நாமக்கல்,மே 24- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்றும் தட்கல் முறை மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படாது என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதி யில் மின்துறை உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தை மின்துறை அமைச்சர் தங்கமணி ஞாயிறன்று திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் கொள்கை. தட்கல் முறை மின் இணைப்புக்கு மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், அதற்கும் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கூறிவிட்டார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டதாக வந்த செய்தி தவறானது என்று அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.