புதுதில்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், முன்பு கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் கூறியுள்ளார். திடீரென உள்ளே புகுந்து வைக்கப்பட்ட சிலைகள் மட்டுமே ஆதாரமாகி விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.அயோத்தியில் இருந்த 400 ஆண்டு பழமையான பாபர் மசூதியை, கடந்த 1992-ஆம் ஆண்டு சங்-பரிவாரங்கள் இடித்துத் தரைமட்டமாக்கின. மசூதி இருந்த 2.77 ஏக்கர்
நிலத்திற்கும் தற்போது உரிமை கொண்டாடி வருகின்றன.
இதுதொடர்பாக, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய3 பிரிவினருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.இந்து அமைப்புக்களின் வாதங்கள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், சன்னிவக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண், திங்களன்று தனது வாதத்தில் எடுத்துரைத்ததாவது:“இந்த நீதிமன்றத்தில் இந்துக்களின் நம்பிக்கை குறித்து வாதங்களை வைத்துவருகிறார்கள். ராமர் பிறந்த இடம், ராமர்கோவில் இருந்த இடம் என்று இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வாதங் களை வைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரமே இல்லை.
இந்த வழக்கு எதன் அடிப்படையில் நடக்கிறது? ராமர் அங்குதான் பிறந்தார் என்பதை எப்படி இவர்கள் வரலாற்று ரீதியாக நிரூபிப்பார்கள்? எப்படி அவர்களால் உறுதியான சாட்சியங்களை வழங்க முடியும்? மசூதியில் ஒரே ஒரு மயில் சிலையும், தாமரை சிலையும் கிடைத்தால் அது இந்து கோவிலா? இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன்பு நாம் வைக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்த இடத்தில் ஒருகோவில் இருந்ததா? அங்கு ஒரு மசூதியைகட்டுவதற்காக அந்த கோவில் இடிக்கப்பட் டுள்ளதா? என்பது தான்.வேதகாலத்தில் கோவில்கள் எதுவும்இல்லை, மடங்கள் இல்லை. சிலை வழிபாடுகளும் கிடையாது. மத நிறுவனங்கள் புத்தருடைய காலத்தில் தான் வந்தன. ஆனால் சிலை வழிபாடு எப்போது தொடங்கியது என்
பதை உறுதியாக கூறமுடியாது. பிரகாரம் வலம் வருவது என்பது ஒரு வழிபாட்டு முறையே தவிர அது எந்த வகையிலும் ஆதாரம் ஆகாது. இந்தியாவுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் அந்த இடத்தில் மசூதி இருந்ததாக எங்கும் கூறவில்லை என்று வாதம் வைக் கப்படுகிறது. மார்கோ போலோகூடத்தான் சீனப்பெருஞ்சுவர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. சீனப் பெருஞ்சுவர் இல்லை என்றாகி விடுமா? நாம் முதிர்ச்சியற்ற வரலாற்றுஆசிரியர்களின் கருத்துகளை எடுத்துக் கொள்ள முடியாது.நான் 1828-ல் இருந்து வாதங்களை தொடங்க நீங்கள் உத்தரவு பிறப்பித்தால் என்னால் அந்த இடத்தில் மசூதி இருந்தது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நிறுவமுடியும்.சிவில் வழக்கில் சரித்திரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வாதங்களுக்கு இடமில்லை. இதுதொடர்பாக பல தீர்ப்புகள் உள்ளன. சரித்திரம் என்று கூறும் இதே நபர்கள் தான், 1934-இல் இருந்து தங்கள் கண்முன் இருந்த ஆதாரங்களை மறந்துவிட்டார்கள். பாபர் மசூதி இருந்த ஆதாரத்தையே மறந்து விட்டனர்.
இங்கிருந்த மசூதி வெறும் இடத்தில் கட்டப்பட்டது. மசூதி கட்டப்பட்ட நேரத்தில் அந்தநிலத்தில் எதுவுமே இல்லை. அங்கு தரையில்எதுவுமே காணப்படவில்லை. இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறோம். இங்கு மசூதி கட்டப்பட்ட நேரத்தில் எந்த இந்து கோவிலும் இல்லை.இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இந்தியாவின் முகமாக இருக்கும். ஏனெனில் இந்தியா மதச்சார்பற்ற நாடு. அதன் முகத்தை காக்க வேண்டும் என்றால், நீதிமன்றம் சரியான முடிவை எடுக்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் முன்பு, உச்ச நீதிமன்றம் அதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கு இந்தியாவின் எதிர்காலம்தொடர்பானது. நாம் இந்திய அரசியலமைப்புச் சட்ட ரீதியாக இதை விசாரிக்க வேண்டும். நீதித்துறையில் நாம் கடைப்பிடிக்கும் சட்டம் வேதத்தின் அடிப்படையிலான சட்டம் அல்ல. இந்தியாவில் சட்ட நடைமுறைகள் 1858-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்து விட்டன.இவ்வாறு ராஜீவ் தவான் வாதங்களை வைத்துள்ளார்.