மக்களவையில் சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
புதுதில்லி,மார்ச் 12- நாடாளுமன்ற மக்களவையில் வியாழனன்று ரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: இந்த மசோதாவில் எனது கருத்துக்களை முன் வைப்பதற்கு முன் முதலில் தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டிலே இழைக்கப்பட்டிருக்கிற அநீதிக்கு எனது வன்மையான கண்டனங்களை முதலிலே பதிவு செய்துகொள்கிறேன். ஏனென்றால் கடந்த 2006 ஆண்டு முதல் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுமார் 10 புதிய வழித்தடங்களுக்கான தேவை சுமார் 12 ஆயிரம் கோடி .ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த பத்து திட்டங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறீர்கள் . எனவே அமைச்சர் இந்த மன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் இந்த பத்து திட்டங்களையும் கைவிட போகிறீர்களா? அல்லது நடத்தப் போகிறீர்களா? இந்த பத்து திட்டங்கள் தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் வளர்ச்சிக்கு, மக்களினு டைய மேம்பாட்டுக்கு மிக அடிப்படையான திட்டங்கள். எனவே தான் மக்களின் பிரதிநிதிகள் மூலம் இதே அவையிலே முன்வைக்கப்பட்டு மத்திய பட்ஜெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் . இந்த திட்டங்களினுடைய நிலை என்ன என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
2 தலைமுறை ஆகும்
அதே போல இதுவரை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி 22 ஆயிரம் கோடி ஆனால் இப்போது நீங்கள் ஒதுக்கி இருப்பது வெறும் 1800 கோடி மட்டுமே . அதாவது வெறும் 5 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கி இருக்கிறீர்கள். அப்படி என்றால் இப்போது தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ரயில்வே திட்டங்கள் முடிவடைய சுமார் இரண்டு தலைமுறை ஆகும். இதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்ற கேள்வியும் நான் கேட்க விரும்புகிறேன்.
3 திட்டங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய்?
அதேபோல தமிழ்நாட்டுக்கு புதிதாக காட்பாடி முதல் விழுப்புரம் , சேலம் - கரூர் -திண்டுக்கல் , ஈரோடு - கரூர் ஆகிய மூன்று திட்டங்களுக்கு 389 கிலோமீட்டர் ரூ.3851 கோடியில் இரட்டை வழிப்பாதைக்கான புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு இருக் கிறது. அவற்றை நான் வரவேற்கிறேன் ;ஆனால் இந்த திட்டங்களுக்கு நிதி உதவி தொகை தலா ஆயிரம் ரூபாய் வீதம் 3000 ரூபாய் மட்டுமே . இது புதிய வழித்தடம் அல்ல இரட்டை வழிப்பாதை ;எனவே நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனை யும் இதில் இல்லை. அப்படி என்றால் வெறும் 3000 ரூபாய் மட்டும் ஏன் ஒதுக்கி இருக்கிறீர்கள்? பெயர் அளவுக்கு கண்துடைப்புக்கு திட்டத்தை அறிவிக்கிற ஒரு நோக்கம் இருக்கிறதா? என்ற கேள்வியை இந்த மன்றத்தில் நான் எழுப்ப விரும்புகிறேன் . அதேபோல மதுரை - கன்னியாகுமரி இந்த இரட்டை வழிப்பாதைக்கும் இந்த ஆண்டு நீங்கள் ஒதுக்கி இருப்பதை சேர்த்து 60 சதவீதம் தான் ஒதுக்கி இருக்கிறீர்கள் ; மீதம் 40 சதவீதத்தை எப்போது ஒதுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியும் இங்கே எழுப்ப விரும்பு கிறேன்.
தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு உதவுமா?
அதேபோல தனியார்மயம் என்பது இரயில்வே துறையில் ஏறக்குறைய அடுத்த 5 ஆண்டுகளில் 500 பயணிகள் ரயில் தனியார் மயமாக்கப்படும். இப்போது 150 ரயில்கள் 100 வழித்தடங்கள் என்று அறிவித்திருக்கிறீர்கள். இது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடியும். இன்னும் குறிப்பாக சொல்வதாக இருந்தால் நிதியமைச்சர் தன்னுடைய உரையில் விவசாய விளைபொருட்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கு “கிசான் எக்ஸ்பிரஸ்” என்று குறிப்பிட்டார். ஆனால் அதனையும் தனியாருக்கு அறிவித்திருக்கிறீர்கள்; அப்படி என்றால் அரசாங்கமே விவசாயிகளின் மீது அக்கறை இல்லாத போது, எந்த தனியார் நிறுவனம் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு இந்த ரயிலை லாப நோக்கம் இல்லாமல் இயக்கும். அல்லது மிகப் பெரிய விவசாயிகளின் நலனோடு இந்த ரயிலை இயக்கும் ? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
அதேபோல பாதுகாப்புக்கு மிக முக்கியமாக 4,500 கிலோ மீட்டர் தண்டவாளங்கள் ஒவ்வொரு வருடமும் பழுதடைகின்றன. ஆனால் நீங்கள் இப்போது ஒதுக்கிய நிதி வெறும் மூவாயிரத்து ஐநூறு கிலோ மீட்டருக்கு மட்டுமே. இது பாதுகாப்பை ஒரு பெரிய கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதேபோல 2022ல் 100ரூ மின்மயம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அப்படியானால் இந்த ஆண்டு 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு நீங்கள் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் . ஆனால் இப்போது ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கான நிதி மட்டுமே
தாம்பரம் தனியார்மய முனையமா?
அதே போல தனியார்மய த்தில் மிக முக்கியமாக தென்னக ரயில்வேயில் 11 இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதாவது தாம்பரத்தை முழுமையாக தனியார் மயத்தினுடைய முனையமாக மாற்றுகிற ஒரு முயற்சியில் இருக்கிறது. இதை வன்மையாக நாங்கள் கண்டிக் கிறோம். அதேபோல கோவையில் இருந்து மங்களூருக்கு இயக்கப்பட இருக்கிற தேஜஸ் இரயிலை தனியாருக்கு விடுவதாக இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது. இதுவும் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல ஐசிஎப் உள்ளிட்டு ஏறக்குறைய 8 உற்பத்தி நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்குகிற அறிவிப்பாக மொத்த ரயில்வேயையும் தனியாருக்கு தாரைவார்க்கிற அறிவிப்பாக இருக்கிறது. எனவே இவற்றை அரசு கைவிட வேண்டும்.