சீர்காழி, ஆக.24- சீர்காழி அருகே பச்சை பெருமாநல்லூரிலிருந்து மத்தலமுடையான் செல்லும் இரண்டு கிமீ தூர தார்ச் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பச்சை பெருமாநல்லூரிலிருந்து மத்தலமுடையான் செல்லும் இரண்டு கிமீ தூர தார்ச் சாலை கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக மேம்படுத்தவில்லை. இதனால் சாலையில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சிதறிக் கிடக்கின்றன. இதனால் சீர்காழி ஆர்ப்பாக்கம், கொள்ளிடம் ஓதவந்தான்குடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சிதம்பரம் மற்றும் சீர்காழி பகுதிகளுக்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பச்சை பெருமாநல்லூரிலிருந்து, மத்தலமுடையான் செல்லும் 2 கிமீ தூர தார்ச் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.