ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் பற்றி எறியும் காட்டுத்தீ காரணமாக, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகின்றது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் வசிக்கிற சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் காட்டுத்தீ ஏற்பட்டது. கான்பெராவின் தென்பகுதியில் 18,500 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கி உள்ளது.
இந்நிலையில் கான்பெராவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக அங்கு காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது. இதனால், கான்பெரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.