வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நாடு முழுவதும் 225 போலி பில்களின் மூலம் சுமார் 1314.77 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வாட் வரிமுறைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி முறையில் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரி பயன்பாடு மற்றும் நிகர வரி செலுத்துதல் என அனைத்தையும் ஜிஎஸ்டி நெட்வர்க் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்திருந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்ன்கள் மற்றும் ஆண்டு இறுதி ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை ஜிஎஸ்டி ஆணையமும், ஜிஎஸ்டியின் தணிக்கைத் துறையும், வருமான வரித்துறையும் மிகத் தீவிரமாக ஆராய்ந்து தணிக்கை செய்து பார்த்ததில் சுமார் 396 ரிட்டர்ன்களில் போலியாக கொள்முதல், விற்பனை பில்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 5887.54 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி பயன்பாட்டை ரீஃபண்டாக பெற்று வரி ஏய்ப்பும், வரி மோசடியும் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 225 ஜிஎஸ்டி ரிட்டன்களில் போலியாக பில்களை தயாரித்து சுமார் 1314.77 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிபயன் ரீஃபண்ட் திரும்பப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.