அகமதாபாத்:
நீதிபதி குரேஷியை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்திருந்த பரிந்துரையை, மோடி அரசு வேண்டுமென்றே நிறுத்தி வைத்து, பழிவாங்கியுள்ளது.
மோடி அரசின் இந்த செயலுக்கு, குஜராத் வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குரேஷிக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இதுதொடர்பாக பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரை நேரடியாகவே சந்தித்துப் பேசப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அகில் குரேஷியை, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்துவிட்டது. மாறாக, குரேஷிக்கான இடத்தில், நீதிபதி ரவிசங்கர் ஜா-வை, தற்காலிக தலைமை நீதிபதியாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த செயல், நீதித்துறைக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குரேஷியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூடி, மத்திய அரசின் செயல் குறித்து விவாதித்தனர். அதன்முடிவில், நீதிபதி குரேஷியை, மத்தியப்பிரதேச தலைமை நீதிபதி பதவியிடத்திற்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர்கள், இதுதொடர்பாக பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அத்துடன், நீதிபதி குரேஷியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது, பழிவாங்கல் நடவடிக்கைதான் என்றும் குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, வழக்கறிஞர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய யதின் ஓஜா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “பிரதமர் மோடி முன்பு குஜராத் முதல்வராகவும், தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்பு குஜராத் உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நீதிபதி குரேஷிதான் விசாரித்தார். முடிவில், மோடி, அமித் ஷா ஆகிய இருவருக்கும் எதிராகவே குரேஷியின் தீர்ப்பு இருந்தது. இதுதான் தற்போது குரேஷியின் பதவி உயர்வுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது” என்று ஓஜா குறிப்பிட்டுள்ளார்.
ஓஜாவின் கருத்தையே குஜராத் உயர் நீதிமன்றத்தின் வேறுசில வழக்கறிஞர்களும் வழிமொழிந்துள்ளனர். அதுமட்டுமன்றி குரேஷி பழிவாங்கப்படுவது இது முதல் முறையல்ல என்று தெரிவித்துள்ள அவர்கள், குரேஷிக்கு சீனியாரிட்டி இருந்தும், அவரை விட இளையவரான தவே, குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகின்றனர். குரேஷி தனக்கு எதிரான அநீதியை தட்டிக் கேட்டதால், மும்பை உயர் நீதிமன்றத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டதையும் அவர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.