tamilnadu

img

கவனக் குறைவால் வரும் கவலை தரும் நோய்கள்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நமது முன்னோர்கள் வாக்கு. நோய் அற்ற வாழ்வு வாழ்கிறவர்கள்தான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை, செல்வமும், செழிப்பும் பெற்று விளங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்நோயற்ற வாழ்வுக்கு முதன்மையாக நாம் செய்ய வேண்டியது ஒரு சில தொற்று நோய்கள் வராமல் தடுப்பது ஆகும். அவ்வாறு தடுக்கக்கூடிய தொற்று நோய்களில் டைபாய்டு, யானைக்கால் சுரம், காலரா, காசநோய், மலேரியா, காலா அசார் என்னும் கருப்புக் காய்ச்சல், வெறிநாய்க்கடி ஆகியவை முக்கியமானவை.

உலகின் பல பாகங்களிலும் நுண்ணுயிர்களால் உண்டாகும் தொற்று நோய்களில் முதன்மையானது காசநோயாகும். ‘டுபர்களின் பாசிலஸ்’ என்ற கிருமிதான் காசநோய்க்கான காரணம் என்று ஜெர்மானிய விஞ்ஞானியான ராபர்ட் காக் என்பவர் 1882இல் கண்டுபிடித்தார். இந்நோய்ப்பட்டவர்களின் உடல் இளைத்துக் கொண்டே செல்வதால் உருக்கு நோய் என்று கூறப்பட்டது. இந்நுண் கிருமி வறண்ட நிலையில் உள்ள இடங்களில் ஆறு மாதங்கள் கூட உயிர் வாழும் தன்மையுடையது. ஆனால் சூரிய வெளிச்சத்தில் இந்நோய்க் கிருமி இருந்தால் எட்டு மணி நேரத்தில் இறந்துவிடும். கொதிநீரில் 10 நிமிடங்களிலேயே இறந்துவிடும். வெப்பப்பிரதேச நாடுகளிலும் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களிலும் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நோய் மனிதனை மட்டுமின்றி கால்நடைகளைக் கூட தாக்கும். இந்நோய்க்கான கிருமிகள் இரண்டு வகைப்படும் ஒன்று மனித இனம். இரண்டு மிருக இனம். மிருக இனத்தால் பரவக்கூடிய காசநோய் நம் நாட்டில் குறைந்த அளவிலேயே உள்ளது. ஏனென்றால் கால்நடைகள் திறந்த வெளியிலும், சூரிய வெளிச்சத்திலும் அதிகமாக இருக்கின்றன. மேலும் பாலைக் காய்ச்சி உபயோகிப்பதன் மூலமும் கிருமிகளைக் கொன்று விடுகிறோம். மிருக இனக்கிருமிகள் பால் மூலம் பரவக்கூடியது என்பது இதனால் விளங்கும். இக்கிருமிகள் உணவுப் பாதை, வயிற்றில் உள்ள நிணநீர்க்கட்டிகள் ஆகியவற்றைத் தாக்கும் தன்மையுடையது.

மனித இனக்கிருமிகள் நுரையீரல், மூச்சுக்குழாய்ப் பாதை ஆகியவற்றையே பெரும்பாலும் தாக்கும். இந்நோய் மனிதனைத் தாக்குவது அவனுடைய நோய் எதிர்ப்புச் சக்தி, நோய்க்கிருமிகள் வீரியம் முதலியவற்றைப் பொறுத்தது. நெருக்கமாக வாழ்வதும், புரதம், வைட்டமின் போன்ற சத்து இல்லாத உணவை உண்பதும் காசநோய் வர அதிக வாய்ப்பளிக்கின்றன. நீரழிவு வியாதி, இருதய வியாதி உள்ளவர்களும் நெசவுத் தொழில் செய்பவர்களும் இந்நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். காசநோய் நுரையீரலை மட்டும்தான் தாக்கும் என்பது முற்றிலும் உண்மை அல்ல. இந்நோய் சிறுநீரகம், எலும்பு, பிறப்பு உறுப்பு முதலியவைகளையும் தாக்கும் இந்நோயின் அறிகுறிகள் அசதி, தூக்கமின்மை, பசியின்மை, இளைத்து விடுதல், சளி, சளியுடன் இரத்தம், இரத்தசோகை, இரவில் வேர்த்து விடுதல், மாலைச் சுரம் ஆகியவை. மேலும் நெஞ்சுவலி, நாடித்துடிப்பு அதிகமாக இருத்தல், நெஞ்சு படபடப்பு, கம்மிய குரல், மாதவிலக்கில் மாறுபாடு அல்லது நின்று விடுதல் இந்நோயின் முற்றிய அறிகுறிகளாகும். 

