tamilnadu

img

கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது!

மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் - சிபிஎம் குற்றச்சாட்டு

சென்னை,ஜூன் 5-  மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் என்றும் இதில் தமிழக அரசு கணக்கீட்டைச் சொல்லி தப்பிக்க முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல் கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருப்பது தள்ளி வைத்ததன் நோக்கத்தையே சிதைக்கிறது.  இந்த மாதங்களில் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த நிர்ப்பந்தத்தின் காரணமாகவும், இது கத்தரி வெயில் காலமாக இருந்ததாலும், பெரும்பாலான வீடுகளில் 24 மணிநேரமும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். இதன் காரணமாக முதலமைச்சரே கூறியபடி நெருக்கமான வீடுகள், இடித்து பிடித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலைமை ஆகியவற்றால் பல வீடுகளில் ஒரு முழு நாளின் பெரும்பகுதி நேரமும் மின்விசிறிகள் இயக்கப்பட்டு கொண்டே இருந்தன. அடைந்து கிடந்த மக்கள் வேறு வழியின்றி தொலைக்காட்சி பெட்டிகளுக்கு முன்பு கூடியிருப்பதும், தவிர்க்க முடியாததாகி போனது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதற்கு அரசின் ஊரடங்கு உத்தரவே காரணம். இந்த நிலையில், கணக்கீட்டு வரம்பை காரணம் காட்டி மின்கட்டணம் தாறுமாறாக வசூலிப்பது நியாயமற்ற அணுகுமுறை.

வேலையில்லை, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டதால்தான் அரசு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கியது, செலவுக்கு ஆயிரம் ரூபாயை நிவாரணமாக கொடுத்தது, இப்படி ஒரு சூழலில் கட்ட முடியாத அளவிற்கு மின்சார கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது பொருத்தமற்றது, நியாயமற்றது. அரசு ஏழை, நடுத்தர மக்களின் மீது அக்கறையின்றி இருப்பதை காட்டுகிறது. அரசின் கணக்கீட்டு முறை 500 யூனிட்டுகளுக்கு மேல் போகும்போது அடுத்த கணக்கீட்டு விகிதத்திற்கு மாறி விடுகிறது. இதன் காரணமாக இரு மடங்கிற்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று மின்சார வாரியம் நிர்ப்பந்திக்கிறது. கீழ்க்கண்ட கணக்கீடு அரசின் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு சாதாரண மக்களை பாதிக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம் கூடுதலாக ஒரு நாளைக்கு அரை யூனிட் அதிகமாக செலவழித்தாலே அந்த குடும்பம் 1130 ரூபாய்கு பதிலாக 1846 ரூபாய் கட்டணம் செலுத்த  வேண்டி வரும், கூடுதலாக ஒரு நாளைக்கு அரை யூனிட் மின்சாரம் செலவழித்த ஒரே காரணத்தினால் 716 ரூபாய் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அரசு கொடுத்த 1000 ரூபாயை அப்படியே பறித்துக்கொள்வதற்கு சமமானது. மேலும் மிகக்குறைந்த யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திய வீடுகளில் கூட  பல மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டுமென வந்துள்ளது.  பூட்டியே கிடந்த வீடுகளுக்கு கூட மின்கட்டணம் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய்  என கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும்.

எனவே, மின்சார வாரியம்  சொல்லும் கணக்கீடுகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அரசு நிர்ப்பந்தப்படுத்திய ஊரடங்கால் ஏற்பட்ட மின்சார செலவையும், இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்த மின்கட்டணத்தையும் அரசு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்டு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை  500 யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், 500 யூனிட்டுக்கு கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட்டதோ அதே கட்டண விகிதத்தையே 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்துவோருக்கும் கணக்கிடப்பட வேண்டும். கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கீட்டு முறையையே செயல்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.