tamilnadu

img

மின்னல் தாக்கி ஒருவர் பலி

திருவண்ணாமலை, மே 31-திருவண்ணாமலையில் இடி,மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மலையும் தீப்பற்றி எரிந்தது.  தமிழகத்தில் பரவலாக கோடை வெப்பம் நிலவி வருவதால், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று(மே28) வேலுர் மற்றும் அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக ஆலங்கடி மழை பெய்தது. அதையடுத்து வியாழனன்று(மே30) திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னல்  தாக்கி திருவண்ணாமலை மலை தீப்பற்றி எரிந்தது. அதை தொடர்ந்து மிதமான மழை பெய்ததால், அந்த தீ தானாகவே அனைந்தது. இதேபோல், திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  சந்திரசேகரன் (35) தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் இடி,மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வியாழன் இரவு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கத்தில் 10 மி.மீ, செங்கத்தில் 9.2 மி.மீ, தண்டராம்பட்டில் 7 மி.மீ, திருவண்ணாமலையில் 4 மிமீ மழை பதிவானது. மழையுடன் பலத்த காற்று வீசியதில் ஏராளமான வாழைமரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள், நிவாரண உதவி வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.