சென்னை,நவ.19- சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் கே. சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், அரிசி வாங்கும் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பயனாளர்கள் அரிசி அட்டைகளுக்கு உரிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆன்-லைன் வாயிலாக வரும் 26 ஆம் தேதி வரை http://www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அல்லது மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மேலும் திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோருவது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.