உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் முதல் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4356 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே அதிக பட்சமாக அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் 24000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 726 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சீனாவை விட உயிரிழப்பு அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3867 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 1 லட்சத்து 5,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12, 428 ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 837 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினிலும் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 748 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் பிரான்சில் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,523 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பிரிட்டனிலும் கொரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. 25,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 381 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.