tamilnadu

img

அரசுப் பள்ளியைக் காப்போம்! - தீ விழி

கடந்த பத்தாண்டுகளில் இருக்கும் ஒரு நெருக்க டியான சூழ்நிலையை அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் வேறு எப்போதும் அனுபவித்தி ருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர்களின் பொதுவான மன அழுத்தம் இன்று அதிகரித்துள்ளது. மறுபக்கம் மாணவர்களை மெல்லமெல்ல தனியார் பள்ளிகளை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அவ்வாறு பெரும் எண்ணிக்கையில் தனி யார் பள்ளிகளை நாடிச் செல்ல என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்புடன் அரசு செயல்படுத்தி வருகிறது. 2005-06 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறை  செயல்படுத்தப்பட்டது. கற்றுத்தர வேண்டிய அனைத்து கற்றல் கூறுகளையும் மாணவர்களைக் கவரும் விதமான விளையாட்டுகளின் வழியாக ஆர்வமுடன் தானே கற்றுக்கொள்ளும் விதமாக எளிமையாக செயல்வழிக் கற்றல் முறை அமைந்திருந்தது. 

அதில் பாடவாரியாக ஒவ்வொரு வகையான சின்னங்க ளும் பாடத்திற்கு ஒரு வண்ணமும் கொண்ட கற்றல் அட்டைகள் இருந்தன. இவற்றைக் கையாள ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்ட ஏணிப்படிகள் இருந்தன. இந்த ஏணிப் படிகளே ஆசிரியரின் அன்றாட பணிகளை எவ்வாறு செய்யவேண்டுமென்று சிறப்பாக திட்டமிட்டு வழிகாட்டின. ஆனால் இம்முறையைச் செயல்படுத்துவதில் கல்வித்துறை கையாண்ட சில அணுகு முறைகள் ஆசிரியரின் மனநிலையைப் பதம் பார்த்தன.  இவையெல்லாம் ஒருபுறம் ஆசிரியர்களைச் சலனப் படுத்தினாலும் ஒரு சில மாறாத மனநிலை கொண்ட ஆசிரியர்களைத்தாண்டி பெரும்பாலான ஆசிரியர்கள் இம் முறையோடு இணங்கி ஆர்வமுடன் பணியாற்றத் தொடங்கினர். செயல்வழிக்கற்றல் முறையில் சில மாற்றங்களைச் செய்து இம்மாதிரியான சில நடைமுறைகள் பின்னாட்களில் மாற்றப்பட்டன. அதற்கு எளிய செயல்வழிக் கற்றல் முறை என்று பெயரும் மாற்றப்பட்டது. மேலும் மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக் கொணர்ந்து வேலைவாய்ப்புத் திறன்மிக்க முழு ஆளு மையை வளர்த்தெடுக்கும் விதமான படைப்பாற்றல் கற்றல் முறை 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு செயல்படுத்தப்பட்டு வரு கிறது. பின்னர் இந்த முறையைச் சுருக்கி 5 ஆம் வகுப்பிற்கு எளிய படைப்பாற்றல் கல்விமுறை செயல்படுத்தப்பட்டது

நீர்த்துப் போன செயல்வழிக் கற்றல்

சமச்சீர்கல்விமுறை நடைமுறைக்கு வந்தபோது சில பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. முப்பருவக் கல்வி முறையை அடிப்படையாகக்கொண்ட சமச்சீர் கல்வி முறை ஏதோ செயல்வழி கற்றலுக்கான மாற்றுமுறை போன்று பேசப்பட்டது. சமச்சீர் கல்வி முறை வந்தால் செயல்வழிக் கற்றல் முறை போய்விடும் என்று வலுவான எண்ணம் ஆசிரி யர்கள் மத்தியில் வேரூன்றப்பட்டது.  ஏற்கனவே வருடா வருடம் தரப்பட்ட கற்றல் அட்டைகள் புதிதாக வராமல் பழைய அட்டைகளையே பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இருந்த அட்டைகளும் பழைய தாகி, கிழிந்து மற்றும் காணாமல் போய் செயல்வழிக் கற்றல் முறையின் அடிப்படை அமைப்பு முறை சிதைக்கப்பட்டது. சமச்சீர் கல்வி முறை புத்தகங்களுக்கேற்ப மாற்றப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் பள்ளிகளை உரிய காலத்தி ற்கு வந்தடையவில்லை. அதனால் செயல்வழி கற்றல் முறை இனி இல்லை என்பதுபோன்ற தோற்றம் ஏற் படுத்தப்பட்டது. அதனாலேயே செயல்வழி கற்றல் அட்டைகள் வந்த பிறகும்கூட பெயரளவிற்கே அது செயல்முறைப் படுத்தப்பட்டது.

