புதுதில்லி, ஏப்.24- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களின் மத்திய அரசு அகவிலைப்படியை முடக்கி வைத்திருப்பதற்கும், அடுத்து அளிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினைப் பறிமுதல் செய்திரு ப்பதற்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு, கோவிட்-19 நோயால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கு 2020 ஜனவரியிலிருந்து அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படியையும், எதிர்காலத்தில் 2020 ஜூலை மற்றும் 2021 ஜனவரி ஆகிய தேதிகளில் அளிக்கவேண்டிய அகவிலைப்படி உயர்வைப் பறிமுதல் செய்தும் முடிவெடுத் திருப்பதற்கு, சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. (மத்திய நிதியமைச்சகத்தின் ஆணை எண் 1/1/2020-E-II(B) நாள்: 23-4-2020ஐக் பார்க்க.)
அரசின் வெறித்தனமான நடவடிக்கை
நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள சமூக முடக்கத்தின் விளைவாகக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களும், ஊழியர்களும் ஏன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? கோவிட்-19 தொற்று பரவாது தடுத்திடும் வேலையில் ஊழியர்களின் கணிசமானவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இன்றியமையாப் பணிகள் என்றும் அவசரப் பணிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம், அஞ்சல், பாதுகாப்பு, ரயில்வே போன்ற துறைக ளில் பணியாற்றுவோர் கடுமையாகப் பணி செய்து வருகிறார்கள். இத்தகையதொரு முடிவினை அரசாங்கம் எடுக்கும் சமயத்தில், மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்களையோ, சம்மேளனங்க ளையோ, கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கவலைப்படாது, எதேச்சதிகாரமான முறையில் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.
பெரும் பணக்காரர்களிடம் வசூலித்திடுக
பொருளாதார நெருக்கடியைச் சமா ளிப்பதற்கு மத்திய அரசு, விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்கார வர்க்கத்திடம் அதீதமானமுறையில் குவிந்துள்ள வள ஆதாரங்களைப் பெறு வதற்கு நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும் என்று சிஐடியு வலுவாக வலியுறுத்துகிறது. ஆக்ஸ்பாம் (OXFAM) அறிக்கையின்படி, இந்தியா வில் உள்ள 63 பில்லியனர்கள் (ஒரு பில்லியன் என்பவர் 100 கோடி ரூபாய்க்கு அதிபதியாவார்) நாட்டின் 2018-19 மத்திய பட்ஜெட் தொகையான 24,42,200 கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகமாக வைத்திருக்கிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் உயர் 10 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 77 சதவீதத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் உயர் 1 சதவீதத்தினரின் செல்வம், அடித்தட்டில் உள்ள 70 சதவீதத்தினரிடம் இருப்பதைவிட நான்கு மடங்குக்கும் அதிகமாகும்.
இவ்வாறு பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் ஓர் 5 சதவீதத்தை வசூ லித்திட வேண்டும். அநேகமாக இந்த செல் வத்தை அவர்கள் முறைகேடான முறையிலும், ஆட்சியாளர்களின் நேரடி வரி விதிப்புக் கொள்கை களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான அரவணைப்பின் காரணமாகவும் திரட்டியதே யாகும். மத்திய அரசாங்கம் இதனைச் செய்வ தற்குப் பதிலாக, உழைக்கும் மக்களின் ஊதியங்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் கொடூ ரமான முறையில் கை வைத்திருக்கிறது. மேலும் இந்த உரிமை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும், பெரும் வர்த்தகர்கள் / கார்ப்ப ரேட்டுகளின் கொள்ளை லாபத்தை உயர்த்தும் விதத்தில் மேலும் அதிகரிப்பது தொடரும் என்ற போதிலும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கு, 2021 ஜனவரி வரையிலும் சட்டப்படி யாகவும் நியாயமாகவும் வரவேண்டிய அகவிலைப்படி உயர்வினால் ஏற்படும் நிலுவைத் தொகை களைப் பறிமுதல் செய்துள்ள மத்திய அரசின் படு பிற்போக் குத்தனமான முடிவினை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசாங்கம் பிறப் பித்துள்ள அகவிலைப்படி பறிமுதல் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும், மாநில அரசாங் கங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு பல்வேறு அகவிலைப்படி தொகைகளை தொடர்ந்து அளித்திட தேவையான நிதி உதவியினை மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்குச் செய்திட வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
மத்திய அரசின் இந்தப் படுபிற்போக்கு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஒன்றுபட்ட எதிர்த்திட, தொழிற்சங்க இயக்கம் பொதுவாகவும், மத்திய மாநில அரசு ஊழியர் இயக்கங்கள் குறிப்பாகவும் முன்வர வேண்டும் என்றும், சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கோரியுள்ளார்.
வங்கி ஊழியர் சங்கம் கண்டனம்
மத்திய அரசு, தன்ஊழியர்களுக்கும் ஓய்வூதி யர்களுக்கும் அகவிலைப்படியை அளிப்பதை மறுத்திருப்பது நியாயமல்ல என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்தள்ளது. இது மிகவும் தான்தோன்றித்தனமானது என்றும், அநியாயம் என்றும் அது தெரிவித்துள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் அளிப்பதன் அடிப்படையே, அதிகரித்திருக்கும் விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காக, ஊழியர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகையாகும். விலைவாசி உயரும், ஆனால் அகவிலைப்படியை அளிக்கமாட்டோம் என்று கூறி அதனை மறுப்பது அநியாயம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ந.நி.)