.  தொலைதூர பயணங்களுக்காக உயர்சாதி பண்ணை யார்கள் பயன்படுத்தும் வில்லுவண்டியில் ஏறி அய்யங்காளி வெள்ளை பனியன் அணிந்து முழுநீள பட்டு வேட்டியை கட்டிக்கொண்டு கின்னரி தலைப்பாகை அணிந்து பயணம் சென்றபோது தடுக்க சாதிக் கோமான்கள் விரைந்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக நீட்டிப்பிடித்த வாளுடன் சவால் விடுத்தபடி பயணத்தின் இலக்கை அடைந்தார். நடமாடும் சுதந்திரத்துக்கான துணிச்சலான அந்த போராட்டம் ஏற்படுத்திய சமூக பிரதிபலிப்பு வெடி குண்டைவிட அதிக சக்தி கொண்டது. 1893 இல் அந்த வரலாற்று சிறப்புமிக்க வில்லுவண்டி போராட்டம் நடந்தது.

கல்விக்கான போராட்டம்
புலையர் சமூகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, அய்யங்காளியின் அழைப்பை ஏற்று திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத் தொழி லாளர்கள் நடத்திய வேலைநிறுத்தமும் வரலாறு படைத்தது. “எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்குள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் ஜென்மிகளின் (பண்ணை யார்) வயல்களில் நுழைய மாட்டோம்” என்று அய்யங்காளி அறிவித்தார். தனது சமூகத்தினர் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை பண்ணையாளர்களால் சாப்பிட முடியும். ஆனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிப்பது தீண்டத்தகாததா என்று கேள்வி எழுப்பினார். இதை சுட்டிக்காட்டியே வேலைநிறுத்தம் நடந்தது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தலையிட வேண்டிய கட்டாயம் திருவிதாங்கூர் முடியாட்சிக்கு ஏற்பட்டது. அதன்படி பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்க சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொத்தும் நகையும் வைத்துக்கொள்ள சாதியும் மதமும் பார்த்த காலமாக ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்பு வரை இருந்தது. நகை அணிவதற்கான சுதந்திரத்திற்காக 1915 ஆம் ஆண்டில் பெரிநாட்டில் கல் மாலைகளை உடைத்தெறிந்து பெண்கள் நடத்திய கிளர்ச்சி அய்யங் காளியின் அழைப்பின் பேரில் நடந்தது. இத்தகைய போராட்டங்கள் மற்றும் அய்யங்காளி போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் எண்ணங்கள் மூலம் வளர்ந்த கேரளாவின் அடிப்படை மதிப்புகளை பினராயி விஜயன் அரசாங்கம் பாதுகாத்து வளர்த்து வருகிறது என்பதை கடந்த  நான்கரை ஆண்டு ஆட்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

தோற்றுப்போன நம்பிக்கையில்லா தீர்மானம்
இத்தகைய அரசாங்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை யுடிஎப் கொண்டு வந்தது. ஒடுக்கட்டப்பட்டவர்களுக்கு நல்ல கல்வி, தங்குமிடம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற அய்யங்காளியின் கனவை நனவாக்குவதில் எல்.டி.எப் அரசு பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. லைப் (வீட்டுவசதி) திட்டமும், பள்ளிகள் நவீனமய மாக்கல் மற்றும் தலித்துகளை கோயில் பூசாரிகளாக நியமித்தல் ஆகியவை அந்த பாதையின் கலங்கரை விளக்கங்கள். இது தெரியாமல், பினராயி அரசின் ராஜினாமாவுக்கு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தபோது, அவர்கள் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் நெருக்கடியில் சிக்கினர்.  யுடிஎப் ஆட்சியின் போது உம்மன் சாண்டி அரசுக்கு எதி ராக எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக இருந்த இந்த கட்டுரையாளரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆட்சியின் கொள்ளைகளை அன்று  பட்டியலிட்டது எதிர்க்கட்சி. அந்த தீர்மானம் சட்டசபை யில் தோல்வியடைந்தது, ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.ஆனால், இன்று சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எல்டிஎப்புக்கு சாதகமான வாக்கு  பலமும் மக்களின் ஆதரவும் உள்ளது. தோல்வியுற்ற நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்  மூலம் எல்டிஎப் அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு களின் மோசமான தன்மை அம்பலமானது. தொலைக் காட்சி சேனல்களில் தொகுப்பாள நீதிபதிகள் முன்வைக்கும் சேட்டைகளைப்போல சில யுடிஎப் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறியபோது, அவர்களின் முகம்தான் சிதில மானது. முதல்வர் மற்றும் ஆளும்கட்சியினர் தெளி வான, பகுத்தறிவும் உண்மைகளும் நிறைந்த பதில் களை அளித்தனர். போதனை செய்யப்போய் இருந்த புத்தி யும் பறிபோன நிலையே அரசுக்கு எதிராக அவநம்பிக்கை யுடன் வந்த எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டது.

