tamilnadu

img

கோயபல்ஸை மிஞ்சும் அமித் ஷா - பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தின் போது பல்வேறு உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரி வித்தார். இதே போன்றே என்.பி.ஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் என்.சி.ஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வடிகட்டிய பொய்யை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் 24 அன்று அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை ஆகும். நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும் போது “குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும்” என்று அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல்தான் அமித்ஷா இந்த அறிவிப்பைச் செய்தாரா?

தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அமித்ஷா குறிப்பிட்டிருப்பதும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த நவம்பர் 26, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் டி.என்.சீமா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) முதல் கட்ட நடவடிக்கை ஆகும்” என்று கூறி யுள்ளார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லமல் தான் அமைச்சர் இவ்வாறு பதில் சொன்னாரா என்பதை அமித்ஷா விளக்க வேண்டும்.

இதே போல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி,  குடியுரிமை சட்டம் 1955 ஒவ்வொரு இந்தியனையும் கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க  வழிவகுக்கின்றது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை நிறைவு செய்ய வேண்டும். அதன் முத்தாய்ப்பாக தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆர்.சி) உருவாக்கப்படும்.  தேசிய குடி மக்கள் பதிவேட்டில் உள்ள ஒவ்வொருவருடைய தரவுகளை சரிபார்த்து தேசிய குடிமக்கள் அடையாள அட்டை வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் ஒருவர் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விவரித்திருக்கும் போது அவை இரண்டுக்கும் தொடர் பில்லை என அமித்ஷா குறிப்பிடுவது வடிகட்டிய பொய் அன்றி வேறில்லை.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர்கள் இருவர் அளித்த இந்த பதில்கள் முந்தைய மோடி அரசில் நிகழ்ந்தவை என்று தனது வாதத்தை அமித்ஷா நியாயப்படுத்துவாரேயானால் அவர் உள்துறை அமைச்ச ராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 31ல்  வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப் படும்” என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்க போகிறார்.

இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்திய குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்த வழிவகையைச் செய்கிறது. இந்திய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2003ல் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசின் சதிகளை நன்கு உணர்ந்துள்ள கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. அதேபோல், தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்பதே தமிழக மக்கள் விருப்பம்.

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட் டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பில்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றும் வரையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டும்.  சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஏ புதைக்குழிக்கு அனுப்பும் வரை நாம் ஓயக் கூடாது.

கட்டுரையாளர் : தலைவர், மனித நேய மக்கள் கட்சி

;