இங்கிலாந்து ஓட்டல் ஒன்றில் ஒரு பீருக்கு சுமார் 55,000 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் சுமார் 48 லட்சம்) பில் போட்ட சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் பீட்டர் லாலொர் மான்செஸ்டரில் உள்ள மால்மெய்சன் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்த ஓட்டலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒரு பீர் வாங்கி அருந்தியுள்ளார். இதற்கு அந்த ஓட்டல், சுமார் 55,000 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் சுமார் 48 லட்சம்) பில் போடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பீட்டர், இதுகுறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதை அடுத்து, அந்த ஓட்டல் ஊழியர் தவறுதலாக 5.50 பவுண்டுகளுக்கு பதிலாக 55,000 பவுண்டுகள் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து, ஒட்டல் நிர்வாகம் பீட்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பீட்டரிடம் வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என்று ஓட்டல் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.