பாஜகவுடன் யார் எதிரி? யார் உறவு?
135 வயதான காங்கிரஸ் கட்சியானது தனது சொந்த தலைவரைக்கூட தேர்ந்தெடுக்க இயலாமல் கேடுகெட்டு உழலும் போதுதான் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இது நடந்து கொண்டிருந்த நேரத்தில் 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி கடிதம் எழுதியதையடுத்து செயற்குழு கூட்டம் கூடியது. சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக வைக்க செயற்குழு முடிவு செய்த போதிலும், காங்கிரசில் ஏற்பட்ட நெருக்கடி தீர்க்கப்படவில்லை. இது ஒரு அமைப்பின் பிரச்சனை மட்டுமல்ல, அரசியல்  பிரச்சனையும் கூட. பாஜகவுடன் யார் எதிரி யார் உறவு என்பதுதான் இரு பிரிவினரின் வாதம். ராகுல், கிளர்ச்சி யாளர்களை பாஜக ஏஜென்டுகள் என்று அழைத்தபோது, கபில் சிபல் அது தான் அல்ல என்றும் இனி காங்கிரசில் இல்லை என்றும் டிவீட் செய்துள்ளார். ராகுல் மன்னிப்பு கேட்ட பின்னர் கபிலின் ராஜினாமா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில், காஷ்மீர் போன்ற பிரச்சனைகள் குறித்த காங்கிரஸின் மென்மையான இந்துத்துவா நிலைப்பாட்டை குலாம் நபி ஆசாத், கபில்  சிபல் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள் ளனர். இவ்வாறு தேசிய அளவில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் நெருக்கடி அதைவிட கடுமையாக கேரளாவில் உள்ள காங்கிரஸையும், கட்சி தலைமையிலான யுடிஎப்பையும் பாதித்துள்ளது. காங்கிரஸை காந்தி குடும்பம் வழிநடத்த ஆதரவாக ஏ.கே. அந்தோணி, உம்மன் சாண்டி, ரமேஷ்  சென்னிதலா, வேணுகோபால், முல்லப்பள்ளி ராமச்சந்தி ரன் ஆகியோர் உள்ளனர். கட்சி தலைமைக்கு பின்னால் ஒரு பாறை போல் உறுதியாக நிற்க வேண்டும் என்பது அந்தோணியின் வார்த்தை. ஆனால் பாறைகள் முன்பு இருந்ததைப் போல உறுதியாக இல்லை. ஏனென்றால் ஹை கமாண்ட் , லோ கமான்டாக மாறி விட்டது. ஆனா லும், அவர்கள் நேரு குடும்ப கூட்டணியில் உள்ளனர்.

