படமெடுத்து ஆடுது சனாதன விஷப்பாம்பு
பெரியார் தடியெடுத்து புறப்படுக இக்கணமே!
‘தமிழ் தமிழர் தமிழ்நாடு’ தனிவார்ப்பென –அவர்
மண்டையில் உறைக்கவே ஓங்கிப் பறைகொட்டுக!
கதிரவனுக்கு நன்றி சொல்வோம் ; உயிர்வளர்க்கும்
உழவருக்கு நன்றி சொல்வோம் ; இயற்கைக்கு இனிதே
மகிழ்ந்து நன்றி சொல்வோம்; மாட்டையும் மறக்காமல்
மதித்து உவந்து கொண்டாடுவோம் ; உழைப்பின் வெற்றி!
வள்ளுவரே எம் முன்னோடி ;
மானுடத்தின் குறியீடு;
காவிக்கரையான் அரிக்கமுடியா அறிவுப்
பெருநெருப்பு;
சாதி மத வெறி அதில் வெந்து பொடி சாம்பலாகட்டும் !
சனாதனப் பீடையை போகி கொளுத்திக் கொண்டாடுக!
மானுடசத்ரு மநுவை எரித்துச் சமத்துவப் பொங்கலிடுக!
உழவைத் தொழிலை உச்சியில் வைத்துக் கொண்டாடுக!
கல்விக்கு கரையில்லை கற்றோங்கி தமிழனென்று நின்றாடுக!
வெள்ள அன்பால் மானுடசமுத்திரம் நாமெனக் கூவிக் கொண்டாடுக!
-சு.பொ.அகத்தியலிங்கம்