வேலூர், ஆக. 21- வாணியம்பாடி அருகே இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து க.மோகன் காந்தி கூறியது:- வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதியாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங்காங்கே நடுகற்கள் அமைக்கப்பட்டுள் ளதைக் காணமுடிகிறது. அதன்படி, சின்ன வடசேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பலகைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடிவம் என்று பெயர். இந்த நடுகல்லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டுள்ளான். இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள் தங்களது குல தெய்வமாக இக்கல்லை வழிபடுகின்றனர். மேல்குப்பம்-சின்ன வடசேரி எல்லையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது உடன்கட்டை நடுகல் ஆகும். “கும்பிடும் நிலையில் ஓர் ஆண் உருவமும், அதன் அருகே பெண் உடன்கட்டை ஏறியதற்கான அடையாளத்தோடு நடுகல் காணப்படுகிறது. இந்த நடுகல் சேதமடைந்து சரியான உருவமின்றிக் காணப்படுகிறது. இந்த நடுகல்லை இவ்கூர் மக்கள் தேசத்துமாரி என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.இவ்வூரை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாற்றுத் தடயங்கள் வெளிப்படும்.” என்றார் அவர்.