தஞ்சாவூர், மே12-அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ராவுத்தர், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலில் முகைதீன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் சேவியர், பட்டுக்கோட்டை நகர தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, மாவட்டத் துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளின் உரிமை, சட்டம், அரசு வழங்கும் சலுகை, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்கள் அட்டை வழங்குதல் மற்றும் கிளை அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் மே 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தில், உதவித் தொகை பெறுவதற்கான அரசாணை குறித்து முறையிடவும், உரிய நடவடிக்கை இல்லை எனில், அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.