tamilnadu

img

புரட்சி நீடுழி வாழ்க... முதல்முறையாக முழக்கம் - முசாபர் அகமது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்  -..நேற்றைய தொடர்ச்சி

1927ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல பகுதிகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் துவங்கின. 1928-ல் இந்தப் போராட்டம் வலிமை பெற்று விரிந்தளவில் பற்றிப் படர்ந்தது. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமல்லர், தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் உறுப்பினர்களும் பரந்த அளவில் உணர்வுப்பூர்வமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமல்ல, அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் சொற்பொழிவுகள் நடந்தன. பம்பாயிலும், வங்கத்தில் சில இடங்களிலும் தொழிலாளர் மத்தியில் நமது தலைமை வலிமைப்படுத்தப்பட்டது. 1928-ல் தொழிலாளர் போராட்டங்களின் விளைவினால் தொழிற்சங்க இயக்கம் போராட்ட வலிமை படைத்த புதியதொரு வடிவத்தைப் பெற்றது. இந்த இயக்கத்தின் தன்மை முற்றிலும் புதியதாக இருந்தது. 1928-ல் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வழியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலிமை கொண்ட கட்சியாக ஆக்குவதற்கு ஏற்றதொரு மகத்தான சந்தர்ப்பம் கிட்டியது. தொழிலாளர்களிடையே இருந்த புரட்சிகரமான ஒரு பகுதியினர் கட்சியில் சேருவதற்கு இச்சந்தர்ப்பம் இடமளித்தது. 

முதல் முழக்கம்  

    1928-ல் நடந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்களிடையில் பொதுவாக செல்வாக்கைப் பெறவும் முடிந்தது. அவர்களில் ஏராளமானவர்கள் கட்சிக்கு வருவதற்குத்தயாராயினர். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், எங்களைக் கடுமையாகத் தாக்குவதற்காக தனது ஆயுதங்களை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. சட்டமன்றத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் வந்தபோது அதன் உட்பொருள் எங்களுக்குப் புரிந்தது. அந்தக் காலத்தில் தலைமறைவாகச் செயல்படுவதற்கு தேவையான யாதொரு ஏற்பாடும் எங்களிடம் இருக்கவில்லை. இக்காலத்தில்தான் பம்பாயில் எஸ்.வி. தேஷ்பாண்டேயும் பி.டி.ரணதிவேயும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.  பி.டி.ரணதிவே பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற மாணவராய்விளங்கினார். அவருக்கு எம்ஏ. பொருளியலில் முதல் மார்க் கிடைத்தது. டாக்டர் கங்காதர் அதிகாரி, அவரது சிற்றன்னை மகன் ஆவார். டாக்டர் அதிகாரியிடமிருந்து உத்வேகம் பெற்ற ரணதிவே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கவரப்பட்டார்.

1929 பிப்ரவரியில் சைமன் கமிஷனுக்கு எதிராகப் பெரியதொரு  ஊர்வலம் நடத்துவதற்கு நாங்கள் கல்கத்தாவில் இந்திய தேசியக்காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தோம். எங்கள் சார்பாக பலவகை முழக்கங்களைக் கொண்ட அட்டைகள் ஊர்வலத்தில் தாங்கி வரப்பட்டன. இதுதான் அந்த ஊர்வலத்தில் இருந்த ஒரு சிறப்பு. ‘புரட்சி நீடூழி வாழ்க!’ இந்த முழக்கத்தைத்தான் அந்த ஊர்வலத்தில் நாங்கள் முதன் முறையாக ஒலித்தோம். இதற்குப் பிறகு கல்கத்தாவில் எங்களது கடைசி இயக்கம் கிளைவ் சணல் ஆலையில் நடத்திய வேலை நிறுத்தம்தான். திடீரென மறக்க முடியாத 1929 மார்ச் 20 வந்து சேர்ந்தது.

மீரத் சதிவழக்கு

உண்மையில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் 1929 மார்ச் 20.  பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதிர்நோக்கியிருந்த ஆபத்தான தாக்குதல் முடிவில் வந்து சேர்ந்தது அன்றுதான். அன்றைய தினம் மீரத்தில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாரண்டின்படி இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் 31 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெஞ்சமின், ப்ரான்சிஸ், பிராட்லியையும், பிலிப் ஸ்ப்ராட்டுவும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டளைப்படி எங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள். 

முசாபர் அகமது, சாஸுல்ஹுடா, அயோத்யா பிரசாத், சோஹன் சிங்ஜோஷ், மீர் அப்துல் மஜீத், பூரணசந்திர ஜோஷி, ஸ்ரீபாத் அமிர்த டாங்கே, சச்சிதானந்த விஷ்ணு காட்டே, கேசவுநில் ஜோகலேகர், சாந்தாராம் சவலா ராமமிராஜ்கர், ரகுநாத் சிவராம்நிம்ப்கர், காங்காதர் மொரேஸ்வார் அதிகாரி, செளகத் உஸ்மானி ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். பிரதிவாதிகளின் பட்டியலில் கடைசியாக மேலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எச்.எல்.ஹச்சின்ஸன் என்பவரும் ஒருவர். இவர் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராய் இருக்கவில்லை. அமீர் ஹைதர்கான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராய் இருந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ராதாரமன் மித்ரா தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியில் சேருவதென்ற தமது ஆவலைத் தெரிவித்திருந்தார். சிபநாத் பானர்ஜியும், கிஷோரிலால் கோஷூம் யாதொரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. எனினும் அவர்கள் எங்களது ஒரு நல்ல நண்பராக இருந்தனர். ஏனைய பிரதிவாதிகள் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியில் அங்கத்தினராயிருந்தனர். 

வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஓர் அறிக்கை வெளியிடுவதற்கான வாய்ப்பு பிரதிவாதிகளுக்குக் கிடைத்தது. தருகின்ற அறிக்கையானது, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் நாடெங்கும் பரப்புவதற்கு ஏற்ற வகையிலுள்ள ஓர் அறிக்கையாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தோம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு பிரதிவாதியும் ஒவ்வொரு அறிக்கையைத் தந்தனர். கம்யூனிஸ்டுகள், முன்னரே நிச்சயித்தபடி அறிக்கைகள் தந்தனர். தனித்தனியாக அறிக்கைகள் தருவதற்குப் பதிலாக அவர்கள் ஒரு கூட்டறிக்கையாகத் தந்தனர்.  நமது கட்சி உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வாசித்தார்களென்றால் - குறிப்பாக கூட்டறிக்கையை வாசித்தார்களென்றால் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் தாங்கள் கட்சியின் உறுப்பினர்கள் தான் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். 

... தொடரும்