1928 - துண்டுகளாக வெட்டப்பட்ட ரொட்டி(ஸ்லைஸ்ட் ப்ரெட்) முதன்முதலாக அமெரிக்காவின் மிசவுரியில் சிலிக்கோத் பேக்கிங் கம்பெனியால் விற்பனை செய்யப்பட்டது. முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகளில் காணப்பட்ட ஸ்டார்ச் எச்சங்கள், அக்காலத்திலேயே ரொட்டி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதக் காரணமாயுள்ளன. தாவரங்களின் வேர்ப்பகுதியிலிருந்து ஸ்டார்ச் எடுக்கப்பட்டு, பாறைகளின்மீது பரப்பப்பட்டு ரொட்டியாகச் சுடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 14,500 ஆண்டுகளுக்குமுன் ஜோர்டான் பகுதியில் ரொட்டி செய்யப்பட்டதாகக் கிடைத்துள்ளவையே ரொட்டியின் மிகப்பழைய ஆதாரங்களாகும். கி.மு.10 ஆயிரங்களில் விவசாயம் பரவிவிட்ட நிலையில், ரொட்டி செய்ய தானியங்கள் பயன்படுத்தப்பட்டன. தானியங்களின் மேற்புறத்தில் இயற்கையாகக் காணப்படக்கூடிய யீஸ்ட்மூலமாகவும், ஈர மாவை சமைப்பதற்குமுன் திறந்து காற்றாட வைத்து, காற்றிலுள்ள யீஸ்ட் மூலமாகவும் அக்காலத்தில் புளித்தலும், மென்மையாக்கலும் செய்யப்பட்டுள்ளன. பீரைப் பயன்படுத்திப் புளிக்கச்செய்து ரொட்டி செய்யப்பட்டதாகவும், ரோம எழுத்தாளர் மூத்த பிளினி குறிப்பிட்டுள்ளார். இந்தியன் ப்ரெட்கள் என்றழைக்கப்படும் சுக்கா ரொட்டி, நான் முதலியவை உட்பட பல்வேறு விதமான ரொட்டிகள் உலகம் முழுவதும் உண்ணப்படுகின்றன. மென்மையாக்குவதற்கு உதவும் க்ளூட்டன் மிகுந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால், கோதுமையே பெரும்பாலும் ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உலகில் மிக அதிக அளவில் உண்ணப்படும் தானியமாக கோதுமையே உள்ளது. வீட்டில் வெட்டும் வேலையைத் தவிர்த்ததுடன், சீரான துண்டுகளையும் உருவாக்கியதால், வோட்டோ ரோவெடர் கண்டுபிடித்த இந்த ரொட்டியை வெட்டும் எந்திரம் மிகப்பெரிய முன்னேற்றமாக அமைந்தது. இதனாலேயே, புதிய கண்டுபிடிப்புகளை, ரொட்டியைத் துண்டாக்குதலையடுத்த பெரிய கண்டுபிடிப்பு என்று கூறும் பழக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. மெல்லிய துண்டுகளாகக் கிடைத்ததால் ரொட்டி அதிக அளவிலும், அடிக்கடியும் உண்ணப்பட்டு, நுகர்வு அதிகரித்ததுடன், ரொட்டியில் தடவக்கூடிய ஜாம் முதலானவற்றின் விற்பனையும் அதிகரித்தது. இதனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நுகர்வைக் குறைப்பதற்காக, வெட்டப்பட்ட ரொட்டியை விற்க அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி, வெட்டப்பட்ட ரொட்டியைச் சுற்றப் பயன்படுத்தப்படும் மெழுகுத்தாளின் பயன்பாட்டைக் குறைக்கவே தடை செய்ததாகவும், போதிய மெழுகுத்தாள் இருப்பு இருப்பதால் தடைநீக்கப்படுவதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது.