காய்ந்து கிடக்கும் குளங்கள்: மழையின் உதவியால் சம்பா விதைப்பில் விவசாயிகள்
சீர்காழி, செப்.27- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளுர், பாலுரான்படுகை, சென்னியநல்லூர், பெரம்பூர், குன்னம், கீரங்குடி, சிதம்பர நாதபுரம், சோதியக்குடி, மடப்புரம், புத்தூர், கீரங்குடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வந்து சேரவில்லை. இப்பகுதியில் முக்கிய பெரும் பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் வந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதிலிருந்து பிரியும் பல பாசன கிளை வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலந்தது. ஆனால் கொள்ளிடம் பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குளங்களும் கிளை வாய்க்கால்களும் வறண்டு கிடக்கின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் உதவியினால் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி அதனைக் கிளை வாய்க்கால்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூரில் நாளை ஆசிரியர்கள் சங்கமம்
கரூர், செப்.27- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில அளவிலான பிரச்சாரப் பயண நிறைவுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுகிழமையன்று நடைபெறுகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2019 திரும்பப் பெற வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது, மூடிய பள்ளிகளைத் திறக்க வேண்டும், தமிழ் வழிப் பள்ளிகளைப் பாதுகாத்திட வேண்டும், தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள் 100, 101, 145, 164 ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டின் 6 முனைகளில் இருந்து மாபெரும் பிரச்சாரப் பயணம் செப்.25-ம் தேதி முதல் துவங்கி 29-ம் தேதி கரூரில் நிறைவடைகிறது. கரூரில் உள்ள 80 அடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் மாபெரும் பிரச்சாரப் பயண நிறைவு பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் கல்வியாளர் பேராசிரியர் அருணன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.