tamilnadu

அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிதிக்க இந்தியா முடிவு

புதுதில்லி, ஜூன் 15- அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரி உயர்வை அமல்படுத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளார். அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைப் பெருமளவில் உயத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவிகிதம் வரையில் வரிகளை உயர்த்தியது. இதற்கு இந்தியாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தப் போவதாகக் கடந்த ஆண்டில் அறிவித்தது. எனினும், இதுகுறித்து அமெரிக்க அரசு நடத்திய பேச்சுவார்த்தையால் இந்த வரி உயர்வை அமல்படுத்துவது இதுவரையில் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் மீதான வரி உயர்வை ஞாயிறு (ஜூன் 16) நடைமுறைப்படுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள், பாதாம், கொண்டைக் கடலை, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 200 மில்லியன் டாலர் மதிப்பிலான 29 அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்படுகின்றன. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை அமெரிக்கா விலக்கியதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;