சென்னை, ஜூன் 19- சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது. இதனிடையே, சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏடிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதேநேரம், ‘சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கு விசாரணை நடந்து வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும்’ என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற பரிந்துரைத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நேரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது. மீண்டும் விசாரணைத் தொடங்கிய நிலையில், ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற தமிழக அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டது.