வாலாக தொடர வேண்டுமா?
அதனால்தான், பிரதமரின் தலைமையில் அயோத்தி யில் ராமர் கோயில் கட்டுவது குறித்தும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளிலும் காங்கிரஸின் மென்மையான இந்துத்துவ தேசிய நிலைப்பாடை நிராகரிக்க கேபிசிசியோ, எதிர்க்கட்சியான காங்கிரசோ தயாராகவில்லை. ராமர்கோயில் பிரச்சனையில் இரண்டு வரி செய்திக்குறிப் பில் காங்கிரசுக்கு எதிரான தனது எதிர்ப்பை அடக்கிய முஸ்லிம் லீக்கின் தலைமையிடமிருந்து அணிகள் மேலும் விலகிச் செல்கின்றன. தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மென்மையான இந்துத்துவக் கொள்கையில் உறுதியாக நிற்கும் காங்கிரஸின் வாலாக தொடர வேண்டுமா என்கிற கேள்வி, கூட்டணி கட்சிகள் மற்றும் அவற்றின் அணிகளிடம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு யுடிஎப் எதிர்கொள்ளும் அமைப்பு மற்றும்  அரசியல் ரீதியான நெருக்கடியின் ஆழத்தை மாநிலங் களவை இடைத்தேர்தல், நம்பிக்கையில்லா தீர்மான வாக்குப்பதிவுகள் தெளிவு படுத்தின. எல்டிஎப்புக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததன் மூலம் விட்டத்தில் இருந்ததை எடுக்கவும் முடியவில்லை, அக்குளில் இருந்ததும் தவறிப்போச்சு என்கிற அவலநிலை ஏற்பட்டது. இரண்டு கேரள காங்கிரஸ் (எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் யு.டி.எப் மீது அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நெருக்கடியில் யுடிஎப்
இது யுடிஎப்பில் ஏற்பட்ட நெருக்கடியை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கேரள காங்கிரஸை வழிநடத்தும் ஜோஸ் கே.மணி, யுடிஎப் வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை, யுடிஎப் முடிவு தனது கட்சிக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்தியது. கேரள காங்கிரஸ் (எம்) என்பது தேசிய அளவில் ஐக்கிய முற்போ க்குக் கூட்டணியின் ஒரு அங்கமாகும். அந்த கட்சிதான் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் வேட்பாளருக்கு வாக்களிக்காததோடு, சுதந்திரமான நிலைப்பாட்டை எடுத்தது. கோட்டயம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் ஜோஸ் பிரிவு  யுடிஎப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அந்த முன்னணியின் தலைமை அறிவித்திருந்தது. மூழ்கும் கப்பலில் இருந்து முன்னதாகவே தப்பித்ததில் ஜோஸ் கே.மணி மற்றும் அவரது குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைவர்கள் ஜோஸ் பிரிவை மீண்டும் யுடிஎப்-க்குள் கொண்டுவருவதற்கு பல ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அது தோல்வியடைந்தது. இந்த பின்னணியில் தான் மாநிலங்களவை இடைத்தேர்தலில் யுடிஎப்பில் பிளவு ஏற்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சிப் போக்கு. யுடிஎப் உள்மோதல்கள் எல்லை கடந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் யுடிஎப்பின் வலிமையையும் இருப்பையும் கடுமையாக பாதிக்கும். இது முன்னணியின் அரசியல் தன்மையில் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறது.

வலுவான எல்டிஎப்
எல்டிஎப் ஒரு கருத்தியல், அரசியல், அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்த அரசியல் கூட்டணியாகும். பிளவுக்கு முன்னில் யுடிஎப் உள்ளது. எனவே, யுடிஎப் இன் உள் சண்டையில் எல்டிஎப்போ சிபிஎம்மோ தலையிடாது. எவ்வாறாயினும், யுடிஎப்-ஐ விட்டு வெளியேறும் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அணுகுமுறை குறித்த கூட்டு விவாதங்கள் மூலம் எல்டிஎப் ஒரு நிலை ப்பாட்டை எடுக்கும். யுடிஎப் மற்றும் பாஜகவை பலவீனப் படுத்தும் பொதுவான இலக்கையும் இது பலப்படுத்தும். எவ்வாறாயினும், அரசின் உறுதித்தன்மையை சீர்குலைக்க கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சியின் பலத்தை நீர்த்துப்போக வைத்தது. சட்டசபையில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி, செயலகத்தின் ஒரு பிரிவில் ஏற்பட்ட சிறிய தீ பற்றி தவறான கதைகளுடன் களமிறங்கியது. ஊடகங்களில் ஒரு பகுதியினர் கையும், மெய்யும் மறந்து அவர்களுக்கு உதவினர். ஆனால் இவர்கள் நடத்தும் அரசுக்கு எதிரான பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை. செயலகத்தில் நிறுவப்பட்ட மின்-கோப்பு முறைமை காரணமாக, தீ ஏற்பட்டால் பொதுவாக கோப்புகள் இழப்பு ஏற்படுவதில்லை. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், பொய்களை பரப்புகின்ற காங்கிரஸ்-பாஜக-முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்களுக்கான பலன் வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிடைக்கும். அய்யங்காளி போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் நினைவு அவ்வாறு செய்ய மக்களை ஊக்குவிக்கும்.

-தேசாபிமானியிலிருந்து 
தமிழில்: சி.முருகேசன்