1919 - இங்கிலாந்தில் நிலவிய, பெண்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற முடியாத நிலையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘பாலின தகுதியின்மை (நீக்க) சட்டம் 1919’ அரச ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் எலிஸா ஓர்ம். இவர், 1888இல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், சொலிசிட்டராகவோ, பாரிஸ்ட்டராகவோ பணியாற்ற அனுமதிக்கப்பட்டவில்லை. இங்கிலாந்தில் வழக்கறிஞர்கள் இரு வகையாக உள்ளனர். சொலிசிட்டர் என்பவர் பொதுவாக நீதிமன்றத்திற்கு வெளியே சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சட்ட ஆவணங்களுக்கான வரைவு உருவாக்குதல் முதலான பணிகளிலும், பாரிஸ்ட்டர் என்பவர் நீதிமன்றத்தில் வாதாடுபவராகவும் உள்ளனர். இருதரப்பும், மற்றவரின் பணிகளையும் செய்வதும் நிகழ்ந்தாலும்கூட, மேல் நீதிமன்றங்களில் வாதாட பாரிஸ்ட்டர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. சொத்து வாங்குதல், விற்பதில் சட்ட நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ளும் கன்வேயன்சர் என்ற தொழிலுக்கு வழக்கறிஞராக இருப்பது அவசியமில்லை என்பதால், வழக்கறிஞராக அனுமதிக்கப்படாத ஓர்ம் அத்தொழிலில் ஈடுபட்டார். நீதித்துறையில் பெண்களுக்கு அனுமதியில்லாத நிலைகுறித்து, 1914இல் தொடுக்கப்பட்ட வழக்கில்கூட, மேல்முறையீட்டு நீதிமன்றம், நபர்(பர்சன்) என்பதற்கான சட்ட வரையறையில் பெண்கள் இடம்பெறவில்லை என்றே தீர்ப்பளித்தது. அப்படியான சூழலில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டு, 1922இல் ஐவி வில்லியம்ஸ் முதல் பெண் வழக்கறிஞரானார். (அவர் வழக்கறிஞராகப் பணியாற்றவே இல்லை என்பது தனிச்செய்தி!) இங்கிலாந்தின் ஆளுகையின் கீழிருந்த கனடா, 1897இலேயே பெண்களை வழக்கறிஞர்களாக அனுமதித்துவிட்டது. க்ளாரா ப்ரெட் மார்ட்டின் முதல் பெண்ணாக 1891இல் சட்டத்தில் பட்டம் பெற்றபோது, இதே ‘பர்சன்’ வரையறையால் வழக்கறிஞராக அனுமதி மறுக்கப்பட்டார். ஒண்ட்டாரியோ சட்டமன்ற சபாநாயகராக இருந்த வில்லியம் டக்ளஸ் பால்ஃபோர்ட், இந்த வரையறையைத் திருத்த ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். 1892இல் அது நிறைவேற்றப்பட்டு, க்ளாரா முதல் பெண் வழக்கறிஞரானார். நெதர்லாந்து 1903இலும், நார்வே 1904இலும், டென்மார்க் 1909இலும் பெண்களை நீதித்துறையில் அனுமதித்துவிட்டன. இவற்றுக்கு முன்பே 1869இல் அமரிக்காவில் ஆரபெல்லா மான்ஸ்ஃபீல்ட் என்ற பெண் வழக்கறிஞராகியிருந்தாலும், ஃப்ரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ஃப்ரான்சில் வழக்கறிஞராகப் பணியாற்றிய விக்டோரீ-டி-விலிரோவெட் என்பவரும், 1500இலேயே இத்தாலிய நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய கியுஸ்ட்டினா ரோக்கா என்பவருமே தற்கால உலகின் முதல் பெண் வழக்கறிஞர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்!
-அறிவுக்கடல்