tamilnadu

img

இந்நாள் டிச. 17 இதற்கு முன்னால்

கி.மு.497 - கிறிஸ்துமசுக்கு முன்னோடி என்று குறிப்பிடப்படும், பண்டைய ரோமானியப் பண்டிகையான சாட்ட(ர்)னேலியா முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. விவசாயம், செல்வம் உள்ளிட்டவற்றுக்கான கிரேக்கக் கடவுளான சாட்ட(ர்)ன்-னுக்கான ஆலயம் திறக்கப்பட்ட கி.மு.497 டிசம்பர் 17இல் ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட இது, பின்னாளில் ஜூலியன் நாட்காட்டியில் ஒவ்வோராண்டும் டிசம்பர் 17இல் தொடங்கி, 23வரை ஒரு வாரம் நடைபெறும் விழாவாகியது. ரோமக் குடியரசு, பின்னர் ரோமப் பேரரசு ஆகியவற்றின் கருவூலமாக சாட்ட(ர்)னின் ஆலயமே விளங்கியது.

பொற்காலம், வெள்ளி, வெண்கலம், வீரம் ஆகியவற்றுக்குப்பின் இரும்புக்காலம் நடைபெறுவதாகக் கூறிய ரோமானிய புராணங்களின்படி, உழைப்பின்றியே மக்களுக்கு எல்லாம் கிடைத்து, மகிழ்ச்சி நிறைந்திருந்த பொற்காலத்தில் சாட்ட(ர்)னின் ஆட்சியே நடைபெற்றதால், அப்படியான காலம் வேண்டும் என்று இவ்விழா கொண்டாடப்பட்டது. அடிப்படையில், விதைப்பு முடிந்ததும், விவசாயக் கடவுளான சாட்ட(ர்)னிடம், சூரியன் முழுமையாக ஒளிவீசி, நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டிக்கொள்கிற விழாதான் இது! இவ்விழாக் காலத்தில், வழக்கமான ரோமானியச் சட்டங்கள் நடைமுறையிலிருக்காது. அங்கு மிகப்பெரிய குற்றமாக இருந்த சூதுகூட இக்காலத்தில் அனுமதிக்கப்படும்.

விழாவுக்காக, சாட்ட(ர்)னேலியாவின் அரசர் என்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது உத்தரவுகள் நிறைவேற்றப்படும். விழாக் காலத்தில், அடிமைகளுக்கு, அவர்களின் உரிமையாளர்கள் சேவைகள் செய்வார்கள். மக்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வார்கள். கிறித்துவின் உண்மையான பிறந்த நாள் தெரியாத நிலையில், கி.பி.4ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை முதலாம் ஜூலியஸ்தான், டிசம்பர் 25இல் கொண்டாடுவதை அறிமுகப்படுத்தினார். சாட்ட(ர்)னேலியா முக்கிய விழாவாக இருந்ததால், மக்களை ஈர்ப்பதற்காக அதையொட்டிய தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 312இல் பேரரசர் கான்ஸ்ட்டாண்ட் டைன் கிறித்துவத்துக்கு மாறியதைத்தொடர்ந்து, சாட்ட(ர்)னேலியாவும், அதைத் தொடர்ந்து கிறிஸ்துமசும் கொண்டாடப்பட்டுள்ளன. சாட்ட(ர்)னேலியாவின் கொண்டாட்டங்களான ஏராளமாகக் குடித்தல், உண்ணுதல், சூதாடுதல் உள்ளிட்டவை, இடைக்கால ஐரோப்பாவில், கிறிஸ்துமசின்போது செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பிற்கால சமூக மாற்றங்களுக்கு ஒவ்வாதவை மறைந்து, பரிசளித்தல் முதலானவை இன்றும் கிறிஸ்துமசின் கூறுகளாகத் தொடர்கின்றன!

அறிவுக்கடல்