2018-19ஆம் கல்வியாண்டு முதலாக 1 முதல் 4 வகுப்பு களுக்கு   ஏபிஎல் என்றிருந்த முறை மாற்றப்பட்டு 1 முதல் 3 வகுப்புகளுக்கு புதிய அணுகுமுறையிலான செயல்வழிக் கற்றல் முறையும் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையும் செயல்பாட்டில் உள்ளன. இம்முறை பெரும்பாலும்  பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் புதிய அணுகுமுறை செயல்வழிக் கற்றல் அட்டைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று சென்ற ஆண்டே சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, 2005-06 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் செயல்வழிக் கற்றல் அறிமுகப்படுத் தப்பட்டது.  துவக்கத்தில் கணிசமாக ஆங்காங்கே அரசுப் பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு மாறாக இந்த பத்தாண்டுகளின் இறுதியில் மிக அதிக எண்ணிக் கையில் தனியார் பள்ளிகளில் கூடியுள்ளன. 

2009 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் எந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறதோ இல்லையோ பிரிவு 12(1))(ஊ)-ன் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறை மிகச் செம்மையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதனால், 56.55 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நான்கே ஆண்டுகளில் 46.60 லட்சமாகக் குறைந்துள்ளது. அடிப்படையில் செயல்வழிக் கற்றல் முறையில் ஏற்பட்ட குழப்பத்தால் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் தள்ளப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களின் அடை வுத்திறன் பின்னடைவுக்கு ஊடாக உள்ள தொடர்புக் கண்ணி தீவிர தனியார்மயப்படுத்துதல் அல்லாமல் வேறில்லை.

பணி நேரம்

தனியார் பள்ளிகளில் பெரும்பான்மையாக ஆசிரியர்க ளுக்கு ஆசிரியர் பணியைத்தாண்டி அலுவல் ரீதியான பிற பணிகளை ஒதுக்குவது மிகக் குறைவு. ஒவ்வொரு வகுப்பிற் கும் இரு ஆசிரியர்களும் ஒரு உதவியாளரும் உள்ள பள்ளி களும் உள்ளன. பள்ளியை நிர்வகிப்பதற்கென்று தனியான நிர்வாக அமைப்பு உள்ளது. பெரும்பாலும் நிர்வாகம் ஆசிரி யர்களின் கற்றல் கற்பித்தல் நேரத்தில் எந்தவிதத்திலும் குறுக்கீடு செய்வதில்லை. இதனால் மாணவர்களுக்காக செயல்பட வேண்டிய ஆசிரியர்களின்  நேரம் முழுமையாக மாணவர்களுக்காகவே செலவிடப்படுகிறது. இங்கே ஒரு அரசுப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் என்ற அடிப்படைப் பணி யைத் தாண்டி அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மேற்கொள்ளும் பணிகளை வரிசைப் படுத்தினால் ஒரு முழம் தூரத்திற்கு அவை நீள்கின்றன. 

இஎம்ஐஎஸ் எனும் பூதம்

இஎம்ஐஎஸ் எனப்படும் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக கிட்டத்தட்ட தினந்தோறும் ஏதேனும் ஒரு பதிவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத னால் ஆசிரியரின் கற்பித்தல் பணியை ஒத்திவைத்துவிட்டு இப்பணியை சிரமேற் கொண்டு முடிப்பதிலேயே பல ஆசிரியர்களின் கவ னமும் பள்ளி நேரமும் சென்று விடுகிறது. இஎம்ஐஎஸ் தளத்தில் உரிய விவரங்களைப் பதிவிடவோ அல்லது தினந் தோறும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையைப் பதிவிடவோ ஆசிரியர்கள் இணையத்தைப் பயன் படுத்தவேண்டிய கட்டாய தேவை உள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்தும் அலைபேசியில் கிடைக்கும் அலை நீளத்தைப் பொறுத்தும், பள்ளி அமைந்தி ருக்கும் இடத்தைப் பொறுத்தும்தான் இணை யத்தின் சேவை மற்றும் வேகம் இருக்கும்.  கிராமத்தில் உள்ள பல பள்ளிகளில் இத்தகைய இணைய சேவை தேவையான அளவில் கிடைப்பதில்லை. இதனால் பள்ளிக்கு வெளியே உள்ள அருகாமை நகரத்தில் ஏதேனும் ஒரு தனியார் இணைய மையத்திற்குச் சென்றாவது பணியை முடிக்க வேண்டிய தேவையிருப்பதால் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்தைக் கல்வித் துறையே வலிந்து ஏற்படுத்துகிறது. இவையல்லாமல் ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எடுத்துக்கொள் ளும் விடுப்புகள் என்று மாணவர்களின் கற்றல் நேரம் பலவகைகளில் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறது.

