tamilnadu

இந்நாள் ஜுன் 10 இதற்கு முன்னால்

1916 - சிரியாவிலிருந்து, ஏமன் வரையிலான பகுதிகளைக் கொண்ட சுதந்திர அரபுநாடு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரபுக் கிளர்ச்சி, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக  தொடங்கியது. இப்பகுதியைத் தனி அரபுநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்துதான் தூண்டிவிட்டது. எகிப்துக்கான இங்கிலாந்துத் தூதராக இருந்த ஹென்றி மக்மகோன், (இந்திய சீன எல்லைப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கிற மக்மகோன் கோட்டை உருவாக்கிய அதே மக்மகோன்தான்! ஆங்கிலேய இந்தியாவில் பஞ்சாபில்தான் இவர் பிறந்தார்!) மெக்காவின் ஷெரீஃபும் அமீருமாக இருந்த ஹுசேன்-பின்-அலிக்கு  1915-16களில் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களில், அரபுக் கிளர்ச்சியை உருவாக்கினால், ஹுசேன் வரையறுக்கிற எல்லைகளுடன் சுதந்திர அரபுநாட்டை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று ஆசைகாட்டினார். 1914 ஜூலையில் முதல் உலகப்போர் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில்,  நவம்பரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஒட்டோமான் பேரரசு போரில் குதித்தது. மெக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஒட்டோமான் பேரரசின் ஆளுனரோடு ஹுசேனின் உறவுநிலை சரியில்லாமல் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டோமான் பேரரசுக்குள் கலகம் விளைவிக்கவே இங்கிலாந்து இதைச் செய்தது. ஏற்கெனவே, பாரசீக, அரபு மொழிகள் கலந்த மொழியான ஒட்டோமான் துருக்கிய மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்த ஒட்டோமான் பேரரசின்மீது அரேபியர்களுக்கு வருத்தமிருந்தது. சரியாகச் சொன்னால், 1821இலிருந்தே கல்வியில் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும், அரேபியப் பகுதிகளுக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதான கோரிக்கைகள் உருவாகியிருந்தன. இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியைத் தூண்டிய இங்கிலாந்து, இக்கிளர்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுக்கு தனிநாடு உருவாக்கித்தர உறுதியளிக்கும் பால்ஃபோர் பிரகடனத்தை 1917 நவம்பர் 2இல் வெளியிட்டது. ஒட்டோமான் பேரரசிடமிருந்து கைப்பற்றப்படும் பகுதிகளை இங்கிலாந்தும், பிரான்சும் பங்கிட்டுக்கொள்வது என்ற சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தம் 1916இலேயே மேற்கொள்ளப்பட்டிருந்ததும் பின்னாளில் வெளியானபோதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அரேபியர்கள் உணர்ந்தனர். மத்தியக் கிழக்கில் இன்றளவும் நிலவும் சிக்கல்களுக்கு அடிப்படையாக மக்மகோனின் கடிதங்களும், அரபு-மேற்கத்திய உறவுகளின் திருப்புமுனையாக சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தமும் அமைந்தன. (ஒப்புக்கொண்டபடி அரபுப் பகுதியை தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது, பாலஸ்தீனப் பிரிவினை உள்ளிட்ட செய்திகள் இத்தொடரில் 2018 நவம்பர் 29இல் இடம்பெற்றுள்ளன.)