tamilnadu

புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காத தா.பழூர் காவல்துறை: போராட்டம் ஒத்திவைப்பு  

அரியலூர், ஜூன் 24- அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலையத்தில், மூர்த்தியான் மெக்கேல் என்பவருக்கு சொந்தமான தேக்கு மரங்களை பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரர் வெட்ட முயன்ற தாக புகார் அளித்ததில் உரிய நடவடிக்கை எடுக்காமல், மரங்களை வெட்ட உடந்தையாக இருந்ததாக கூறி காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் புதன் அன்று நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் எ.தங்கராசு, மெக்கேல் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வரும் 26-ம் தேதி அன்று வருவாய்த் துறை மூலம் இடத்தினை அளந்து மரம் யாருக்கு சொந்தம் என்பது முடிவு செய்யப்படும். இதனிடையே  எதிர்தரப்பினர் வெட்டிய மரத்தை எங்கு மறைத்து வைத்திருந்தாலும் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்று காவல் உதவி ஆய்வாளருக்கு தாசில்தார் உத்தரவிட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

;