பயிற்சியும்-வகுப்பறை நேரமும்

2002-03 முதலாக தீவிரமாக செயல்பட்டுவந்த அனை வருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில்  குறுவளமைய அளவிலும், அவ்வப் போது பள்ளி செயல்படும் வேளைநாட்களில்  வட்டார அள விலும் தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.  தற்போது ஒருங்கிணைந்த கல்வி நடைமுறைக்கு வந்தபின்பு குறுவள மைய பயிற்சிகள் வருடத்திற்கு 2 மட்டும் என குறைக்கப்பட் டுள்ளது. ஆனால் அதேவேளையில் வட்டார பயிற்சி நாட்கள் வரைமுறையே இல்லாமல்  அதிகப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயலுக்காக வகுப்பறையில் செலவிடும் நாட்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.

கற்றல் நேரக் கொள்ளை

பொதுவாக எந்தவொரு பணியில் உள்ள நபருக்கும் பணிக்கு இடையில் பயிற்சி வழங்குவது என்பது அத்தி யாவசியமான ஒன்றுதான். அது போலவே ஆசியரியர்க ளுக்கும் பணியிடைப் பயிற்சி வழங்கப்படுவதும் அதன்மூல மாக பணித்திறன் மேம்படுத்தப்பட வேண்டுவதும் அவசிய மான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால், இப்பயிற்சிகள் வழங்கப்படும் காலம்தான் இங்கு மிக முக்கியமாக உற்றுநோக்கவேண்டியுள்ளது. இப்பயிற்சி கள் முழுக்க முழுக்க மாணவர்களின் கற்றல் நேரத்தைக் கொள்ளையடித்து வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரும் சிக்கல் ஒன்றை எவ்விதத்திலும் கவனிக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே கண்டுகொள்ளப் படாமல் உள்ளதா என்பது கேள்விக்குரியது. மறுபுறம் வருகைபுரிந்த ஆசிரியர், மாணவர்களைக் கூடு தலாக பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளியிலி ருக்கும்போது பயிற்சிக்குச் சென்றுள்ள பிற ஆசிரியர்களது பாடத்தை நடத்த முடியவில்லை என்பதைவிட அவரது பாடத்தையும்கூட நடத்த முடிவதில்லை.  இதன் மூலம் ஆசிரியரின் அன்றாடப் பணிகளும் பாதிப்படைகின்றன. 

பயிற்சியும்- உரிய காலமும்

வருடத்திற்கு 20 நாட்கள் ஆசிரியருக்கு பணியிடை பயிற்சி அளிக்க வேண்டும் என்பது அது வரவேற்கத்தக்கது தான்.  ஆனால் அவற்றை எந்தெந்த தலைப்புகளில் எத்தனை எத்தனை நாட்கள் எப்போது வழங்கலாம் என்பதை மாணவர்க ளின் கற்றல் நேரத்தை அபகரிக்காதவாறு திட்டமிடப்பட வேண்டும்.கோடை விடுமுறை, பருவத்தேர்வு விடுமுறைக ளில் சிறப்பான இடங்களில் தங்குமிடப் பயிற்சிகளாகவோ அல்லது தங்கா பயிற்சிகளாகவோ வழங்கலாம். அல்லது கல்வியாண்டின் தொடக்கத்தில் 5 நாட்களும் இடையில் இரண்டாம் பருவத் தொடக்கத்தில் 5 நாட்களுமாகவோ, ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் 3 நாட்கள் என்றோ வேலை நாட்களிலேயே பயிற்சியை வழங்கலாம். மேலும் பயிற்சியின் தன்மையைப் பொறுத்து அவற்றை வழங்க வேண்டிய காலகட்டத்தையும் முடிவு செய்ய வேண்டும். 

உதாரணமாக புதிய பாடப்புத்தகத்திற்கான பயிற்சிக ளைக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கியிருக்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய அரைநாள் அல்லது ஒருநாள் பயிற்சிகளை முன்பு நடைமுறையில் இருந்தது போலவே சனிக்கிழமைகளில் நடத்தலாம். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்க ளிடம் செலவிட வேண்டிய கற்றல் கற்பித்தல் நேரமானது விரயமாகாமல் தடுக்கப்படும். பாடப்பகுதியை உரிய காலத்தில் முடித்து மாணவர்களைக் கற்றல் விளைவுகள் சார்ந்தும் தேர்வுகள் சார்ந்தும் தயார்ப் படுத்துவதற்கான நல்வாய்ப்பு ஆசிரியருக்குக் கிட்டும். இதன்வழி அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் தடை படுவது தடுத்து நிறுத்தப்படும். அரசுப்பள்ளிகளைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பல முயற்சிகளில் பயிற்சியும் ஒரு முக்கியமான அங்கமாகும்.





 

;