கோவை, பிப். 3 - ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை இருந்தும் லஞ்சம் கொடுக்கா ததால் கடை போட அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காய்கள் விற்பனை செய்து வரும் எங்களிடம் சந்தையின் நிர்வாக அதிகாரியாக உள்ள கண்ணன் வெளிமாவட்ட விவசாயிகள் இங்கு விற்பனை செய்யகூடாது என்கிறார். மேலும் பணம் கொடுத்தால் கடை போடலாம் என லஞ்சம் கேட்கிறார். இதனால் திங்களன்று கோத்தகி ரியிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை சந்தையில் கொட்டி வைக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது. உழவர் சந்தையின் அதிகாரி கண்ணன் விவசாயிகளை பழி வாங்கும் நோக்கில் நடந்து கொள்வதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், கடந்த பல வருடங்களாக 40க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்து வந்த நிலையில் தங்களை அனுமதிக்க மறுப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றனர். இதனைத்தொடர்ந்து நீலகிரி பகுதியில் விவசாயம் செய்து கோவை உழவர் சந்தையில் விற்பனை செய்து வரும் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.