tamilnadu

img

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆம் நாள் நடந்த தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

அரியலூர், மார்ச் 29 - பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் என்ற பெயரில் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரியை குறைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 (திங்கள்-செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. திங்களன்று ஜெயங்கொண்டம் தபால் அலுவலகம் முன்பு நடந்த மறியலுக்கு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.என்.துரைராஜ், தமிழ்நாடு மின்சார ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், ஒன்றிய செயலாளர்கள் எம்.வெங்கடாசலம் (ஜெயங்கொண்டம்), ஜெ.ராதாகிருஷ்ணன் (தா.பழூர்), வி.பரமசிவம் (ஆண்டிமடம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு எஸ்.அகஸ்டின், சிஐடியு ஏ.சின்னசாமி, ஹெச்எம்எஸ், ரெங்கசாமி எல்பிஎப், வீ.ஞானசேகரன் ஏஐடியுசி ஆகியோர் தலைமை வகித்தனர். 

வாலிபர் சங்கம்
பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் பேராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.அறிவழகன், மாவட்ட தலைவர் எஸ்.கே.சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.கோகுலகிருஷ்ணன், துணைத்தலைவர் கே.எம்.சக்திவேல், வேப்பந்தட்டை பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி
திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், எல்பிஎப் மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், ஏஐடியுசி சுரேஷ், ஏஐசிசிடியு தேசிகன், எச்எம்எஸ் ராஜமாணிக்கம், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், எல்டியுசி கார்த்திகேயன், பிஎஸ்என்எல் அஸ்லம்பாஷா, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரோக்கியராஜ், அரசு ஊழியர் சங்க பெரியசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்க சித்ரா ஆகியோர் பேசினர்.  ஜங்ஷனில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டிஆர்இயு திருச்சி கோட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட உதவி தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். ஆர்எம்எஸ் மகாசம்மேளன கோட்ட செயலாளர் குணசேகரன், டிஆர்இயு உதவி கோட்ட தலைவர் சுவாமிநாதயாதவ், உதவி கோட்ட செயலாளர் ராஜா, துணை பொதுச்செயலாளர் மாதவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ரயில்வே ஜங்சன் அருகே எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மீரான்மைதீன், பொதுச் செயலாளர் நியாமத்துல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  முசிறி ஒன்றியம் புலிவலம் கடைவீதியில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் கண்டன உரையாற்றினார்.

சமயபுரம்
சமயபுரம் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாலகிருஷ்ணன், சேகர், சக்தி, ஜெயராணி, ஆலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சாவூர்
திங்கள்கிழமை நடந்த மறியல் போராட்டத்தில் தஞ்சாவூர் ஆற்றுப் பாலத்தில் இருந்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக 800 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று தலைமைத் தபால் அருகே மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். கலியமூர்த்தி, முறைசாரா சங்கம் தலைவர் செல்வேந்திரி, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் மில்லர்பிரபு, போக்குவரத்து சங்கச் செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ். ராஜாராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜூ, தொழிலாளர் சம்மேளனம் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.  பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முறைசாராத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணியில் திங்களன்று அரசு ஊழியர் சங்கம் சார்பில், வட்டத் தலைவர் அ.நாவலரசன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் கே.ராமச்சந்திரன், செயலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு அமைப்பாளர்கள், வருவாய் கிராம ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை, புள்ளியியல் துறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தபால் நிலையம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.இந்துமதி(பேராவூரணி), ஆர்.எம்.வீரப்பெருமாள் (பெருமகளூர்), விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூரில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவையாறு வரகூர் சாலையில் நடைபெற்ற மறியலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, ஏ.ராஜா, எம்.பழனி அய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் எல்ஐசி தஞ்சை கோட்டத்தில் உள்ள சுமார் 1000 ஊழியர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். தஞ்சை கோட்ட அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். லிகாய் முகவர் சங்க மாநில செயலாளர் ராஜா துவக்க உரையாற்றினார், பொது காப்பீட்டு ஊழியர் சங்க தென்மண்டல நிர்வாகி ப.சத்தியநாதன் கண்டன உரையாற்றினார். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கம் சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், ஐஎன்டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராஜ், தொமுச தலைவர் பாஸ்டின், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் ராஜன், ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேவையா, துரை.மதிவாணன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், தொமுச செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.  

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், முறைசாரா சங்கம் செல்வேந்திரி, மின் ஊழியர் மத்திய அமைப்பு அதிதூத மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச மாவட்டத் தலைவர் கு.சேவியர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு சி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்
கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். தொமுச மாடாகுடி செல்வராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன் மற்றும் மின் ஊழியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நாச்சியார்கோயிலில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கைத்தறி நெசவாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பழனிவேல் தலைமை வகித்தார்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், அரசு ஊழியர், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

;