tamilnadu

img

3 கண்கள் கொண்ட பாம்பு - சமூக வலை தளங்களில் வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3 கண்கள் கொண்ட பாம்பு குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதம் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் வடக்கு மண்டல வனவிலங்கு பூங்காவில் பணிப்புரியும் சிலர் வழியில் வினோத பாம்பு கிடந்ததை பார்த்தனர்.


இந்த பாம்பின் அருகில் சென்ற குழுவினர் அதனை மிகவும் நெருக்கமாக எடுத்து பார்த்தனர். இந்த பாம்பு பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் பாம்பு. இது கார்பெட் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. மேலும் மூன்று கண்கள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தங்கள் கைகளில் இருந்த செல்போன் மூலம் புகைப்படமெடுத்தனர். மூன்றாவது கண், மற்ற இரண்டு கண்களை போலவே இயல்பாக செயல்படுவதையும் அறிந்தனர்.  


இந்த புகைப்படங்களை வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா நேற்று அதிகாரப்பூர்வமாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்த படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காண்பவரை வியப்பில் ஆழ்த்தும் இந்த பாம்பு, பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளதாகவும் பார்வையாளர்கள் கமெண்ட்டில் கூறி வருகின்றனர். 


இந்த பாம்பு குறித்து வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா தனது பேஸ்புக் பக்கத்தில், ‘இந்த மூன்று கண்கள் கொண்ட பாம்பு, வறட்சி நிலவப்போவதற்கான அறிகுறியாகும். இந்த பாம்பை எங்கள் குழுவினர் ஆர்ம்ஹென் நெடுஞ்சாலையில் கண்டறிந்தனர். இது 40செ.மீட்டர் நீளம் கொண்டதாகும். பாம்புகள் சாதாரணமாக இயற்கை காரணிகளுடன் நன்கு தொடர்பு கொண்டது. இயற்கையில் ஏதோ மாற்றம் நிகழப்போகிறது என்பதை உணர்த்தவே இந்த பாம்பு வெளிப்பட்டிருக்கிறது’ என பதிவிட்டிருந்தது.

ஆனால் பாம்பு பிடிபட்ட பின்னர் சில வாரங்களிலேயே அது உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


;