ஆந்திராவில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான பைப்லைனில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம், செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு நிறுவனம் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2 நாட்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக வாயு கசிந்து வருகிறது. பயங்கர ஓசையுடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் வாயுவை நிறுத்தும் முயற்சியில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உப்பிடி கிராமத்தில் மின்சாரம் மற்றும் செல்போன் டவர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அருகில் உள்ள முகாம்களில் மாவட்ட நிர்வாகம் தங்க வைத்துள்ளது.
அவ்வப்போது கேஸ் கசிவு ஏற்படுகிறது. இதனால் தீ விபத்து குறித்த அச்சத்துடன் வாழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.