தஞ்சாவூர் ஆக.26- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தரிசு உழவு செய்தல் மற்றும் நேரடி நெல் விதைப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. விதைக் கருவியை பயன்படுத்தி வரிசையாக விதைத்தால் அதிக தூர்வெடித்து கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அனைவரும் விதைக்கருவி மூலம் விதைப்பு மேற்கொள்ள மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் திங்கள்கிழமை சொக்கனாவூர் கிராமத்தில் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலர் நவீன்சேவியர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் பாபி செய்தார்.