tamilnadu

img

துப்பாக்கி வைத்த புடைப்புச் சிற்பங்கள் - வெளியான முக்கிய தகவல்கள்!

உடுமலை, ஏப். 22 – உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் துப்பாக்கி வைத்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுவது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் ஆய்வாளர்கள் கூறுகையில், உடுமலைப் பகுதிகளான கொங்கலக்குறிச்சி, பண்ணைக்கிணறு, ஜிலேப்பநாயக்கன்பாளையம், திருமூர்த்தி மலை, புதுப்பாளையம், நல்லாம்பள்ளி, துங்காவி, மெட்ராத்தி, கடத்தூர், காரத்தொழுவு போன்ற இடங்களில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் கூடிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் தளிஞ்சி மலைப்பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் எச்சங்களாகவே இந்த துப்பாக்கி புடைப்புச் சிற்பங்கள் இருக்கலாம்.
மேலும், இப்பகுதியில் தளி எத்தலப்ப மன்னன் ஆட்சி செய்ததற்கான வலுவான சான்றுகள் உள்ளன. இருப்பினும், 1800-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், மருது சகோதரர்களுக்கும் இந்த தளிஞ்சி பகுதியில் இருந்துதான் துப்பாக்கிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருமூர்த்தி மலை மற்றும் ஏழுமலையான் கோவிலில் எத்தலப்ப மன்னருக்கு இன்றும் முதல் மரியாதை வழங்கப்படுவது இதற்கு சான்றாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துப்பாக்கி புடைப்புச் சிற்பங்களை ஆய்வு செய்த உடுமலை வரலாற்று ஆய்வாளர்கள், சென்னை ஆவணக்காப்பகத்தின் ஆவணங்களின்படி விருப்பாட்சி கோபால நாயக்கர் தலைமையில் இயங்கிய தீபகற்ப கூட்டணியானது ஆங்கிலேய அரசுக்கு ஆயுதம் சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதை உறுதிப்படுத்துகின்றனர். இது தளிஞ்சி மலைப்பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.
இங்கு ஆயுத உற்பத்தி இருந்த காரணத்தினால்தான், ஆங்கிலேயப் படைகள் இப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கினர். இதன் எச்சமாகவே இன்று அமராவதி நகரில் படைத்துறைப் பள்ளி (இராணுவப் பள்ளி) அமைந்திருக்கலாம். மேலும், கள ஆய்வுகளின் மூலம் கரிக்காரன்புதூர், நெய்க்காரப்பட்டி சித்தரேவு, காவளப்பட்டி, பாப்பம்பட்டி போன்ற பகுதிகளில் நுணுக்கமான இரும்புப்பட்டறை தொழிற்சாலைகள் இயங்கி வந்ததும், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை துப்பாக்கித் தொழிற்சாலை இருந்ததும் தெரிய வருகிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை உடுமலையில் அரசு அனுமதி பெற்ற துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.