காசநோய் உடலை அதிகமாகத் தாக்க உடல் இளைத்து உதடு வறண்டு போகும். காய்ச்சல் அதிகமாகி, கைகளில் நகங்கள் பெருத்து இருக்கும். காசநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை நினைக்கும்பொழுது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. காசநோயால் பீடிக்கப்பட்ட நோயாளி இருமினாலோ, தும்மினாலோ அவர் காசநோய் துளிகள் 3 அடி வரை, அருகில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படி இல்லாத அவர் துப்பிய சளி காய்ந்த பிறகும் கூட அதிலிருந்து கிளம்பும் தூசு கிருமி நிறைந்ததாகவே இருப்பதால் அத்தூசியைச் சுவாசிப்பவருக்கு இந்நோய் வரவாய்ப்பு உண்டு. மேலும் நோயாளியின் சளி, மலம், சிறுநீர் முதலியவைகளுடன் உறவாடும், நோயாளிக்கு உதவி செய்பவரையும் அவர் உபயோகித்த உணவுப் பொருட்களை அருந்துவோருக்கும் இந்நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. குழந்தைகள் சில சமயம் காசநோய் தாக்கிய பசுவின் பாலை அருந்துவதால் அவர்களுக்கு இந்நோய் வருகிறது. காசநோயால் தாக்கப்பட்ட பெற்றோர்க்குப் பிறக்கும் குழந்தைக்குக் காசநோய் பிறவிலேயே தாக்க வாய்ப்பு உண்டா என்றால் இல்லை. ஆனால் பிறந்த சில மாதங்களில் அவர்களுடன் உறவாடுவதால் இந்நோய் குழந்தையைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பு அதிகம் உண்டு. இந்நோயைக் கண்டுபிடிக்க நோயாளியின் சளி, ரூபர்குளின் இரத்தம் ஆகியவை சோதனை செய்யப்படுகின்றன. நெஞ்சு ஊடுகதிர்ச் சோதனை மூலமும் இந்நோயைக் கண்டறியலாம். இந்நோய்க்குத் தடுப்பு முறையாக ஒவ்வொருவரும் சுகாதார முறைப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். வீடுகளில் சூரிய வெளிச்சம் வர வாய்ப்பு இருக்க வேண்டும். கட்டடங்கள் அகலமான தெருக்களில் இருக்க வேண்டும். வீடுகள் நெருக்கமாக உள்ள இடங்களில் பூங்கா இருக்க வேண்டும். குடிசைகளில் நெருக்கமாக இருப்போருக்கு சுத்தமான வாழ்வை அளித்து அவர்களது குடியிருப்பை மேம்படுத்தத் திட்டம் இடம வேண்டும். பால், மற்ற உணவுப்பண்டங்கள் சுத்தமாக உள்ளதா என்பதை அறிந்து உண்ண வேண்டும். நோயாளியின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்டவர் சளியில் காசநோய்க் கிருமிகள் இருப்பதாக மருத்துவர் கூறினால் அந்நோயாளியைக் கூட வீட்டில் தனியாக வைத்திருந்து கவனிக்க வேண்டும். நோயாளி சளியைப் பினாயில் கலந்த நீரில் துப்பச் செய்ய வேண்டும். இருமும் பொழுது துணியையோ, கைக்குட்டையையோ வைத்து இரும வேண்டும். நோயாளியுடன் உறவாடும் மற்றவர்கள் தங்களை அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளி  நல்ல சத்துள்ள உணவை உண்ணச் செய்ய வேண்டும். 

கடைசியாக முக்கியமான ஒரு தடுப்பு முறையைக் கூறுகிறேன. அதுதான் பிசிஜி குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குள் இத்தடுப்பு ஊசியைப் போட வேண்டும். இந்நோய்க்கு 1944ம் ஆண்டுக்கு முன் நல்ல மருந்து இல்லை. ஸ்டப்டோமைசின் என்ற மருந்து கண்டுபிடித்த பின்னர் நோயைக் குணப்படுத்துவது எளிதாகிவிட்டது. இந்நோய்க்கான மற்ற மருந்துகள் பிஏஎஸ் ஐசோநியாசிட் ரிடாம்பசின் என்பன. இவ்வகை மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் பல மாதங்கள் உண்ண வேண்டும். காசநோயால் வாடுபவர்கள் அன்றாட வேலையைக் கூடச் செய்ய முடியாது போய்விடுகின்றனர். ஆகவே ஒருவருக்கு மூன்று வாரம் தொடர்ந்து இருமல் நீடித்து இருந்தால் காசநோய் உள்ளதா என்று சோதனை செய்து பார்த்து விரைவில் மருத்துவம் பெற வேண்டும். இப்பொழுது இந்த நோய்க்கான மாத்திரைகள் இலவசமாக, அரசாங்க மருத்துவமனைகளில் 30 நாட்களுக்கானவை மாதத்திற்கு இருமுறை கொடுக்கப்படுகின்றன. ஆகவே அதைத் தெரிந்த மருந்தைவிடாது பயன்படுத்தி இந்நோயிலிருந்து விடுபட்டு சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உதவக்கூடிய நிலையில் வாழ முயல வேண்டும். நோய் எனப்படும் சொல்லுக்குப் பொருள் மனித உடல் அல்லது உள்ளம் நோய்வாய்ப்பட்டு இருத்தல் என்பதாகும். இந்நோய் முழு உடலையோ, அல்லது உடலில் ஓர் அங்கத்தையோ, ஒரு மண்டலத்தையோ தாக்கலாம். நாகரிகம் வளர வளர புதிய புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை தொற்றும் நோய்கள் என்றும் தொற்றிக் கொள்ளா நோய்கள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. தொற்று நோய் என்பது நோய்க்கான கிருமிகள் ஒருவரிடமிருந்து  தெரியாமலோ பூச்சி, காற்று, தண்ணீர் மூலமோ நோயை பரப்பி விடுவது ஆகும்.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1