கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக் கழுவுங்கள் ; அதுவும் குறைந்தது 20 நொடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும் ; எப்படியெல்லாம் கழுவ வேண்டும் ; கைகளோடு மூக்கு வாய் உறுப்புகள் உள்ள முகத்தையும் சோப்புப் போட்டுக் கழுவுவது நல்லது என்று விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன .
எந்த வைரசையும் அழிக்கின்ற கிருமிநாசினி சோப்புகளில் இருக்கிறது என்பதே இதற்கான அறிவியல் காரணம். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
கை கழுவும் தினம்
அக்டோபர் 15 உலகக் கைகழுவும் தினம்
2019 ஆம் ஆண்டு - அதுதான் சென்ற ஆண்டு - அக்டோபர் 15-ஆம் தேதி நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்திருப்போம் ? எத்தனை பேர் பொருட்படுத்தியிருப்போம் ?அதெல்லாம் இருக்கட்டும் , இதுக்கெல்லாம் உலக தினமா என்று சிலர் நக்கலாகவும் பேசியிருப்பார்களே ! உலக் கைகழுவும் தினம் எல்லா தினங்களையும் போல கடந்து போயிருக்கும் . இது குழந்தைகளுக்கு நேர்ந்துவிடப்பட்டதுபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் கடைப்பிடித்திருப்பார்கள். இது படங்கள் ஆகி ஊடகங்களுக்குப் பயன்பட்டிருக்கும் . உலகக் கைகழுவும் தினம் 2008 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது . " நமது கைகள் - நமது எதிர்காலம் " என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த தினம் ஒவ்வொரு ஆண்டுக்கென்று தனியான மையப்பொருளையும் கொண்டுள்ளது . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு மூச்சுவிடுவதில் சிரமத்தையும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும் கிருமிகள்தான் காரணம் ; இவையே நிமோனியா காய்ச்சலை உருவாக்கி இறப்பை ஏற்படுத்துகின்றன. இதனைத் தடுக்க சிறார்களிடம் கை தூய்மை என்பதைத் தொடர் பழக்கம் ஆக்குவதுதான் உலகக் கைகழுவும் தினத்தின் நோக்கமாகும் . இந்தப் பழக்கத்தால் 25 முதல் 50 சதவீதம் இறப்பு தவிர்க்கப்படும் என மதிப்பிடப்பட்டது 2014ல் இந்தப் பழக்கத்தின் முக்கியத்துவம் எபோலா வைரஸை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்பட்டது . ஆறு ஆண்டுகளுக்குப்பின் இப்போது எல்லோருக்கும் பொதுவாக சோப்பு போட்டுக் கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றி சொல்லப்படுகிறது.
சோப்பு போட்டு கை கழுவுவது தூய்மைக்காக மட்டுமல்ல ; ஃப்ளு வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மற்றவர்மேல் படும்போது தொற்று ஏற்படும் . அதுமட்டுமல்ல தொற்றுள்ளவர் உமிழும் எச்சிலிலும் கிருமி வெளியேறி சிறிது நேரம் உயிர்ப்புடன் இருக்கும். இதுவும்கூட தொற்றுக்குக் காரணமாகும் . வைரசால் பாதிக்கப்பட்டிருப்பவர் மூக்கையையோ வாயையோ தொட்டபின் ஒரு பொருளைத் தொடலாம் ; மற்றொரு நபரைத் தொடலாம் . கண்ணுக்குப் புலப்படாத அந்தக் கிருமிகள் தொற்றியிருக்கும் இடத்தையோ , பொருளையோ , நபரையோ மற்றொருவர் தொட்டு மூக்கையும் வாயையும் தொடும்போது உடலுக்குள் அதனை ஊடுருவ வழிவிட்டு விடுகிறார் . இந்த சங்கிலித் தொடரை அறுத்து வைரஸ் தொற்றிலிருந்து விடுபட கை கழுவுதல் அவசியம் .
கவனிக்க வேண்டிய இன்னொன்று. ஃப்ளு வைரஸ் கிருமிகளில் நோய்த்தொற்று விகிதம் 0.3 என இருக்கும் நிலையில் கொரோனா வைரஸின் நோய்த் தொற்று விகிதம் 2 . 3 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பரவும் வேகம் எட்டு மடங்கு அதிகம் என்பது தெரியும்.
