tamilnadu

img

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடியில் கூடாரம் அமைக்கும் பணி

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடியில் கூடாரம் அமைக்கும் பணி

நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடியில் கூடாரம் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவாளை மலர் வணிக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கூடாரத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கென பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அறிவித்து, நிதி ஒதுக்கீடு  செய்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற தோவாளை மலர் சந்தையினை மேம்படுத்தும் வகையிலும், மலர்கள் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கை யினை நிறைவேற்றும் வகையிலும், பாதுகாப்பு தன்மையுடன் மலர்களை விற்பனை செய்ய  தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதியின் கீழ் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மலர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், நுகர்வோர்களின் வசதிக்காக மழை மற்றும் வெயில் காலங்களில் மலர் வணிகம் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு இந்த  மேற்கூரை  மிகவும் அவசியம். மேற்கூரை அமைப்பதன் வாயிலாக மலர்கள் வீணாகாமல், பாதுகாக்கப்படுவதோடு, மழைக்காலங்களில் சேறு சகதிகளிலிருந்து வியாபாரிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாக்கும்” என அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து  பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில்  தோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ்  தோவாளை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆவின் பொது மேலாளர் மகேஷ்வரி, துணை பதிவாளர் சைமன் சார்லஸ், ஆவின்  மேலாளர் ஷீபா அலெக்ஸ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.