tamilnadu

img

ஒரே மூட்டையில் இருந்து விதைத்த நெல் 5 வகை கலப்பினமாக முளைப்பு தனியார் மோசடியால் விவசாயிகள் கடும் பாதிப்பு

அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாவினிவயல், கணக்கன் வயல், காராவயல், கொடுகவயல், சனிக்காடு,செவந்தன்காடு ஆகிய கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். 

இதில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் குறிப்பிட்ட  தனியார் விதை நெல் கடையில் விதை நெல் வாங்கி விதைத்திருந்த நிலையில், 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து வகையான கலப்பின நெல் முளைத்துள்ளது. ஒரே வகையான விதை நெல் மூட்டைகளிலிருந்து விதைக்கப்பட்ட நெல்லானது ஒரே வயலில் நெல் அறுவடைக்கு தயார் நிலையிலும், நெல்மணியில் பால் கூட்டிய நிலையிலும், வெறும் நெற்பயிராகவும் காணப்பட்டுள்ளது.அதனையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு கடை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. மூன்று வருட காலமாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியை சந்தித்து வந்த தங்களுக்கு, இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்த நிலையில் கடன் வாங்கி விவசாயம் செய்திருந்தோம்.விதை நெல் விற்பனையாளர் கலப்பின நெல் விதையை கொடுத்து தங்களை ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட விதை நெல் கடையில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை இல்லையெனில் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விதை நெல் கடையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.