இந்த வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் போனால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் . இதனைத் தடுக்கவே சோப்பு போட்டு முகம் , கைகள்கழுவி தூய்மையாக இருக்க வலியுறுத்துகிறார்கள். பேரழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான காரணிகளில் ஒன்றாக சோப் விளங்குகிறது என்றால் , அந்த சோப் பற்றிய புனைவுகளையும் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே !
சாப்போவிலிருந்து சோப்
ரோமனின் ' சாப்போ ' மலையிலிருந்துதான் ' சோப் ' என்ற பெயர் உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த மலைக்கு அப்படி என்ன சிறப்பு ?
இந்த மலையில் விலங்குகள் பலியிடப்படுவது வழக்கம். மழைக்காலத்தில் இவற்றின் கொழுப்பும் எரிக்கப்பட்ட சாம்பலும் கலந்து மலையிலிருந்து வழிந்து ' திபெர் ' நதியில் கலக்கும் . இந்தத் தண்ணீரில் துவைத்த துணிகள் மிகவும் தூய்மையாக இருந்தன. சாப்போ மலையின் தூய்மையாக்கும் தண்ணீர் நினைவாக சோப் என்ற பெயர் உருவானதாக சொல்லப்படுகிறது.
பாபிலோனில் புதைபொருள்களை ஆய்வு செய்தபோது சோப்பு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதாகவும் , இதன் காலம் கி.மு. 2800 என்றும் கூறப்படுகிறது . மண்ணால் செய்யப்பட்ட உருளையின் மீதுள்ள எழுத்துக்கள் இந்தப் பொருள் கொழுப்பாலும் சாம்பலாலும் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன என்கின்றனர்.
பைபிளில் இரண்டு இடங்களில் சோப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் , தனிநபர் தூய்மை பற்றி இஸ்ரேலியர்களுக்கு விவரித்த மோசஸ் இதற்கு ' போரித் ' என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். போரித் என்ற சொல்லுக்கான மொழியாக்கம் சோப்பு என்று சொல்லப்படுகிறது. மரக்கட்டைகள் அல்லது தாவரங்களின் சாம்பலையும் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட தூய்மைப்பொருள் என்பதுதான் இதன் அர்த்தம் என்கிறார்கள்.
இயற்கையும் செயற்கையும்
கி.பி . 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்க மருத்துவரான காலென் என்பவர் மருத்துவம் மற்றும் தூய்மை நோக்கத்திற்கு சோப்பைப் பயன்படுத்த பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்பெயினிலும் இத்தாலியிலும் சோப் தயாரிப்பு பரவலாக உருவான கிபி ஏழாம் நூற்றாண்டுவரை வெள்ளாட்டுக் கொழுப்பு மற்றும் பீச் மர சாம்பலால்தான் சோப் தயாரிக்கப்பட்டது .
இதே காலத்தில் பிரான்ஸ் சோப் தயாரிக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கியது. அறுநூறு ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட இந்த நடைமுறைக்கு 1688 ல் பதினான்காம் லூயி காலத்தில்தான் அங்கீகாரம் அளிக்கப்பட்டது .
பிரிட்டனில் சோப்பு தயாரிப்பு கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தொடங்கியது . 1633ல் வெஸ்ட்மினிஸ்டரின் சோப்பு தயாரிப்பாளர்களுக்கு 14 ஆண்டு ஏகபோக உரிமையை மன்னர் முதலாம் சார்லஸ் வழங்கினார். ராணி முதலாம் எலிசபெத் காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட இங்கிலாந்தில் சோப்பின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் தொழிற்சாலைகளும் அதிகரித்தன. இவற்றுக்குக் கட்டுப்பாடுகள்போட்டு வரியும் விதிக்கப்பட்டது . 1853ல் கிளாட்ஸ்டோன் காலத்தில்தான் சோப்பு மீதான வரி ரத்து செய்யப்பட்டது .
இதுவரை இயற்கையான கொழுப்புப் பொருள் , சாம்பல் , விதவிதமான எண்ணெய் கலந்து சோப் தயாரிக்கப்பட்ட நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தவர் பிரான்ஸ் நாட்டின் வேதியியலாளர் நிக்கோலஸ் லெப்லாங்க். இவர் சாதாரண உப்பினை அல்கலி எனும் சோடா பவுடராக மாற்றும் நடைமுறையை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பு 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வேதியியல் நடைமுறையாக இருந்தது . இதே காலகட்டத்தில் தனிநபர் தூய்மையும் சுகாதாரமும் நோய்கள் பரவுவதைக் குறைக்கும் என்று லூயி பாஸ்ச்சர் அறிவித்தார் . இது சோப்புகளின் தேவையை அதிகரிக்கச் செய்தது.
