tamilnadu

பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

 ஊத்துக்கோட்டை, செப். 28- பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள பைட  கொடியம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (26). இவர் ஊத்துக்கோட்டை  பேருந்து நிலையம் அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை 4 பேர் ஓட்டலுக்கு வந்து பிரியாணி மற்றும் சிக்கன் வறுவல், சிக்கன் ரைஸ் வகைகள் சாப்பிட்டனர். அவர்களிடம் சாப்பிட்டதற்கான பில் கொடுக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேரும் பணம் கொடுக்காமல் ஓட்டலை விட்டு புறப்பட்டனர். பில் பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு முரளி கேட்டார். அதற்கு அந்த 4 பேர் நாங்கள் யார் தெரியுமா? எங்களிடம் பணம் கேட்கிறாயா என்று கூறியவாறு முரளியை தாக்கினர். அது மட்டுமின்றி அங்குள்ள சேர் மற்றும் டேபிள்களை அடித்து சேதப்படுத்தினர். இது குறித்து முரளி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து காரில் ஏறி புறப்பட தயாராகி கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சென்னை வியாசர்பாடி எம்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (46), எம்.கே.பி. நகரை சேர்ந்த இளமாறன் (31), வள்ளார்நகரை சேர்ந்த விஜயகுமார் (44), எழும்பூர் அப்துல் சுக்கூர் தெருவை சேர்ந்த குமரேசன் (23) என்று தெரியவந்தது. 4 பேரையும் காவல்துறையினர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.