உலகப்போரும் சோப்பும்
முதலாம் உலகப் போரின்போது நாம் இன்று அறிந்திருக்கும் சோப் என்பது வணிகப் பொருளாக மாறியது. போரிட்டோருக்கு ஏற்பட்ட காயங்களை சுத்தம் செய்வதற்கு அதிக அளவில் சோப் தேவைப்பட்டது . ஆனால் தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு.
தேவைகள்தானே விஞ்ஞானத்தின் திறவுகோல் . ஜெர்மன் விஞ்ஞானிகள் புதிய வகையான கூட்டு பொருள்கள் மூலம் சோப் தயாரிக்கும் முறையை உருவாக்கினர் . இதன் மூலம்தான் டிடர்ஜென்ட் பிறந்தது . இவை பெட்ரோலிய பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டன.
வணிகப் பயன்பாட்டுக்கான சோப்புகள் பிரம்மாண்டமான மூன்றடுக்கு கெட்டில்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. இதில் ஆயிரம் பவுண்டு எடையுள்ள சோப்புகளைத் தயாரிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டது . இதில் மாற்றம் கொண்டு வந்தது பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் . இது தொடர்ச்சியான நடைமுறை என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒரே நாளில் பல ஆயிரம் பவுண்டு எடை உள்ள சோப்புகள் தயாரிக்கப்பட்டன.
இருப்பினும் ஆரம்பத்தில் இயற்கை கிளிசரின் - கொழுப்பு பொருளில் காரம் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள் - சேர்க்கப்பட்டதால் சோப்பைப் பயன்படுத்தும்போது தோலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டது . பின்னர் செயற்கை நீர்மப்பொருள் சேர்க்கப்பட்டதால் தோலில் வறட்டுத்தன்மை ஏற்படாமல் வழுவழுப்பாக இருக்கச் செய்தது .
இந்தியாவுக்கு எப்போது ?
அதுசரி ! சீயக்காய் , புங்கன் கொட்டை போன்றவற்றைத் தூய்மைக்கான பொருள்களாகப் பயன்படுத்திய இந்தியாவுக்கு சோப் அறிமுகம் செய்யப்பட்டது எப்போது ?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் லீவர் பிரதர்ஸ் நிறுவனம் சோப்புகளை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தியது . 1897 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் முதன்முதலாக நார்த் ஈஸ்ட் சோப் கம்பெனி நிறுவப்பட்டு இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டது .
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் முதலாம் உலகப்போரில் சோப்புகளின் தேவை அதிகரித்தது . இது இந்தியாவிலும் சோப்புக் கம்பெனிகள் உருவாகக் காரணமானது. இதிலும் முதலில் கால் பதித்தது டாடா நிறுவனம்தான். 1930 களில் ஜாம்ஷெட்ஜி டாடாவின் டாடா ஆயில் நிறுவனம் உள்நாட்டிலேயே சோப் தயாரிப்பில் ஈடுபட்டது
பிரிட்டனின் இந்துஸ்தான் யுனிலிவர் என்பதன் துணை நிறுவனமாக இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம்தான் சோப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. பிள்ளைகள் பலருக்குப் பெற்றோர் ஒருவர் என்பது போல , லக்ஸ் , ரெக்சோனா, பியர்ஸ் , டவ் , ப்ரீஸ் , ஹமாம் , லிரில் , லைஃப் பாய் என பல பெயர்களில் உள்ள சோப்புகளை இந்த நிறுவனம்தான் சந்தைப்படுத்துகிறது . இந்திய நிறுவனங்கள் என்று பார்த்தால் சிந்தால் சோப் தயாரிக்கும் கோத்ரேஜ் , மார்கோ சோப் தயாரிக்கும் கல்கத்தா கெமிக்கல் கம்பெனி , சலவை சோப்புகள் தயாரிக்கும் நிர்மா ஆகியவைதான் உள்ளன. எந்தத் தயாரிப்பாக இருந்தாலும் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சோப்புகள் இப்போது கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கும் பயன்படுகிறது . முகத்தையும் கைகளையும் சோப்புப் போட்டுக் கழுவி கொரோனாவை விரட்டுவோம்
- மயிலைபாலு